எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday, 20 April 2011

ஐயகோ தமிழா!


இதோ இன்னும் நான்கு உயிர்கள். கண்டனங்கள். வழக்கமான பொய்பூச்சு வாக்குறுதிகள் …….. அறிக்கைகள்……….கடிதங்கள்….. தந்திகள்…. எதையும் கானும். அதான் தேர்தல்தான் முடிஞ்சு போச்சே. இந்த பரதேசிங்கள பத்தி யாருக்கு கவலை? அய்யாவுக்கு தேர்தல் கமிஷன் சாக்கு. அம்மாவுக்கு எந்த சாக்கும் தேவையில்லை. யாருக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயமும் இல்லை. யாரையும் கேள்வி கேட்க தமிழனுக்கு நாதியும் இல்லை. மீண்டும் அதே உச்…….அதே மறதிகள். இவையெல்லாம் அந்த ஐநூத்தி சொச்சம் குடும்பங்களை தவிர்த்த ஆறு கோடி தமிழர்களுக்கு பழகிப்போனவை. ஆனால் அந்த குடும்பங்களுக்கு? அவர்களின் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த குடும்பங்களின் வாழ்க்கை என்ன ஆகும்? நமது வீட்டில் நமது தம்பிக்கோ அண்ணனுக்கோ மாமனுக்கோ மச்சானுக்கோ நடந்துவிட்டால் நாம் இப்படியா இருப்போம். மற்றவர்கள் இப்படி இருந்தால்தான் நாம் தாங்கிக்கொள்வோமா?


அப்படி என்ன தவறு இழைத்தார்கள் இவர்கள்? தமிழனாக இந்தியாவில் பிறந்தது ஒன்றுதான் பெருந்தவறாகப்படுகிறது. மயிரு போனதற்கே உசிரு போனமாதிரி துடித்தவர்கள் ஒன்றா இரண்டா  ஐநூத்தி சொச்சம் உசிரு போனபிறகும் மசிரே போச்சுன்னு இருப்பதை என்னவென்று சொல்வது? ஆசையினால் தாண்டி போகிறார்கள் என்று அய்யாவே சொல்லிட்டார். எந்த ஆசையினால்? சிங்களவன் கையால உயிர் போகனும் என்ற ஆசையினாலா? எவனாவது தற்கொலை பண்ணிக்க விரும்பி மீன் பிடிக்க போவானா ஐயா? எல்லாம் அந்த அய்யாவுக்கே வெளிச்சம்!


ஒரு அமெரிக்கனோ பிரச்சுகாரனோ பாதிக்கப்பட்டா அவன் தனது நாட்டை சேர்ந்தவனான்னு பார்க்கறதுதான் அந்த நாட்டு அரசுகளுக்கு வழக்கம். ஆனால் ஒரு இந்தியன் பாதிக்கப்பட்டா அவன் மலையாளியா இந்திக்காரனா அப்படின்னு பார்க்கற வழக்கம் இந்திய அரசுக்கு மட்டும்தான் இருக்குது. பாதிக்கப்பட்டவன் மலையாளியாவோ இந்திக்காரனாவோ இருந்தா அது அமரிக்காவா இருந்தாலும் ஆஸ்திரேலியாவா இருந்தாலும் பாய்ந்து போவார் வெளியுறவு அமைச்சர். சீக்கியனின் மசுர வெட்டினா உசிர குடுத்து கத்துவாறு பிரதமர். ஆனா தமிழனை வீடு தேடிவந்து அடிச்சாலும் கொன்னாலும் கேக்குறதுக்கு நாதியில்லை. அதுமட்டுமில்லை அடிச்சவனுக்கு விருந்தும் இரத்தின கம்பள வரவேற்பும் பூரணகும்ப மரியாதையும்! அடேங்கப்பா எப்பேர் பட்ட நாட்டுல பொறந்திருக்கோம்? 

இந்தியனா அதுவும் ஒரு தமிழனா இந்தியாவுல பொறந்ததுக்கு வெட்கப்படுறேன்! வேதனைப்படுகிறேன்!

பட உதவி : வினவு.காம். நன்றி தோழர்களே!

Thursday, 17 March 2011

காலம் தரும் வாய்ப்பு!


நினைத்தது நடந்தே விட்டது. ஜெயலலிதாவின் தமிழின விரோத கோர முகம் வெளியில் வந்துவிட்டது. திமுக காங்கிரசு குமிடிப்பிடி சண்டையின் முடிவுக்கு ஜெயலலிதா காத்திருந்த போதே பலருக்கு சந்தேகம் வலுத்தது. கம்யூனிஸ்ட்டுகளையும் மதிமுகவையும் காக்கவைத்த போதே வேதாளம் முருங்கை மரம் ஏறுவது புரிந்த்து. நேற்று இரவு அது சந்திக்கு வந்துவிட்டது. ஜெயலலிதா போன்றவர்களுக்கெல்லாம் இது கூடவே பிறந்த சாபம். அவர்கள் ஒரு போதும் நன்றி நினைப்பதில்லை. அவர்கள் வந்த வர்க்கம் அப்படி. ஆதிக்க வர்க்கம். உழைப்பவனின் ரத்தத்தை உறிஞ்சியே வாழம் வர்க்கம். நம்பியவனின் கழுத்தை அறுத்தே பழக்கம். நாமக்கூட அட மாறிட்டாங்களோன்னு கொஞ்ஞ்ஞ்ஞ்சசசம்..... ( நெசமாலுமே கொஞ்சம்தான்) நினைச்சோம். வழக்கம்போல வேதாளம் தன் புத்தியை காட்டிவிட்டது.

19 மாதம் உள்ளே போட்ட பிறகும் வைகோவுக்கு விளங்கவில்லை. எஸ்மா டெஸ்மான்னு போட்டபிறகும் தோழர்களுக்கு உரைக்கவில்லை. விஜயகாந்திற்கு வேறு வழியில்லை. தமிழினத்திற்கும்தான். இது அம்மாவின் தலையை இன்னும் இறுக்கிவிட்டது.

விஜயகாந்திற்கு 41 கொடுத்தவர் வைகோவுக்கு ஒரு 15 கொடுப்பதில் என்ன பெரிய சிரமம். அங்கேதான் அவருக்கு நெருடல். நாளைக்கே ஆட்சிக்கு வந்தால் ஈழம் தமிழன் என்று கத்தி கத்தியே இந்த ஆள் தலைவலியை கூட்டிவிடுவான். காங்கிரசோடு கைகோர்த்து தமிழன் கழுத்தை நெறிக்க முடியாதே. தான் ஆட்சிக்கு வந்தால் பேசுகின்றவன் எதிக்கட்சியாய் இருக்கக்கூடாது. இது எல்லாம் தலையில் முடியில்லாதவனின் யோசனையாய் இருக்கும் அம்மாவுக்கு.

வைகோ செய்த உறுப்படியான காரியம் இதுவரை வாயை திறக்காததே. காலம் இப்போதும் தகர்ந்து போகவில்லை. அது தமிழனுக்கு இன்னொரு பொன்னான வாய்ப்பை வழங்க காத்திருக்கிறது. விஜய காந்திற்கும் ஒதுக்கீட்டில் ஒன்னும் பிரகாசம் இல்லை. கம்யூனிஸ்ட்களுக்கும் அப்படியே. வைகோவுக்கு இல்லவே இல்லை (மானமாவது மிஞ்சியது). இப்போதாவது இவர்கள் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். இவர்கள் சேர்ந்தால் தமிழின விரோதிகள் இல்லாத கூட்டணியாக அது இருக்கும். விஜயகாந்தும் கம்யூனிஸ்ட்டுகளும் ஈழம் விசயத்தில் பாரட்டப்படக்கூடியவர்கள் இல்லைதான். ஆனால் அவர்களிடத்தில் மனிதாபிமானவது இருக்கும். ஜெயலலிதாவையே பொறுத்துக்கொண்ட நமக்கு இவர்களை ஏற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய விடயமில்லை. ஈழ மக்கள் ஆதரவுக்கு இன உணர்வு தேவையில்லை மனிதாபிமானம் இருந்தால் போதும்.

நிதிகளிடம் சிக்கிக்கொண்டிருக்கும் சினிமா உலகத்திற்கும் கேப்டன் ஒரு நல்ல மாற்றுத்தேர்வு. ஜெவிடமும் கருணாநிதியிடமும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது ஒரு மாற்றைத்தரும். நடுநிலையாளர்களுக்கும் இது நல்ல வாய்ப்பைத் தரும். ஆட்சியை பிடிக்க முடியுமா என்பது பதில் சொல்ல சிரம்மான கேள்வி என்றாலும், இப்போது இருக்கும் நிலையிலிருந்து ஒரு படியாவது உயர்ந்த இடத்துக்கு இவர்களை இது இட்டுச்செல்லும். யார் கண்டார்? மக்கள் ஆட்சியையே கொடுக்கலாம். வெண்ணை திரண்டு வருகிறது. தாழியை போட்டு உடைக்காமல் இருந்தால் சரி!
பட உதவி : வினவு.காம். நன்றி தோழர்களுக்கு!
.

Sunday, 6 February 2011

கேக்குறவன் கேணையனா இருந்தா............!


கடந்த சில மாதங்களாக எங்கும் ஸ்பெக்ட்ரம் எதிலும் ஸ்பெக்ட்ரம். இந்த பிரச்சினையை அலசாத சந்துபொந்துகள் இல்லை. இவைகளில் டீக்கடை பென்ச் பாணி அலசல்கள்தான் அதிகம். அதிலும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னா எத்தனை சுழியம் போடனும்? ராசாவுக்கும் தேன்மொழிக்கும் இதுவாமே? அந்தம்மா ராடியா நம்ம ரத்தன் டாட்டாகிட்ட ஏதோ கோடுவேர்டுலலாம் பேசிச்சாமே? போன்ற நவரச கேள்விகள்தான் அதிகம். என்ன பன்னுறது எல்லாத்திலும் நமக்கு ஒரு கிக் தேவைப்படுது. சாதாரண மக்களாவது பரவாயில்லை. தன்னை பெரிய அறிவு ஜீவிகள்னு காட்டிக்கிற கூட்டம் பிடிச்சிகிட்டு தொங்கற விழயம் அதவிட காமெடி. அவங்களுக்கு தலைமை கணக்காயர் கொடுத்திருக்கிற 1,76,000 கோடி இழப்பு என்கிற கணக்கு லாஜிக்கா இல்லையாம். அவர் சொல்ற கணக்குப்படியான பங்குகளின் மதிப்பு எல்லாம் காகிதத்தில்தான் உள்ளதாம். பங்குகளை விற்று வீட்டுக்குள்ள நோட்டை அடிக்கி வைத்தால்தான் அது உண்மையான் மதிப்பு என்கிறார்கள். அப்படியென்றால் நாம் அவ்வப்போது உலக பணக்காரார்கள் வரிசைகள் பத்தி பேசறமே? அவங்கள்ளாம் பணத்தை நோட்டா அடுக்கி வங்கியிலா வச்சிறுக்காங்க? எல்லாம் அவர்களின் நிறுவன பங்குகளின் மதிப்பை கணக்கிட்டுத்தானே சொல்லப்படுது. அப்போது மட்டும் வாயை பொளந்துகிட்டு பார்க்கிறாங்க. அப்பவெல்லாம் இந்த அறிவு ஜீவித்தனம் எங்க போச்சுன்னு தெரியல. அதைவிட பெரிய கொடுமை தெரியுமா? இந்த உலக பணக்காரங்களுக்கெல்லாம் இருக்கிற சொத்து மதிப்ப விட வங்கிகளுக்கு இவங்க கொடுக்கவேண்டிய கடன்தான் அதிகம். சரி அதையெல்லாம் விடுங்க! 


இது எல்லாவிற்றையும்விட மிகக் கொடுமையான விஷயம் இந்த கருணாநிதியும் மன்மோகன்சிங்கும் சோனியாகாந்தியும் விடுகின்ற அறிக்கைகள். மலைமுழுங்கி மகாதேவன்கள் போல இவ்வளவு பணத்தையும் ஆட்டய போட்டதும் இல்லாம மக்களை வடிகட்டின முட்டாள்களாக நினைக்கின்ற இவர்களின் போக்குதான் நம் ரத்தத்தை கொதிக்கவைக்கிறது. கருணாநிதியின் அறிக்கைகளைப் பாருங்கள்.

இராசா இந்தத் (தொலைத் தொடர்புத்) துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை. எளிய மக்களுக்கும் சேல்போனை கொண்டு சென்றதுதான்
”ராஜாவை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.   வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்”

கேக்குறவன் கேணையா இருந்தா எருமைக்கூட ஏரோப்பிளைன் ஓட்டுமாம். இப்படித்தான் இருக்கிறது கருணாநிதியின் அண்மைக்கால அறிக்கைகளை படிக்கும்போது.
ஒரு வாதத்திற்காவது கருணாநிதி சொல்வது போன்று இராசா குற்றமற்றவர் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் இராசாவை கைது செய்வதை இவரால் ஏன் தடுக்கமுடியவில்லை? இராசாவை கைது செய்தது யார்? அமெரிக்காவின் புலனாய்வு பிரிவா? அல்லது பாகிஸ்தானின் புலனாய்வு பிரிவா? நீங்கள் பங்கேற்று ஆட்சிபுரியும் மத்திய அரசின் அங்கமான மத்திய புலனாய்வு பிரிவுதானே? அதுவும் நேற்று வழக்கு போட்டு இன்று கைது செய்தார்களா? இரண்டு ஆண்டுகால விசாரணைக்குப்பின் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியபின்தானே கைது செய்தார்கள்? உங்கள் கூற்றுப்படி நிரபராதியான ஒரு முன்னாள் அமைச்சரையே அநீதியிலிருந்து ஆட்சியாளர்களாகிய உங்களால் காக்கமுடியவில்லையென்றால் இந்த நிலையிலிருக்கும் அப்பாவி மக்களுக்கு என்ன கதி? அப்பழுக்கற்ற உங்கள் கட்சி அமைச்சரின்மீது நடவடிக்கை எடுப்பதை வேடிக்கை பார்க்கும் பிரதமரை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியுடன் ஏன் உறவை ஏன் முறித்துக்கொள்ளவில்லை? மீண்டும் கூட்டணிக்காக அவர்கள் காலில் ஏன் போய் விழுகிறீர்கள்? மன்மோகன் அரசு பதவியேற்றபோது உங்களுக்கு அமைச்சரவையில் வேண்டிய இடங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக டெல்லியை முடக்கிப்போட்ட நீங்கள் இப்போது ஏன் அதை செய்யவில்லை? 

இந்த மாதிரியான முட்டாள்தனமான அறிக்கைகளால் கருணாநிதி யாரையெல்லாம் கேவலப்படுத்துகிறார் தெரியுமா?
- மிகப்பெரிய இந்திய நாட்டின் அடிப்படை ஜனநாயகத்தையும் அதன் அடிப்படை சட்ட திட்டங்களையும்
- மத்திய புலனாய்வு துறையையும் அதன் செயல்பாடுகளையும்
- இந்த பிரச்சினையை விவாதித்த நாடாளுமன்றத்தையும் அதன் உறுப்பினர்களையும்
- கொஞ்சமாவது மனசாட்சியுடன் செயல்படும் பத்திரிக்கையாளர்களை
- இன்றும் ஜனநாயகத்திற்கு உயிர் இருக்கினறது மக்களை உணரவைத்துக்கொண்டிருக்கும் நீதிமன்றங்களையும் அதன் செயல்பாடுகளையும்
- இவற்றிற்கெல்லாம் மேலாக இவர்களை ஓட்டுப் போட்டு தெர்ந்தெடுத்த மக்களை

என்னை கேட்டால் இவரது அறிக்கைகளை வைத்தே இவர்மீது வழக்கு தொடர்ந்து இவரையும் உள்ளே தள்ளவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் இன்னும் கொஞ்சநஞ்சம் நீதி உயிர்ப்போடு உள்ளதாக அர்த்தம்.

‘‘நல்ல நிர்வாகத்தின் ஆணி வேரையே ஊழல் தாக்குகிறது’’
”நாட்டின் புகழை கெடுப்பதாக ஊழல் உள்ளது”
”சர்வதேச அளவில் நமது நாட்டின் புகழை கெடுப்பதாக ஊழல் உள்ளது”

இவைகள் ஏதோ என்னைப் போன்ற கையகலாத பிளாக்கர்கள் எழுதிய வரிகள் இல்லை. சாட்சாத் இந்திய திருநாட்டை கட்டி ஆளும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு பிரதமரின் வார்த்தைகள். ஊழல்வாதிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்துக்கொண்டு, ஊழல்வாதிகளை அமைச்சர்களாக ஆக்கிகொண்டு, ஊழலுக்கு அமைச்சரவையை கூட்டி அனுமதி வழங்கிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் திட்டமிட்டு ஊழல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கும்வரை ஊழல் வழக்கில் சிபிஐய்யின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு மன்மோகன்சிங் இன்று இவ்வாறு விசனப்படுவது எந்த விதத்தில் நியாயம். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவேண்டிய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே ஊழலுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு இப்போது வெட்டியாக மேடையில் முழங்குவது வெட்கக்கேடானது.  

மன்மோகன்சிங்கை விமர்சித்தால் பலருக்கும் கோபம் வருகிறது. அவரை மிஸ்டர் கிளின் என்கிறார்கள். ஆரம்பத்தில் அவரை ஏகத்துக்கும் விமர்சித்த சுப்பிரமணியம்சாமி கூட இப்போது அடக்கி வாசிக்கிறார். ஆனால் என்னை கேட்டால் கருணாநிதியைவிட சோனியாகாந்தியைவிட அதிக விமர்சனத்திற்குரியவர் மன்மோகன்சிங்தான். ஊழல்வாதிகளைவிட மோசமானவர்கள் அவர்களை அடைக்காக்கும் மன்மோகன்சிங் போன்ற மிஸ்டர் கிளின் பிம்பம் கொண்டவர்கள்தான். இவரைப்போன்றவர்களின் பொய்பிம்பங்களுக்குப் பின்னால்தான் சோனியாகாந்தி போன்ற ஊழல்பெருச்சாளிகள் ஓடி மறைந்துகொள்கின்றன. மன்மோகன்சிங் உண்மையில் உண்மையானவர் என்றால் நீதிமன்றம் தலையிடும் முன்னரே இந்த பிரச்சினையில் அவர் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அப்படி அவர் நடவடிக்கை எடுப்பதை தலைமை தடுக்கும் பட்சத்தில் தனது பதவியை உதறி இருக்கவேண்டும். ஊழல் பெருச்சாளிகளை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் வெட்டியாக மேடைகளில் முழங்கி சுயபச்சாதாபம் தேடிக்கொள்வது வெட்கக்கேடானது. வேடிக்கையானது.

Monday, 16 August 2010

ஆக்சுபோர்டு பட்டமும் ஆண்டியப்பன் கோவனமும் !

 

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று நம் ஊர்க்காட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம்ம ஊரு விவசாயிகளுக்கு நல்லாப் பொருந்தும். பாரட்லா படித்த நம் அரசியல்வாதிகளிடம் ஒலிவாங்கி கிடைத்துவிட்டால் போதும் ஒரு விசயத்தை மறக்காமல் கூவி விட்டுப் போவார்கள். அது விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு அவர்களின் முன்னேற்றத்துக்கு நாங்கள் ஆனதை செய்வோம் என்பதுதான். அது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் பட்ட பால பாடம். அதனால் அதை மறக்காமல் ஒவ்வொரு முறையும் கூவி விட்டு செல்வார்கள். அதன் பிறகு விவசாயிகளைப் பற்றி அவர்கள் மறந்தும் கூட நினைப்பதில்லை. இது அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட இரண்டாம் பாடம். ஆம்! விவசாயிகளை நினைத்தால் ஆட்சி நடத்த முடியாது என்பதுதான் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் ப்ட்டிருக்கிறது. மாத்திக்கட்ட கோவனம் கூட இல்லாத விவசாயிக்கும் இவர்கள் பேச்சையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள நேரமோ திருப்பிக்கேட்க சக்தியோ இருப்பதில்லை.

      ஊரை அடித்து உலையில் போடும் ரிலையன்சு சகோதரருக்குள் சக்காளத்தி சண்டை என்றால் கூட பிரதமரே இருக்கின்ற எல்லா வேலையையும் போட்டுவிட்டு சமாதானம் பேச போய்விடுவார். காரணம் அவர்கள் சக்காளத்தி சண்டையினால் பங்கு சந்தை எனும் சூதாட்டம் படுத்துவிடுமாம். அதனால் நாட்டின் பொருளாதாரமே ஆடிப்போய்விடுமாம். ஆனால் ஊருக்கே உணவு தரும் விவசாயின் பிரச்சினைகளை எத்தனை மேடை போட்டுக்கத்தினாலும் கதறினாலும் அவரின் செவிட்டு காதுகளுக்கு அவை கேட்பதே இல்லை. நம் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை விவசாயிகள் என்பவர்கள் ஒரு பிச்சைக்கார கூட்டம். இவர்கள் போடும் கடன் தள்ளுபடி மற்றும் மானியம் போன்ற பிச்சைகளை பொறுக்கிக்கொண்டு ஓட்டுப் போடும் கூட்டம். இது அவர்களுக்கு அமரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் படித்த பொருளாதாரம் சொல்லிக்கொடுத்த பாடம். நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதமே உள்ளத் தொழில் துறையினருக்கு பிரச்சினை என்றால் உடனே அம்பானியையும் ஆசீசு பிரேம்சீயையும் பக்கத்தில் உட்கார வைத்து கூட்டம் போடுவார் நம் பாரதப் பிரதமர். ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் மூலாதாரமான விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டால் கூட அவர்களின் பிரதிநிதிகளை கூப்பிட்டு பேச அவருக்கு தோன்றுவதே இல்லை. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தேர்தல் வந்தால் செலவுக்கு இந்த பஞ்ச பரதேசிக் கூட்டமா பொட்டி கொடுக்கப் போகிறது. நம்ம நாட்டு அரசுகளும் அதன் மந்திரி பிரதானிகளும் விவசாயிகளுக்காகவும் விவசாய தொழிலாளர்களுக்காகவும் கொண்டுவரும் திட்டம் எதுவும் அவர்களுக்குப் முழுமையாகப் போய் சேருவதில்லை என்பது அவர்களுக்கே நன்குத் தெரியும். இத்திட்டங்களின் நோக்கமும் அது அல்ல. இத்திட்டங்கள் அனைத்தும் மேல் மட்டத் தலைவருக்கு கொடிபிடிக்கும் அடி மட்டத்தலைவர்கள் பணம் பார்க்க வேண்டி கொண்டுவரப்பட்டவை. ஆனால் இத்திட்டங்கள் தவறாமல் இவர்களின் ஆட்சியின் சாதனைப்பட்டியலில் இடம் பிடிக்கும். அதையும் நம்பி நாமும் வாக்களித்துவிட்டு வந்துவிடுவோம்.             அண்மையில் குறைந்தப்பட்ச வேலைத்திட்டம் என்ற திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் ஊரகப்பகுதியிலுள்ள விவசாயக் கூலித் தொழிளாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் 90 நாட்கள் நேரடி வேலை தருவதுதான். இதன் மூலம் ஊரக ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரி சுத்தப் ப்டுத்தப்பட திட்டமிட்ப்பட்டன. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் ஏற்கனவே ஊரகப்பகுதிகளில் விவசாய பணிகளைச் செய்வதற்கு கூலித் தொழிளாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் அவர்களுக்கு குறைந்த பட்ச வேலை கொடுக்கிறார்களாம். சரி வேலை கொடுத்தார்கள். கூலியை ஒழுங்காக கொடுத்தார்களா? நாளொன்றுக்கு அரசு நிர்ணயித்து வழங்கியது 80 ரூபாய். ஆனால் தொழிளாளர்களுக்கு வழங்கப்பட்டதோ இதில் பாதிதான். மீதியை இவர்களுக்கு வேலை கொடுத்த ஊராட்சித் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் தார்மீக உரிமையோடு பகிர்ந்து கொண்டார்கள். சரி கூலிதான் இப்படி வேலையாவது ஒழுங்காக நடந்ததா? ஒழுங்காக நடந்திருந்தால் ஒரு வார மழைக்கே நம் மக்கள் இந்த பாடு பட வேண்டியிருக்குமா?

           நம் ஆவர்டு பொருளாதார நிபுணர் முன்னாள் நிதி மந்திரி இந்நாள் உள்துறை ம்ந்திரி 60000 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக்கடன் தள்ளுபடி அறிவித்தார். இதனால் உண்மையிலேயே சிரமப்படும் விவசாயிகள் பயனடைந்தார்களா என்று உங்களுக்கு தெரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள். உண்மை தெரிய வரும். இதில் அதிகம் பயனடைந்தவர்கள் விவசாயத்தைக் காட்டி வேறு தொழிலுக்கு கடன் வாங்கியர்கள்தான். கடன் தள்ளுபடி என்றால் திருப்பி கட்டியவன் கட்டாதவன் அனைவருக்கும் அல்லவா வழங்கியிருக்க வேண்டும். கடினப்பட்டு வாயை வயிற்றைக்கட்டி கடனை திருப்பிக் கட்டியவனுக்கு தள்ளுபடியில்லை. திருப்பிக்கட்டாமல் கல்தா கொடுத்தவனுக்குத்தான் தள்ளுபடி. இந்த கடன் தள்ளுபடியால் விவசாயி பயன் அடைந்தானோ இல்லையோ அவர்களுக்கு உண்மையிலேயே உதவியாக இருந்த கூட்டுறவு வங்கிகள்தான் திவால் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிடம் விவசாயிகள் கடன் கேட்டு சென்றால் மிகப் பெரிய கும்பிடு போடுகிறார்கள். இவர்களின் பொருளாதார நிபுணத்துவத்தின் லட்சனத்தைப் பார்த்தீர்களா?

         எல்லாம் சரி. மேலை நாட்டில் பொருளாதாரம் படித்து விட்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த பொருளாதார நிபுணர்களால் நம் விவசாயிகளுக்கு உதவிதான் செய்ய முடியவில்லை. உபத்திரவமாவது கொடுக்காமல் இருந்தால் தலையெழுத்தே என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் அவன் கட்டியிருக்கும் கந்தைக் கோவனத்தையும் அவிழ்க்கப்பார்க்கிறார்கள். அதைத்தான் நம்மால் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை. பெப்சி கோக் போன்ற அமரிக்க நிறுவனங்கள் மக்களின் உடல் நலத்தை முற்றிலும் கெடுக்கக்கூடிய பானங்களை சொற்ப செலவில் தயாரித்து கொள்ளை லாபத்திற்கு விற்கலாம். 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய சிமண்டை சிண்டிகேட் எனும் கூட்டு சேர்ந்து 300 ரூபாய்க்கு விற்று கூட்டுக் கொள்ளையடிக்கலாம். அதையெல்லாம் தட்டிக்கேட்க இந்த அரசுகளுக்கு யோக்கியதையில்லை. இது எல்லாம் நம் பொருளாதார சூரப்புலிகளின் சீழ் பிடித்த காமாலைக் கண்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியே மக்கள் கத்தி கதறி இவர்களின் செவிட்டு காதில் ஓதினாலும் மேற்படி சிண்டிகேட் கூட்டுக் கொள்ளையர்களிடம் விலையை குறைக்கச் சொல்லி மாறி மாறி கருணை மனு போடுவார்கள். கண்ணுக்கு கண்ணெதிரே நடக்கும் பொருளாதார அட்டூழியங்களை தடுக்க மகாகணம் பொருந்திய இவர்களுக்கு திராணி கிடையாது. ஆனால் நம் விவசாயிகளுக்கோ தான் இரத்த வேர்வை சிந்தி விளைவிக்கும் விவசாய விளைப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை கிடையாது. இந்த சீழ் பிடித்து புரயோடிய அரசின் அதிகாரிகளும் இடைத்தரகர்களும்தான் விவசாயப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். இடையில் இருப்பவர்கள் எல்லாம் கொழுத்து பெருக்க உற்பத்தி செய்த விவசாயிக்கு மிஞ்சியது ஒட்டிய வயிரும் கந்தை கோவணமும்தான். என்னவோ இழவு! இவர்கள் விலையை நிர்ணயம் செய்து தொலையட்டும். அதில் ஒரு நியாயம் இருக்கவேண்டாமா? சென்ற வருடம் 40 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் இந்த வருடம் 55 ரூபாய். ஆனால் சென்ற வருடம் ஒரு டன் கரும்புக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 1036 ரூபாய். இந்த வருடம் 1050 ரூபாய். உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் விற்பனை விலை இப்படி இருந்தால் விவசாயி எப்படி தாக்குப் பிடிக்கமுடியும்? மேலை நாடுகளில் பட்டம் பெற்ற நம் பொருளாதார சூரப்புலிகளுக்கு இந்த கணக்கு புரியாதா? கேட்டால் விவசாய இடு பொருட்களுக்கு மானியம் வழங்குவதால்தான் இப்படி என்கிறார்கள். சரி! மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினார்களா? அதுவும் இல்லை. ஆண்டு ஒன்றிற்கு உர மாணியமாக சுமார் 125000 கோடி அரசால் வழங்கப் படுகிறது. ஆனால் இது உரம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்குத்தான் நேரடியாக வழங்கப்படுகிறது. அவர்களும் ஒன்றுக்கு இரண்டாக உற்பத்திக் கணக்கைக் காட்டி மாணியத்தை கொள்ளையடித்து விடுகிறார்கள். இப்படி ஏன் தலையை சுற்றி மூக்கை தொடவேண்டும்? நேரடியாக விசாயிகளுக்கு மாணியம் கொடுத்தால் என்ன? வேறு எதற்காக நம் மந்திரி பிரதானிகளின் பொட்டி வாங்கும் வேலையை எளிதாக்கத்தான்.

         பயிர் செய்ய ஆற்றில் நீரோ மழையோ இல்லை. நிலத்தடி நீரை எடுக்க மின்சாரமும் தட்டுப்பாடு. களையெடுக்க உழுதுப்போட ஆட்களும் இல்லை. நவீன இயந்திரங்களை வாங்கி விவசாயம் செய்ய வசதியும் இல்லை. இவற்றை எல்லாம் கடந்து தன் சொந்த உழைப்பில் விளைவித்தாலும் விளைப்பொருட்களுக்கு கட்டுப் படியாகும் விளையும் இல்லை. பார்த்தான் விவசாயி இந்த மண்ணையே நம்பியதால்தானே தனக்கு இந்த நிலைமை என்று தன் பிள்ளைகளை எப்பாடு பட்டாவது படிக்க வைத்து பட்டனத்துக்கு அனுப்பி விட்டான். இன்று இரண்டாம் தலைமுறை விவசாயிகளே நாட்டில் இல்லை. விவசாயத்தில் ஈடு பட்டிருக்கும் இந்த ஒரு தலைமுறையும் போய்விட்டால் அப்புறம் சிறு குறு விவசாயிகளை தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். நிலைமை இப்படியே போனால் பாரம்பரிய விவசாயம் எனும் தொழில் நம் நாட்டிலே இல்லாமலே போய்விடும். இதைப் பற்றியெல்லாம் பட்டனத்தில் வாழும் நம் துரைமார்களுக்கு கவலையில்லை. அரிசி மரத்தில் காய்க்குமா செடியில் விளையுமா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. ஏன் என்றால் இன்றுவரை அவர்களுக்கு தேவையானவை பணம் கொடுத்தால் கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது அது எங்கிருந்து வந்தால் அவர்களுக்கென்ன? அதை விளைவித்தவன் பட்டினியாகக் கிடந்தால் அவர்களுக்கென்ன?

           ஆனால் காலம் இவர்களை இப்படியே அனுபவிக்க விட்டுவிடாது. மனிதன் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை அதுதான் அவனுக்கு கற்றுக் கொடுக்கும். சிறு வியாபாரிகள் சிறு தொழில்கள் என்று அனைத்தையும் வின்று விழுங்கிய டாடா பிர்லா ரிலையன்சு போன்ற ஆதிக்க சக்திகளும் பன்னாட்டு பன்னாடைகளும் இன்று சிறு குறு விவசாயிகளையும் விழுங்கக் காத்திருக்கின்றன. நாட்டின் முழு விவசாயமும் இவர்களின் கட்டுப்பாட்டுக்கு போகும் ஆபத்து காத்திருக்கிறது. இதை அறியும் பட்டினத்து துரைமார்கள் இன்னும் ஆனந்தப்படக்கூடும். ஏன் என்றால் ரிலையன்சு பிரசு கடையில் பொருட்கள் இன்னும் விலை குறைவாகக் கிடைக்கக்கூடும் என்று. ஆனால் அப்ப்டியெல்லாம் ஆனந்தப்பட விட்டுவிட மாட்டார்கள் நம் முதலாளிகள். அப்படி ஒரு நிலைமை வந்தால் அன்று அவர்கள் வைத்ததுதான் விலை. இன்று விவசாயப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அரசு அன்று அவர்கள் போடும் ரொட்டித்துண்டுக்கு வாலாட்டிவிட்டு தேமே என்று போய்விடுவார்கள். ஆகவே நம் சிறு குறு விவசாயிகளை காக்கவேண்டியது நம் அவசரக்கடைமை. மனசாட்சி இருக்கும் அரசியல்வாதிகள் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். பொதுமக்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் நாட்டுப் பொருளாதார சூரப்புலிகள் ஆக்சுபோர்டிலும் கேம்பிரிட்சிலும் படித்து விட்டு உலகப் பொருளாதார தேக்க நிலையை போக்க வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் வல்லரசு கணவு வேறு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்த படோபங்கள் அனைத்தையும் ஒரமாய் சுருட்டி வைத்துவிட்டு இந்த சிறு குறு விவசாயிகள் அறுகிப்பொவதை தடுத்து நாட்டின் அடுத்த வேளை கஞ்சிக்கு வழி செய்தால் தேவலாம். கூடிய விரைவில் இந்தியர்களுக்கு சந்திரனில் குடியிருக்க அடுக்ககம் கிடைக்கலாம். ஆனால் பூமியில் குடிப்பதற்கு கஞ்சிதான் கிடைக்கப்பொவதில்லை!

- இது ஒரு மீள்பதிவு

Wednesday, 28 July 2010

THE CAN DO LEADERSHIP - புத்தக வி்மர்சனம்



பொதுவாகவே வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்களுக்கு தமிழ் நாட்டு நடப்புகள் தெரிந்த அளவுக்கு உள்ளூர் நடப்புகள் பற்றி தெரிவதில்லை. அதற்கு முதல் காரணம் மொழி. இரண்டாவது காரணம் ஆர்வமின்மை. குறிப்பாக இந்தோனேசியாவில் மருந்துக்கு கூட ஒரு ஆங்கில தொலைக்காட்சி இல்லை. இருக்கின்ற ஒரே ஒரு ஆங்கில தினசரியைப் படித்துதான் கொஞ்ச நஞ்சம் செய்திகளை தெரிந்து கொள்ள முடியும். அதுவும் இந்த தினசரியின் நடுநிலைமை நம்ம தினமலரை மிஞ்சிவிடும். காசுமீருக்கு போகாமலேயே காசுமீர் பிரச்சினைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்கள். அதற்கு வேறு இங்குள்ள இந்தியர்களும் பாக்கிசுதானியர்களும் அடித்துக்கொள்வார்கள். இதல்லாம் நமக்கு ஒத்துவராது என்பதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரமீடியா புத்தகக்கடையில் ஐக்கியம் ஆகிவிடுவேன். இறக்குமதியான சரக்கு என்பதால் பெரும்பாலான ஆங்கிலப்புத்தகங்களின் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும். உள்ளூர் ஆங்கில பதிப்புகள் கிடைப்பது அபூர்வம். இதனால் மணி கணக்கில் கடையையோ நோண்டிக்கொண்டிருப்பது வழக்கம்.

SBY இந்தோனேசியாவில் என்னை மிகவும் கவர்ந்த அரசியல்வாதி. அவரைப் பற்றி அவ்வப்போது படித்திருக்கிறேன் என்றாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது. இப்போது திரு. SBY அவர்கள் பற்றிய சிறிய அறிமுகம்.

 SBY   என்கின்ற சுசிலோ பம்பாங் யூதயோனோ – இந்தோனேசியாவின் நடப்பு அதிபர். இந்தோனேசியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். அதற்கு முன் அதிபர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடித் தேர்ந்தெடுக்கும் முறையே இருந்தது. 2004 ம் ஆண்டு முதல் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. 2009-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரானுவத்தில் கலோனல் பதவியை வகித்த இவர் பின்னர் முன்னால் அதிபர் மேகாவதி சுகர்னோ புத்திரி அமைச்சரவையில் ஒருங்கிணைப்பு அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு மேகாவதியின் கட்சியிலிருந்து வெளியேறி தனது “சனநாயக கட்சி”யை ( Partai Democratic) ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் அதிபர் பதவியை பிடித்தார்.  

THE CAN DO LEADERSHIP – Inspiring stories from SBY Presidency என்ற இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் அதிபரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான் திரு. தினோ பாத்தி சலால். பல வருடங்கள் வெளிநாடுகளில் தூதரகப்பணி ஆற்றியவர். சிறந்த பேச்சாளர். மேலாண்மை குறித்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர். இந்தோனெசிய கல்வியாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். யூதயோனோ அவர்களின் முதல் ஆட்சிகாலம் முடியும் தருவாயில் எழுதப்பட்ட புத்தகம் இது.

இந்தோனேசிய மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்திருக்கிறார்கள். தெளிவான எளிய ஆங்கில நடையில் இருப்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. மேலாண்மை சம்பந்தமான புத்தகமோ என்ற ஐயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் புத்தகம் முழுக்க முழுக்க யூதோனோ அவர்களின் ஆளுமைப்பற்றியும் அவரது ஆட்சி குறித்துமே விவரிக்கப்படுவதால் ஒரு சுய சரிதை படிக்கின்ற உணர்வே ஏற்ப்படுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆசிரியரின் எழுத்துநடை தோய்வில்லாமல் விறுவிறுப்பாக  செல்கிறது. இடையிடையே சுவையான பல சம்பவங்களை சேர்த்துள்ளதால் படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் செல்கிறது. 435 பக்கங்கள் கொண்ட முழு புத்தகத்தையும் ஒரே வாரத்தில் முடித்துவிட்டேன்.

இந்தோனேசிய போன்ற ரெண்டாம்கெட்டான் நாட்டுக்கு ஒருவர் அதிபராக இருப்பது எத்தனை சிரமம் என்பதை இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். அதே போன்று நாடுகள் மாறினாலும் அரசியல்வாதிகளின் குனங்கள் மட்டும் மாறுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். தினமும் அதிபரின் பெயரில் செய்தித்தாள்களில் அறிக்கைகளை பார்க்கிறோம். தொலைக்காட்சிகளில் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது பிற நாட்டு தலைவர்களை சந்திப்பதையோ பார்க்கிறோம். இது போன்ற அன்றாட சமாச்சாரங்களுக்கு கூட அதிபர் எவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது என்பதை அறிய வரும்போது அவர் மீது ஒரு வித அனுதாபம்தான் மிஞ்சுகிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி அமைச்சரவையை கட்டிகாப்பது எவ்வளவு சிரமமான வேலை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆசிரியருக்கு வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் சர்வதேச அரசியல் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்த அவரது கருத்துக்களையும் ஆங்காங்கே பகிர்ந்து கொள்கிறார். ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும் அமரிக்கா போன்ற வல்லரசுகளுடனும் அவர்களுக்கு முற்றிலும் எதிர்திசையில் இருக்கும் ஈரான் பாலத்தீனம் போன்ற நாடுகளுடனும் உறவுகளை சமன் செய்ய வேண்டிய நிலையையும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். உள்நாட்டு பிரிவினைவாத பிரச்சினைகள் குறித்தும் அண்டை நாடுகளுடனான பிரச்சினைகள் குறித்தும் நன்கு அலசியிருப்பதால் நம்மைப்போன்ற புதியவர்களுக்கு நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் சமா இசுலாமிய போன்ற தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்தியது குறித்த தகவல்கள் இல்லாதது ஏனோ தெரியவில்லை.

ஆச்சே பகுதி சுனாமியால் பாதிக்கப்பட்டபோது யூதயானோ ஆற்றிய பணிகள் குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். புத்தகத்தின் பெயரை “Inspiring Stories from SBY Presidency” என்று மட்டும் வைத்திருக்கலாம். “THE CAN DO LEADERSHIP” என்று சொல்லும் போது மேலாண்மை அல்லது சுய முன்னேற்றம் குறித்த புத்தகமோ என்று பலர் ஒதுக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதிபருக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவர் இந்த புத்தகத்தை எழுதியிருப்பதால் அவரது ஆதரவு பிரச்சாரத்திற்காக எழுதப்பட்டது என்ற வாதம் பரவலாக இருக்கிறது. ஆனால் நம்மை போன்ற புதியவர்களுக்கு இது ஒன்றும் பெரிய குறையாக தெரியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய கருத்துக்களே அதிகம் இருக்கின்றன. இந்தோனேசியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் படிக்கவேண்டிய  புத்தகம் இது என்பது எனது கருத்து. அதேபோல இந்தோனேசிய அரசியல் குறித்து அறிய விரும்பும் எவரும் படிக்கவேண்டிய புத்தகமிது. 

.

Saturday, 24 July 2010

ரத்தம் கொதிக்கிறதா?!!

ழக்கமாக எனக்கு கவிதைகளை படிக்கும் பழக்கம் இல்லை. அவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்பதுதான் அதற்கான முதற்காரணம். ஆனாலும் சில கவிதைகள் முதல்தடவை படிக்கும்போதே மனதில் நின்றுவிடும். அவ்வாறான கவிதைகளுள் ஒன்றுதான் கீழே உள்ளது

சீமான்களை தூக்கிலிடு!

காட்டிக் கொடுக்கூட்டிக் கொடு
கொலை செய் கொள்ளையடி
அதிகாரத்தைக் கைப்பற்று – இதுதான்
அரசியல் அறிச்சுவடி


மக்களை மந்தை களாக்கு
மாண்பு மிகுக்களை மாமாக்களாக்கு
பட்டியில் அடை – மக்களாட்சி
இதுவென்று முரசுகொட்டு

பட்டியிலடைத்த மந்தைகள் கேட்கா
தனைத்தையும் இலவசமாகக் கொடு
தவணையில் கொடு – பிச்சையென்றுரைத்தால்
கொடையென்று சொல்

அன்பு அகிம்சையென்று பசப்பு
பண்பைப் பேணென்றுரைத்து மக்களை
அடித்து அடக்கு – அதுதான்
சட்ட ஒழுங்கென்றுரை

உழைக்கும் மக்களை ஊதாரிகளாக்கு
மதுவாறு ஓடவிட்டு காமக்கிழத்திகளை
வீடுதோரும் ஆடவிடு – பொற்கால
ஆட்சியென்பது இதுவே

நிலமும் நீரும் காற்றும்
ஆகாயமும் பொதுவென்றுரை முன்னேற்றம்
வேண்டுமென கூவு – தரகுக்கூலிக்காக
மாற்றானுக்கு அனைத்தையும் விற்றுவிடு

அந்தப்புரத்தை அதிகார மையமாக்கு
காமத்தின் கழிவில் முளைத்த
காளான் களனைத்தையும் – பட்டத்துக்
குரியவர்களென்று பறைசாற்று

உன் சிம்மாசனத்திற்கு ஆசைப்படும்
வாரிசுகளுக்கு போட்டி வை
மோதவிடு! மோதிவிடு! – பலிகடாவாக்கு
தொண்டனை மட்டும்

போதாதென்றால் காளான்களனைத்தையும் களமிறக்கு
அவர்களுக்குள் மோதட்டும்! மோதட்டும்!
மோதிக்கொண்டே இருக்கட்டும்! – மன்னன் நீதான்
கட்டையில் போகும்வரை


குடும்பத்தை எட்டுத்திக்கும்அனுப்பு கிடைத்ததைச்சுருட்டு
பொதுவுடமை பேசுவோரை பொல்லாப்பாக்கு – பொதுவுடமையின்
குறியீடென் குடும்பமென்றுரை

எதிரியோடு மண்டை நாட்டோடும்
அன்புப் பாராட்டு கேட்டதனைத்தும்
கொடுத்துதவு மகிழ்வோடு – “இறையாண்மை“
இருவருக்கும் இன்றியமையாதது

உன்குடி மக்களை கொன்றொழித்தாலும்
எதிரியோடு கொஞ்சிக் குலாவு
விருந்துண் குதூகலி – அவன்வீசும்
எலும்புத்துண்டை கவ்வு

மெதுவாகக்கடி! நீகடிக்கு மெலும்பு
மானமுள்ள மறவனின் குறுத்
தெலும்பாக இருந்தாலும் – அதுவுமுன்னை
கொல்லும் எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை! செய்கின்றேன்
இனமானம் மொழிமானம் தன்மானமென்று
மக்களை பேசவிடாதே – அத்தனையும்
நீயே பேசு

நல்வித்துக்கள் நாட்டில் அங்கொன்றும்
இங்கொன்றும் வளரத்தான் செய்யும்
அவைகளைகண்டு அஞ்சாதே – அணைத்துப்பார்
இல்லையெனில் அழித்துவிடு

இனமானம் பேசும்நெடு மாறன்களை
நாடுகடத்து சீறும்சீமான்களை தூக்கிலிடு
முழங்கும்நா வைகோடாரிக் – காம்பால்
குத்தி நசுக்கு

மறவன் நீயேகதியென சரணடைந்தால்
விட்டுவைக்காதை அப்போதே கடித்துக்குதறு
குருதிக்கவிச்சை குமட்டினால் – இரண்டுநாழிகை
எதுவுமுண்ணாமல் கடற்கரையில்கிட

பாலகரின் குருதியுனக்கு போதையேற்றும்
அந்தப்புரத்தில் புலவர்கூட்டத்தை பாடவிடு
நடனமாதரை யுன்போதை – தெளியும்வரை
ஆடையவிழ்த்து ஆடவிடு

மானங் கெட்டவர்களே நாட்டில்
நடமாடமுடியு மென்பதை உலகுக்குணர்த்து
கொண்டாடு! கொண்டாடு!

தலைவனென்று கொண்டாடு!

எழுதியவர் திரு. சீ.பிரபாகரன் ( http://seeprabagaran.blogspot.com/2010/07/blog-post.html)

..

Tuesday, 20 July 2010

தமிழனும் யூதனும்!


”எப்பேர்பட்ட வனத்துல போய் மேஞ்சாலும், இனத்துல போயிதான் அடையனும்” இந்த வாசகத்தை நீங்கள் படித்திருக்கலாம். இது அண்ணன் பழமைபேசி அவர்களின் இடுகையில் இருக்கும் வாசகம். இதை விளக்க அவர் ஒரு கதையையும் சொல்லியிருப்பார். இந்த வாசகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டுமானால் நீங்கள் சிறிது நாட்களாவது தமிழகத்தை விட்டு வெளியில் வந்து வாழவேண்டும்.

இந்த அண்ட சராசரத்தில் வாழும் ஒரு உயிர் அமீபாவிலிருந்து ஆறறிவு மனிதன் வரை வாழ்க்கை போராட்டத்தில் பங்கேற்பதற்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அது தன்னை இந்த உலகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை. அதாவது தனது அடையாளத்தை காத்துக்கொள்வது. சுயத்தை இழக்காமல் இருப்பது. ஆங்கிலத்தில் ”அயிடண்டிட்டி” என்று சொல்வார்கள். ஆனால் மனித இனத்தில் மட்டும் இன்று இந்த அடிப்படை விடயம் தகர்ந்து கொண்டு வருகிறது. தாராளமயமாக்கல், உலகச்சந்தை என்றெல்லாம் வந்த பிறகு ஒரு தனிப்பட்ட மொழி, இனம், நாடு சார்ந்த ஒரு சமுதாயம் சாத்தியம்தானா? என்ற கேள்வி இன்று நம் எல்லோருடைய மனத்திலும் இருக்கிறது. இது ஒரு ஆபத்தான நிலை என்பதை நாம் உணரவில்லை. நீங்கள் ஆழ்ந்து பார்த்தால் இந்த தாரளமயமாக்கல் என்பது கீழை நாட்டுமக்களின் சுயத்தை அழித்து மேலை நாட்டு பழக்கவழக்கங்களை அவர்களிடம் வளர்த்து அவர்களை தங்களின் பொருளாதார அடிமைகளாக மாற்றுவதுதானே தவிர கீழை கலாச்சாரத்தை மேற்குலத்துக்கு கொண்டு செல்வதல்ல. நீங்கள்தான் “சட்டி” அணியவேண்டுமே தவிர அவன் கோவனம் அணியப்போவதில்லை. அது தெரியாமல் நாமும் தாரளமயமாக்கலால் சர்வதேச சமத்துவ சமுதாயம் அமையப்பொகிறது என்று மயக்கம் கொண்டு அலைகின்றோம்.

இந்த நிலை நமது தமிழ் சமுதாயத்தையும் விட்டுவைக்கவில்லை. இன்று தமிழ் தமிழினம் தமிழர்கள் தமிழ் கலாச்சாரம் என்று பேசுபவர்களையும் எழுதுபவர்களையும் பழமைவாதிகள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் நினைக்கின்ற போக்கு அதிகரித்து வருகிறது. சக தமிழனை தன் இனம் என்று பெருமையாக பார்க்கின்ற நிலை இன்று இல்லை. நான் சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசிய இலங்கை போன்ற நாடுகளில் பெருமளவு சுற்றியிருக்கிறேன். இந்த எல்லா நாடுகளிலும் இரு விதமான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு சாரார் அந்தந்த நாடுகளை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள். இவர்கள் 18-19ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு வந்து குடியேறியவர்கள். மற்றவர்கள் தமிழ் நாட்டிலிருந்து அங்கு பணி நிமித்தமாக வந்து வாழும் தமிழர்கள். ஆனால் ஒரே நாட்டில் வாழும் இந்த இரு தமிழர்களிடையே இடையே ஒரு விதமான் இடைவெளி இருப்பதை வெளிப்படையாக காணலாம். பெரும்பாலும் இந்த இரு சாராரும் ஒருவருக்கொருவர் கலப்பு கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் இரு சாராருக்குமே மற்றவர் மீது ஒருவித அவநம்பிக்கை உண்டு. சில இடங்களில் இருவருக்குமே தனித்தனியாக கோவில்கள் கூட உண்டு. அதேபோல அமெரிக்காவையோ கனடாவையோ எடுத்துக்கொண்டால் ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் பெரும்பாலும் கலப்பது இல்லை. தாய்த்தமிழகத்திலோ இதைவிட மோசமான ஒரு நிலைமை. நமக்கு சில கிலோமீட்டர் தொலைவில் தம் இனம் பூண்டோடு அழிக்கப்படும் நிலையைக்கூட ஒரு பார்வையாளர்கள் போல கண்டும் காணாமல் இருக்கின்ற நிலை. 

ஆனால் இந்த வேறுபாடுகளை அந்தந்த நாடுகளில் எல்லாம் வாழுகின்ற பிற இந்திய இனத்தினர்களிடம் குறிப்பாக சீக்கியர்கள் அல்லது சிந்திக்களிடம்  கானமுடிவதில்லை. அவர்கள் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒற்றுமையோடு வாழ்கின்றனர். அப்படியானால் நம்மினத்துக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நன்கு சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு காரணம்தான் விளங்கக்கூடும். அது தன் சுயத்தை இழந்த நிலை. அதாவது தனது இனத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அறியாமல் இருப்பது. அல்லது அவை தாழ்வானவை என்கின்ற தவறான மனப்பான்மை கொண்டிருப்பது. இதனால் இளம் தலைமுறையினரிடம் நமது கலாச்சாரம் குறித்த புரிதலோ மொழி குறித்த பெருமிதமோ இல்லை. இதனால் நம் தமிழினம் இருந்தும் இல்லாத இனமாக மாறிக்கொண்டு வருகிறது. நம் இனம் பூண்டோடு அழிவது தடுக்கப்படவேண்டுமென்றால் தமிழர்களின் இந்த மனநிலை மாறவேண்டும்.

எனக்கு யூதர்களை கானும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். அவர்கள் மேல் இருக்கும் பல குற்றச்சாட்டுகளுக்கு அப்பாலும் அவர்களின் இனப்பற்று என்னை சிந்திக்கவைக்கும் இன்று உலகில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய மதங்களின் தாய் வீடான யூத இனம் பல நூற்றாண்டுகள் இந்த உலகில் இருப்பையே தொலைத்துவிட்டிருந்தது. நாட்டை இழந்து மொழியை இழந்து மக்களை இழந்து யூத இனம் என்ற ஒன்று இருந்ததற்கான் தடயங்களே இல்லாமல் இருந்தது. உலக வரலாற்றிலேயே அதிக அளவுக்கு கொடுமைக்க்கு உள்ளாக்கப்பட்ட இனம் யூத இனம்தான். ஒரு காலத்தில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். ஆனால் இன்று ஒரு பீனிக்சு பறவை போன்று சாம்பலில் இருந்து எழுந்து சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறது யூத இனம். உலகில் உள்ள மொழிகளில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் ஒரே வகையில் பாவிக்கப்படும் மொழி யூதர்களின் ஈப்ரு மொழி மட்டுமே.  இட்லர் காலகட்டத்தில் செர்மனியில் ஒரு யூதர் மாட்டிக்கொண்டால் அவரை யூதர் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரே ஒரு கேள்விதான் கேட்பார்களாம். நீ ஒரு யூதனா? என்பதுதான் அது. தான் யூதனில்லை என்று பொய் சொன்னால் தன் உயிர் பிழைக்கும் என்ற நிலையிலும் ஒரு போதும் தான் யூதன் என்பதை விட்டுக்கொடுக்க அவர்கள் முன்வர மாட்டர்களாம். அவர்களின் இந்த இனப்பற்றுதான் யூதர்களை இன்று  வெற்றி பெற்ற சமூகமாக வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இனம் மலை போன்ற தடைகளில் இருந்து மீண்டு வந்ததில் வியப்பேதும் இல்லைதானே? தமிழினம் இவர்களிடம் இருந்தவது பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.  தன் சுயம் என்பது தன் உயிரைவிட மேலானது என்று உணரவேண்டும்.

Monday, 12 July 2010

தமிழன் எனும் கோமாளி!


ஒரு வழியாக தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்து விட்டது. ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும் அனைத்து தளங்களிலும் விவாதங்கள் நடந்து ஓய்ந்துவிட்டன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இன்று தமிழ்ப் பரப்பை ஒரு மோசமான நோய் பீடித்துக்கொண்டுள்ளதை அறிய முடிகிறது. அது மிகப்பெரிய கருத்து பிறழ்வு நோய். அதாவது எந்த ஒரு பொருள் குறித்தும் ஒருவர் வெளியிடும் கருத்தை அதற்கென்று ஒரு அரசியல் சாயம் பூசியே பார்க்கும் நோய். அதுவும் தனக்கு ஆதரவான கருத்தென்றால் அதை நடுநிலையானது என்றும் எதிரான கருத்தென்றால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கருதுவது மட்டும் அல்லாமல் அப்படி ஒரு தோற்றத்தை மற்றவருக்கும் உருவாக்குவது. முன்பு அரசியல்வாதிகளை மட்டும் பாதித்த இந்த நோய் இப்போது படித்தவர்கள், படிக்காதவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட பொது மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் எது நடுநிலையானது எது அரசியல் சாயம் உள்ளது என்று இனங்கான முடியாத அளவுக்கு அனைவரும் குழம்ப்பிப்போய் உள்ளனர். வழக்கம் போல அரசியல்வாதிகள் இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர். 

தமிழைப் படி என்றால் ஆங்கிலம் தெரியாமல் இந்த நவீன உலகில் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். ஈழத்தமிழர்களின் அவலத்தை எழுதினால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளரா என்கிறார்கள். ஈழத்தமிழர்கள் விடயத்தில் கருணாநிதி செய்தது சரியில்லை என்றால் செயலலிதா இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்கிறார்கள். யூதர்களை நாசிக்கள் கொன்றதை உலகின் பேரவலம் என்று விவரிக்கின்ற புத்தகங்கள் தமிழில் பல உண்டு. ஆனால் கூப்பிடும் தூரத்தில் நடந்த இனப்படு கொலையைப் பற்றி தினசரி செய்தித்தாள்கள் கூட எழுதவில்லை. இவையெல்லாம் இந்த நோய் பாதிப்பின் வெளிப்பாடுதான். தமிழைப்படி என்றால் ஆங்கிலம் படிக்காதே என்று பொருள்கொள்வதை நோயைத்தவிர வேறு என்ன என்று புரிந்து கொள்ளமுடியும்.   

தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விவாதங்களுக்கும் இன்று இதே நிலைதான். இன்றைய சூழ்நிலையில் இந்த மாநாடு தேவையா என்றால், செம்மொழி ஆவதற்காக தமிழுக்கு உள்ள தகுதிகளையும், தமிழ் செம்மொழி அமைப்பின் செயல்பாடுகளையும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பெட்னா தமிழ் விழா கொண்டாடும் போது தமிழக அரசு செம்மொழி மாநாடு கொண்டாடக்கூடாதா? என்கிறார்கள். பெட்னாவையும் தமிழக அரசையும் ஒன்றென்று பார்க்கின்ற நிலையை நோயென்பதைத்தவிர வேறென்னவென்று சொல்லுவது.

திடீரென்று இரண்டாயிரத்துபத்தில்தான் தமிழ் செம்மொழி நிலையை அடைந்து விட்டது மாதிரி பேசுகிறார்கள். ஏதோ தமிழுக்கு செம்மொழி நிலையை கருணாநிதி மத்திய அரசிடம் போராடி வாங்கி தந்தது போன்று அவரை கொண்டாடுகின்றனர்.( அமைச்சர் பதவியை பேரம் பேசி வாங்குவது போல). உண்மையில் இவர்கள் சொன்னாலும் சொல்லாமல் போனாலும் கொண்டாடினாலும் கொண்டாடாமல் போனாலும் மத்திய அரசு அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காமல் போனாலும் தமிழ் செம்மொழிதான். தமிழின் செம்மொழித்தகுதியை யாரும் தட்டி பறிக்கவோ மறுக்கவோ முடியாது. மேலும் தமிழ் மொழியின் தன்மையை அங்கீகரிக்கும் தகுதி கூட வேறு எந்த மொழியை சார்ந்தவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில் தமிழ் செம்மொழி ஆனதை யாருக்காக கொண்டாடுகிறோம். நமக்காகவா? அடுத்தவருக்காகவா? நமக்காக என்றால் அதைக்கொண்டாடும் தகுதி நமக்கு இருக்கிறதா? நமது சொந்த தாய் மொழியில் பேசுவதை அவமானமாக கருதுகின்ற நாம் நமது மொழியை செம்மொழி என்று கொண்டாடுவதற்கு தகுதியுள்ளவர்களா?
உண்மையில் நாம் யார்?
-         தமது கையெழுத்தைக்கூட தமிழில் போடாதவர்கள்
-         தமது குழந்தைக்கு தமிழில் பெயர் வைப்பதை அநாகரிமாக கருதுபவர்கள்
-         தமது நிறுவனத்துக்கு கூட தமிழில் பெயர் வைக்காதவர்கள்
-         வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதை கவுரமாக கருதுபவர்கள்
-         தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் பெயரை தமிழிலும் எழுதும் வினோதப்பிறவிகள்
-         கடன் வாங்கி படிக்கவைத்தாலும் ஆங்கில வழி பள்ளியில்தான் பிள்ளைகளை சேர்ப்பேன் என்று அலைபவர்கள்
இப்படிப்பட்ட நாம் தமிழைக்கொண்டாடுவதில் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா? இப்படி மாநாடு போட்டு கொண்டாடுவதால் மட்டும் தமிழை அடுத்தவர்கள் கற்க முன்வந்துவிடுவார்களா? நாமே நம் தாய் மொழியை அங்கீகரிக்காத போது மற்றவர்கள் அங்கீகரித்து என்ன பயன்? தமிழை கற்க வேண்டியவர்கள் நாமா? அடுத்தவர்களா?

மாநாட்டுக்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் வந்ததாம். அதனால் மக்களுக்கு தமிழ்ப்பற்று வளந்துவிட்டதாம். மக்கள் கூட்டம் எங்கு அதிகமாக இருந்தது? அறுதியிட்டு சொல்லுங்கள் ஆய்வரங்கத்திலா? உணவகத்திலா? தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சிக்குக்கூட ஐந்து லட்சம் பேர் வருகிறார்கள். கூட்டம் கூட்டுவதே பெருமையாகிவிடுமா?

கொண்டாடுபவர்கள்தான் பதில் சொல்லவேண்டும்!



பட உதவி : திரு. மு.நா (http://kirukkall.blogspot.com/2008/10/blog-post_29.html) - நன்றி!

Wednesday, 16 June 2010

ராகுல் இளைஞர்களின் விடிவெள்ளியா!


அண்மைக்காலமாக ராகுல் காந்தி பற்றியும் இந்திய இளைஞர்களுக்கான அவரது தீர்க்கதரிசன பார்வைகள் குறித்தும் டிவிட்டர் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாக பார்க்க முடிகிறது. ராகுலை முன்னிலைப் படுத்துவதற்கான வழக்கமான அரசியல் பிரச்சார உத்திகளில் இது ஒன்று என்றாலும், அவை பெரும்பாலும் நடுத்தர வர்க்க இளைஞர்களையே குறிவைத்து நடத்தப்படுவது நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பல படித்த இளைஞர்களே கூட இவர்களின் மகுடிக்கு மயங்குவதை இந்த இளைஞர்கள் பரிமாறிக்கொள்ளும் கருத்துரைகளை படிக்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல அண்மையில் நடந்துமுடிந்த இளைஞர் காங்கிரசு தேர்தல்கள் பற்றிய செய்திகளும் பத்திரிக்கைகளில் பெருமளவு வெளிவந்தன. தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலகளுக்குக் கூட பத்திரிக்கைகள் இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. இத்தேர்தலைகளை ராகுல்காந்தியே நேரில் கண்கானிப்பதாகவும் இந்த தேர்தல்களின் முடிவுகள் கட்சியில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்றும் காங்கிரசுக்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த காரணத்தைச் சொல்லித்தான் பல இளைஞர்களை கட்சியில் சேர்த்ததாகவும் தெரிகிறது. (ஆனால் இந்த தேர்தல்களில் கூட பணநாயகம் கோலோச்சியதும் சனநாயகம் பல்லிளித்ததும் வேறு கதை).

ராகுலும் கல்லூரி கல்லூரியாக ஏறி இளைஞர்களை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கிறார். (எந்த இந்திய அரசியலைப்பு சட்டம் ஒரு கட்சியின் பொது செயலாளர் கல்லூரிக்குச் சென்று ஆள்பிடிப்பதை அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. இந்தியாவில்தான் இதெல்லாம் சாத்தியம்). அது மட்டுமின்றி மேல்தட்டு அரசியல்வாதிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாத கூத்துகளான தலித்துகள் வீட்டில் சப்பாத்தி சாப்பிடுவது தொழிலாளர்களுடன் சேர்ந்து கல் உடைப்பது மண் அள்ளுவது ரயிலில் போவது போன்ற கிளிஷேக்குகளையும் ராகுல் விட்டுவைப்பதில்லை.  

இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக சாமானிய மக்களிடையே அவர் குறித்த  ஒரு மாயையும் அதன் பயனால் ஒரு ஈர்ப்பும் ஏற்ப்பட்டுள்ளதை மறுக்கமுடியவில்லை. ராகுலும் அவர் ஏற்படுத்தும் மாயையும் காங்கிரசு கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறது. இப்படி யாரையாவது காட்டி தனது பலவீனங்களை மறைத்துக்கொள்வதுதான் காலங்காலமாக காங்கிரசுக்கு வழக்கம். ஆனால் அவரை நம்பி அரசியலுக்கு போகும் இளைஞர்களுக்கும் அவரை நம்பி ஓட்டு போடுபவர்களுக்கும் அவர் அனுகூலமாக இருப்பாரா என்பது பெரிய கேள்வி குறிதான்.

அடுத்த உலகப்போரே நீர் ஆதாரங்களின் பற்றாக்குறையினால்தான் வரக்கூடும் என்று பல அறிவிலாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவில் அப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒரே திட்டமான நதி நீர் இணைப்புத்திட்டத்தை உதவாக்கரை திட்டம் என்கிறார் ராகுல். அவரது இந்த கருத்துக்கான வலுவான ஆதாரத்தையோ அல்லது மாற்று திட்டத்தையோ கூட அவர் முன்வைக்கவில்லை. இன்று இந்தியாவில் நிலவும் எந்த முக்கிய பிரச்சினை குறித்தும் அவர் எந்த தெளிவான கருத்தும் தெரிவிப்பதில்லை. இந்த நிலையில் அவர்தான் இந்தியாவின் எதிர்காலம் என்று காங்கிரசுக்காரர்கள் சொல்லுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் தயங்காமல் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார். ஆனால் நடப்பு மக்களவையில் அடியெடுத்து வைத்துள்ள காங்கிரசு இளம் எம்பிக்களின் பட்டியலைப் பார்த்தால் காங்கிரசுக்கட்சி நடுத்தரவர்க்கத்தினர் முன்னேற வாய்ப்புள்ள கட்சி என்று தோன்றவில்லை. பட்டியலை நீங்களே பாருங்கள்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா (காலஞ்சென்ற மாதராவ் சிந்தியாவின் மகன்)
சச்சின் பைலட் (காலஞ்சென்ற ராஜேஷ் பைலட்டின் மகன்)
மிலிந்த் தியோரா (முரளி தியோராவின் மகன்)
சந்தீப் தீக்சிட் (ஷீலா தீட்சித்தின் மகன்)
அசோக் தன்வார் (ராகுல்காந்தியின் நண்பர், டாக்டர் சங்கர்தயாள் சர்மாவின் பேத்தியின் கணவர்)
பன்வர் ஜித்தேந்திரசிங் (மார்வார் ராஜவம்ச வாரிசு)
தீப்பிந்தர் ஹோடா (முதலமைச்சர் ஹுப்பிந்தர்சிங் ஹூடாவின் மகன்)
நவீன் ஜிண்டால் ( ஜிண்டால் குழுமத்தலைவரின் மகன்)
சுருதி செளத்திரி (காலஞ்சென்ற பன்சிலாலின் பேத்தி)
மசூம் நூர் ( சூஜப்பூர் எம்.எல்.ஏ மகள்)
ஹமிதுல்லா சயீது (காலஞ்சென்ற பி எம் சயீதின் மகன்)
மாணிக் தாக்கூர் (ராகுலின் நண்பர்)

இவர்கள் யாரும் காங்கிரசுக்காக கொடி பிடித்தவர்களோ அல்லது சிறை சென்றவர்களோ அல்ல. இவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் படித்தவர்கள். சிலர் எம்பி சீட்டு கிடைத்த பிறகு அவசரமாக நாடு திரும்பியர்கள். இப்படிப் பட்டவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு ராகுல் கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கவேண்டியதில்லை. நட்சத்திர விடுதிகளில் இரவு விருந்து வைத்தால் போதும். இன்னும் அதிகமாக் கூட்டம் சேர்க்கலாம். உண்மை நிலைமை இப்படியிருக்க நடுத்தரவர்க்க இளைஞர்களை இவர் அரசியலுக்கு கூவி கூவி அழைப்பது எதற்கு? இவரைப்போன்ற எசமானர்களுக்கு பல்லக்குத் தூக்கவும் வெற்றுக்கோழம் போடவும் இவர்கள் போடும் எச்சில் கறியை தூக்கிக்கொண்டு ஓடவும்தானா? நாட்டில் பல துடிப்பான லட்சியப் பிடிப்புள்ள சமூக சேவை செய்யும் பல இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை முன்னிலைப்படுத்தாமல் அவர்களுக்கு கட்சியிலோ ஆட்சியிலோ வாய்ப்ப்போ தராமல் மாணவர்களுக்கு வெற்று அரசியல் அழைப்பு விடுப்பது எதற்கு?

இப்படி பகல் வேஷம் போடுபவர்களையும் அவர்களை முன்னிலைப்படுத்தும் வெற்றுக் கோஷங்களையும் கண்டு இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது !

Thursday, 1 April 2010

பூமி நேரம், 60 வருட சனநாயகம் மற்றும் தமிழ்ப்பதிவர் குழுமம்!


சனிக்கிழமை 7 மணிக்கே பிபி-யில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டாள் அலுவலகத்தோழி 8-30க்கு விளக்கை அணைக்கச்சொல்லி. நாமல்லாம் யாரு! வழக்கம் போல 10 மணிக்குத்தான் பிபி-யையே பார்த்தேன். மறுநாள் அலுவலகத்தில் லிப்டிலேயே பார்த்துவிட்டாள். ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க? நீங்க இந்தியாவிலேயே இப்படித்தானா? என்றாள். இந்தியாவில் எங்களுக்கு இந்த சிரமம் எல்லாம் இல்லை. எல்லாத்தையும் அரசே பார்த்துக்கும். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் அவங்களே மின்சாரத்தை நிறுத்திடுவாங்க என்றேன் நான். நான் சொன்னது அவளுக்கு புரிந்தமாதிரிதான் இருந்தது. அவளோட சின்ன கண்களை அவ்வளவு அகலமா விரித்தாள். அதற்குள் என் தளம் வந்துவிட்டது. அவளிடம் இருந்து கழற்றிக்கொண்டேன்.

                        <<<<->>>>
அந்த துணி தட்டிகளை தினமும் போகும் போதும் வரும் போதும் பார்ப்பேன். நான் போகும் வழி முழுக்க அவை இருக்கும். சில நாட்களுக்கு ஒரு முறை அவை மாற்றப்படுவதும் உண்டு. அவற்றில் இருக்கும் கேலிச்சித்திரங்கள் இந்த நாட்டின் குடியரசு தலைவரையும் துணை குடியரசு தலைவரையும் குறிப்பவை என்பது மட்டும் புரியும். ஆனால் வாசகங்கள் சரியாகப் புரியவில்லை. ஒருநாள் உள்ளூர் நண்பருடன் செல்லும்போது அவற்றைப்பற்றி அவரிடம் கேட்டேன். அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட செஞ்சுரி வங்கி பெயில் அவுட் பிரச்சினையில் அவர்கள் இருவரையும் தொடர்புபடுத்தி இந்த கேலிச்சித்திரங்களை மாணவர் அமைப்புகள் வைத்துள்ளன. அதில் உள்ள வாசகங்கள் அவர்களை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டுள்ளன என்றார். நான் போகும் அதே வழியில்தான் தினமும் குடியரசு தலைவர் அலுவலகம் போவாராம். அதனால்தான் அந்த பாதையில் அவற்றை வைத்திருக்கிறார்கள். காவல்துறை எப்படி இவற்றையெல்லாம் இத்தனை நாள் விட்டார்கள்? எங்கள் ஊராக இருந்தால் இந்நேரம் பிரித்து மேய்ந்திருப்பார்கள் என்றேன். அப்படியா! ஏன்? என்றார் அப்பாவியாக. அறுபது ஆண்டுகளாக நாங்கள் கட்டிக்காக்கும் சனநாயகம் அப்படி என்றேன். வேறென்ன சொல்ல?

<<<<-->>>>
அண்மையில் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் குறித்த சர்ச்சைகளை பற்றி படிக்கும் போது வருத்தமாக இருந்தது. இதுக்குப்போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று தோன்றியது. வலைப்பூக்கள் போன்ற கட்டற்ற வெளிகளில் இயங்குபவர்கள் அனைவரையும் கருத்தொற்றுமை என்ற ஒரே நேர்க்கோட்டில் கொண்டுவருவது அவ்வளவு எளிதில்லை. அது தேவையும் இல்லை. இந்த முயற்சியை முன்னெடுப்பவர்கள் இந்த அமைப்பின் நோக்கங்களையும் கொள்கைகளையும் அறிவித்து விட்டு வலை பரப்பில் ஒரு குழுமத்தை ஆரம்பித்து விட்டு மற்றவர்களுக்கு தெரிவித்துவிட்டால் போதும். விருப்பப்பட்டவர்கள் இணைந்த பிறகு, அவர்களுக்கு இடையில் செயல்பாடுகள் மற்றும் விதிகள் குறித்த கருத்தொற்றுமையை ஏற்ப்படுத்தி அதை ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாக மாற்றி இருக்கலாம். நோக்கமும் செயல்பாடும் சரியாக இருந்தால் அனைவரும் தாமாக முன்வந்து இணைவார்கள். பங்களிப்பை செய்வார்கள். அதன் பின் அவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அமைப்பில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாமே! விருப்பம் இல்லாதவர்களைப் பற்றி செயல் வீரர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். ஏன் தேவையில்லாத மன உளைச்சல் கொள்ளவேண்டும்? என்பது அடியேனின் கருத்து. மீண்டும் புத்துணர்ச்சியோடு செயல்வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது அவா!
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

Friday, 8 January 2010

அஞ்சலி!


Friday, 27 November 2009

புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் !

தமிழ் மண்ணுக்கு உயிர் தந்த வேங்கைகளே நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் எதிரிகள் நீங்கள் புதைக்கப்பட்ட தலத்தை அழித்திருக்கலாம் ஆனால் நீங்கள் எங்கள் மனங்களில் பதித்துவிட்ட தடத்தை அழிக்கமுடியாது நீங்கள் செந்நீர் சிந்தி வளப்படத்தியிருக்கிற எங்கள் தேசம் இன்று வரைபடத்தில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனதேசத்தில் இல்லாமல் இல்லை அது உங்கள் கனவு நாங்கள் மெய்ப்படுத்தப்போகும் நனவு! வணங்குகிறோம் இந்நாளில் உங்கள் பாதங்களை! போற்றுகிறோம் உங்கள் ஆத்ம தியாகத்தை! தமிழீழத் தாயகம் அது உலகத் தமிழர்களின் தாகம்! .

Friday, 20 November 2009

வணக்கம் தலிவரே!

நேத்து பேப்பர்ல நம்ம தமிழின தலிவரு மவுனமா அழுதுகிட்டே ஒரு அறிக்க கொடுத்திருந்தாரு. அத படிச்சதிலிருந்து நானும் மவுனமா அழுவவேண்டியதா போச்சுங்க. அவர நினைச்சு இல்லீங்க. நம்ம தமிழனோட தலையெழுத்த நினைச்சு. வெளியில தலைய காட்டவே முடியல. கூட்டாளிங்க எல்லா கன்னா பின்னான்னு சவுண்டு வேற வுடரானுவ. அதனால நம்ம தலிவருக்கெல்லம் கொஞ்சம் அடவைஸ் குடுக்கலாமுன்னு இருக்கேன். ஈழப்பிரச்சினைப் பத்தி நம்ம தலிவருங்க இனிமேல வாயத்தொறக்கமா இருக்கறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா இவங்கெல்லாம் அதப்பத்தி பேசி இனிமே நடக்கப்போறது ஒன்றும் இல்லை. இவங்க வாய பொத்திகினு இருந்தாலாவது குத்துயிரும் குல உயிருமா இருக்கிறவன் நிம்மதியாக செத்தாவது தொலைவான். இவங்களால டெல்லிக்காரனோட பீச்சாங்கை சுண்டு விரல கூட அசைக்க முடியாதுங்கறதுதான் உண்மை. சும்மா பிராண்டுனா இவங்க மெயின் பீசையே அவன் புடுங்கிடுவான். அதுமட்டுமில்ல டெல்லிக்காரன் பாச்சா எல்லாம் சிங்களன் கிட்ட இனிமே பலிக்காது. அவன் இங்கிஷ்காரனையே பீஸ் கட்டி டெரரிஸ்ட ஒடுக்கறத பத்தி அவங்கிட்ட பாடம் படிச்சிட்டுப் போன்னு சொல்லிகிட்டு இருக்கான். அப்ப நம்ம டர்பண் தலைக்கெல்லாம் என்ன நிலைமைன்னு நீங்களே புரிஞ்சுக்குங்க. அமெரிக்கா காரன் கிட்ட பல்லை இளிச்சிகிட்டு காலம் ஓட்டவேண்டிய நெலம டெல்லிக்காரனுக்கு. அமெரிக்காகாரன் என்னடான்னா சீனாக்காரன் கிட்ட பல்லைக் காட்டிக் காலத்தை ஓட்டிகிட்டி இருக்கான். இனிமே சீனாக்காரன் வைச்சதுதான் சட்டம். பாதி தமிழ்க்காரங்க இந்தியாவுல இருக்கறதால சீனாக்காரனும் நமக்கு ஹெல்ப் பண்ண மாட்டான். அதேப்போல நம்ம தமிழக சனங்களுக்கும் ஈழ்ப்பிரச்சினையில் பெருசா ஒன்னும் இண்டரஸ்ட் இல்லை. இதை நான் சொல்லலீங்க. போன எம்பி எலக்‌ஷன்லயே நாம இத நம்ம ரெண்டு கண்ணாலேயே பாத்துட்டோம். தமிழ் நாட்டுல அரசியல் பன்றதுக்கு ஈழப்பிரச்சினை மாதிரி ரிஸ்க்கான பிரச்சினையெல்லாம் இனிமே தேவையே இல்லை. ஒரு நாலாயிரங் கோடி பணமும் நாலு டெலிவிஷன் சேனல்களும் நாலு இலவச திட்டங்களும் இருந்தாலே போதும். இப்பல்லாம் இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. தம்மாத்தூண்டு ஸ்டேட்டுக்கு ரெண்டு வருசம் சிஎம்மா இருந்தவனுக்கெல்லாம் சொந்தமா கப்பலுங்கரான் ப்ளைட்டுங்கறான். இவ்ளோ பெரிய ஸ்டேட்டுக்கு அஞ்சு முறை சிஎம்மா இருந்தவங்களுக்கெல்லாம் இதெல்லாம் கால் தூசு. அதுமட்டுமில்ல நம்ப ராசா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஒரே பால்ல ஒரு லட்சம் கோடி ரன்னெல்லாம் அடிக்கத்தெரியும். இதெல்லாம் டெல்லிக்காரனுக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் அலட்டிக்க வேணாமய்யான்னு தலப்பாட அடிச்சிகிட்டான். ஆனால் நம்ம தலிவருதான் விவரமில்லாமல் உண்ணாவிரதம் வீராவேச உரை அப்படி இப்படி என்று உடம்பை கெடுத்துகிட்டாரு. ஒழுங்காக வேறு வேலைப்பார்த்திருந்தா அந்த பொம்பளைகிட்ட இருந்து இன்னும் இரண்டு தொகுதியையாவது எக்ஸ்ட்ராவா புடுங்கி இருக்கலாம். அனாவசியமா இப்ப பொன்னுக்கு காபினட் போயிடுச்சி. அதனாலதான் சொல்றேன் நம்ம தலிவருங்க எல்லோரும் இந்தப்பிரச்சினைய இனிமே கண்டுக்காம விட்டுட்டா ரொம்ப நல்லது. ஒரு வகையில அந்த மக்களுக்கு நாம செய்யுற பெரிய உதவி இது. அப்படியே ஏதாவது விளம்பரம் வேனுன்னா அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்ல. ராமேஸ்வரத்துக்கோ கன்னியாகுமரிக்கோ போய் அகதி முகாம்ல ரெண்டு கிலோ இலவச அரிசியும் ஒரு காந்தித்தாதா நோட்டும் குடுத்து தள்ளி நின்னு போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டா போதும். அதுவும் முடியலயா நம்ம எருமாவளவன் மாதிரி தலிவருங்கள கூட்டிப்போய் ராச பக்சேவுக்கு பட்டு வேட்டியும் அவன் பொண்டாட்டிக்கு பட்டுப்பொடவையும் போத்தி போட்டோ எடுத்துகிட்டாப் போச்சி. அத வச்சியே நம்ம உடன் பிறப்பு அமெரிக்காவுக்கு விடுதலை பெற்றுந்தந்த ஆபிரகாம் லிங்கனே அப்படீன்னு ஊரு புல்லா போஸ்டர் ஒட்டிடுவான். அப்புறம் என்ன அடுத்த எலக்‌ஷன்லேயும் நீங்கதான் சிஎம் (இருந்தீங்கன்னா). அதை விட்டுட்டு இப்படி மவுனமா அழுவுறேன் சத்தம்போட்டு அழுவுறேன் அப்படீன்னு பீலிங்ஸ் படமெல்லாம் எதுக்கு? அப்புறம் இத்தாலி அம்மாவுக்கு கோபம் வந்திடுச்சின்னா திரும்பவும் தாயே குல தெய்வமே அப்படின்னு இன்னொரு பீலிங்ஸ் படம் காட்டனும். இதெல்லாம் தேவையா? அதே மாதிரி ஒத்துமை அது இதுன்னு நாமெல்லாம் உளரக்கூடாது. நமக்கும் ஒத்துமைக்கும் ஒரு காத தூரம் இருக்கும்போது அடுத்தவங்ககிட்ட இந்த பிலிமெல்லாம் ஓட்டக்கூடாது. காவிரி பிரச்சினையில இருந்து பெரியார் அணை பிரச்சினை வரைக்கும் நம்ம தலிவருங்க காட்டுற ஒத்திமை பத்தி சனங்களுக்கு தெரியாதா? அட ஒரு நல்லவன் சாவுக்காவது தலிவருங்க எல்லாம் ஒன்னு சேந்து போயிருக்கமா? நாமப் போயி ஒத்துமையப் பத்திப் பேசினா அவனவன் வாயாலயா சிரிப்பான்? ஈழத்தில் சகோதர சண்டையை மூட்டி வுட்டதே சூனியக்கார ரா அமைப்புதான் என்று சட்டசபையில் நாமே சொல்லிட்டு இப்போது பழியை இளைச்சவன் மீது போட்டா நம்ம சாயம் வெளுத்தராது? நம்ம வீட்டுச் சகோதர சண்டையில அப்பாவி மக்கள் மூனு பேரை உயிரோடு எரிச்சதயெல்லாம் மறந்துட்டு ஈழத்து சகோதர சண்டையில் செத்தவனுக்கெல்லாம் நீலிக்கண்ணீர் விடப்படாது? அப்புறம் என்னைமாதிரி ஆளுக்கேல்லாம் அது மைண்ட்ல ரி எண்ட்ரி ஆகும். நரிக்கூட்டத்தையும் குரங்கு கூட்டத்தையும் ஒன்னா சேத்துகினு போராடியிருந்தால் சுதந்திரம் கிடைத்திருக்குமாம் தலிவரு சொல்றாரு. என்ன பன்றது இதயம் கணிந்து கண்கள் பனிக்கின்ற டெக்னிக்கெல்லாம் ஈழத்து ஆளுங்களுக்கு தெரியாதே. 2005 –ல தேடிவந்த சனநாயக தீர்வை காலால எட்டி உதச்சிட்டாங்களாம். இதையும் தலிவருதான் சொல்றாரு. நமக்குத்தெரியாம அப்படி என்ன தீர்வு வந்திருக்குமோ தெரியல. ஒருவேலை இவரு குடும்பத்துல தென்மாவட்டங்களையும் வடமாவட்டங்களையும் டிப்பார்ண்ட்மெண்ட கண்ட்ரோல்களையும் பிரிச்சிகிட்ட மாதிரி பிரபா குடும்பத்துக்கு வடக்கு மாகானத்தையும் கருணா குடும்பத்துக்கு கிழக்கு மாகானத்தையும் பிரிச்சிக்கோங்க அப்படின்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ ? ஆனா நம்ம ஆளுக்குத்தான் விவரம் பத்தாது. நமக்கிருக்கிறது ஒரே பொண்டாட்டி மூனே புள்ளைங்க நமக்கெதுக்கு இதெல்லாம் அப்படீன்னு அருமையான வாய்ப்பை எட்டி உதைச்சிட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். புடிச்சிருந்தாருண்ணா ஆசியா பணக்காரங்க லிஸ்ட்டுல ஒரு பத்து பதினைஞ்சிலேயாவது வந்திருக்கலாம். கருணாவப் பாருங்க நம்ம தலிவரையே மிஞ்சி ஒரு நாட்டுக்கு ஒரு பொண்டாடின்னு காலத்தை ஜாலியா வாழ்ந்துகிட்டு இருக்காரு. போன ஒரு உயிருக்காக இன்னும் ஊள விடறாரு நம்ம தலிவரு. ஆனா முப்பதாயிரம் நாப்பாதயிரம்னு உயிர்விட்ட ஓலம் மட்டும் தலிவரு காதுல விழவே இல்லயே அது ஏன்னு தெரியல. இந்த நொண்டி சாக்கை சொல்லியே எத்தனை நாள் காலம் தள்ளுவாரோ தெரியல. அந்த சம்பவத்தில் தலிவருக்கு கூட பங்கு இருப்பதாய் இவங்க கூட்டாளிகளே போஸ்டர் கூட ஒட்டினாங்க. ஒரு அம்மாக்கூட ஜெயிலுக்கெல்லாம் போயி கண்ணீர்விட்டு துப்பறிஞ்சுது. ஆனா அதெல்லாம் இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல. அதுவும் போக அந்த ஒரு சாவுக்குப்பின்னாடி ஓராயிரம் கேள்வி இருந்துச்சாம். பல நாட்டு உளவு அமைப்புகள் இருந்ததா கூட பேசிகிட்டாங்க? அதுகெல்லாம் விடைக்கண்டுபிடிச்சிட்டாங்களான்னு தெரியல. ஒரு வேளை பதில் வெளியில் சொல்லும்படி இல்லையோ என்னவோ? ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே இவங்க குடுமபத்துக்குத்தான் பட்டா போட்டு கொடுத்தாச்சுன்னு கேள்விப்பட்டேன். அப்புறம் வேறெதுக்கு இன்னும் இப்படி மவுனமா அழுவுறாருன்னு தெரியல. பதினெட்டு கிலோ மீட்டர் தூரத்தில சனங்க தலையில குண்டப் போட்டப்பவே அந்த சத்தம் நம்ம காதுல விழலையே? இவரு மவுனமாக அழுவுறது மட்டும் நமக்கு எப்படிங்க கேக்கும்? வயசான காலத்துல எதுக்கு இதெல்லாம். உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுங்க. இறுதிகட்ட போர்ல சண்டப்போட்டு செத்துப்போன பெண் புலிங்க உடல கற்பழிச்சி வெறியை தீர்த்துக்கிட்டானுங்களாம் சிங்களவனுங்க. அந்த அனிமல்சுக்கும் குத்துயிரும் குலயுருமா கிடக்கிற சனங்களோட பிரச்சினைகள பார்க்காம அதிலயும் நுன்னரசியல் பண்ணி இன்னும் லாபம் தேடுற உங்க தலிவருங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசமுன்னு கேக்குறான் நம்ம கூட்டாளி. என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு. அது சரி அதெல்லாம் விடுங்க. நம்ம கலா அக்கா மானையும் மயிலையும் வச்சி கெமிஸ்ட்ரி பாடம் நடத்துறாங்களாம் அத போய் பார்ப்போம் முதல்ல. .

Friday, 13 November 2009

இசைக்கு உண்டா எல்லைக்கோடு?

கல்லூரியில் படிக்கும்போது என்று நினைக்கிறேன். ஒரு விடுமுறை நாளில் என் நண்பனை பார்க்க சென்னையில் இருந்து பெரம்பலூர் சென்றேன். அப்பொழுதெல்லாம் பாடல்கள் கேட்பது புத்தகங்கள் படிப்பது இதெல்லாம் மற்றவர்கள் வீட்டில்தான். அப்போது நமக்கு அந்த அளவுக்கு வசதி வாய்ப்பெல்லாம் இல்லை. நண்பன் சற்று வசதியான வீட்டில் பிறந்தவன். அதனால் அவனுக்கென்று தனியாக டேப் ரெகார்டர் எல்லாம் வைத்திருப்பான. ஆனால் ஒரெ ஒரு பிரச்சினை. நண்பன் கான்வெண்ட்டில் படித்தவன். அதனால் எப்போதும் மேற்கத்திய இசை தொகுப்புகள்தான் அவனிடம் அதிகம் இருக்கும். அதனால வேறு வழியின்றி நானும் அதையே கேட்பேன். அவற்றில் எனக்குத் தெரிந்த ஒரே இசைத்தொகுப்பு மைக்கேல் ஜாக்சனுடையதுதான். நண்பனும் ஜாக்சன் பாடல்களையே அதிகம் கேட்பான் (எல்லாம் ஒரு மாயை). ஆனால் வார்த்தைகள் புரியாததால் எல்லாம் எனக்கு கூச்சல் மாதிரியே தெரியும். பல நேரங்களில் ஜாக்சனின் தாளகதி நம்மை ஆடவைக்கும் ஆனால் வார்த்தைகள் புரியாது. ஒரு நாள் நண்பன் அவன் தந்தை வாங்கி வைத்திருந்த ஆங்கில இசைத்தொகுப்பு ஒன்றை ஓட விட்டான். அந்த பாடல்கள் நம்முடைய பழைய திரைப்பட பாடல்களில் மேற்கத்திய இசை சார்ந்த பாடல்கள் போலிருந்தன். என்னவோ தெரியவில்லை அந்த தொகுப்பில் இருந்த அத்தனை பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதற்கு முக்கிய காரணம் அவற்றின் வார்த்தைகள் எனக்கு ஓரளவுக்கு புரிகிற மாதிரி இருந்ததுதான். அந்த பாடல்களை பாடியிருந்தவருடைய குரலும் மிகவும் வசீகரமாகவும் அதே சமயத்தில் எளிமையாகவும் இருந்தது. நம்ம இளையராசாவின் தென்பாண்டிச் சீமை பாடலைப்போல. அதன் பிறகு எனக்கு அந்த பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு வரவில்லை. வாழ்க்கையின் ஓட்டம் அவற்றையெல்லாம் தேடிப்போய் கேட்கும் அளவிற்கு நமக்கு அவகாசம் தரவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராசா இசையமைத்த மைக்கேல் மதன காமராஜன் படத்தின் பாடலகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் வரும் ஒரு பாட்டிற்கு பின்னனி இசையாக ஒரு மேற்கத்திய இசைக்கோவையை இசைஞானி பயன் படுத்தி இருப்பார். ரம்பம்பம் பாடல் என்று நினைக்கிறேன். அதைக் கேட்டவுடன் இதை நாம் எங்கோ கேட்டிருக்கிறோமே என்று எனக்கு பொறி தட்டியது. மீண்டும் ஒருமுறை கேட்டபோது அது நண்பன் வீட்டில் கேட்ட எனக்குப்பிடித்த அந்த இசைத்தொகுப்பின் பாடலில் வரும் பின்னிசையை ஒத்திருப்பதை உணர முடிந்தது. மீண்டும் அந்த இசை தொகுப்பை கேட்கவேண்டும் ஆவல் மிகுந்தது. நண்பனை அழைத்து அந்த தொகுப்பு அவனிடம் இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன். அதெல்லாம் பெருசுங்க கேக்கிறது என்கிட்ட இப்ப இல்லை என்று சொல்லிவிட்டான். அது முதல் இன்று வரை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அந்த இசைத்தொகுப்பை தேடுவேன். பாடியவர் பெயர் நாடு இசைத்தொகுப்பின் பெயர் இது எதுவும் தெரியாததால் அந்த பாடல்கள் எனக்குக் கிடைக்காமலேயே இருந்தது. அமெரிக்க கருப்பின நண்பர் ஒருவரை சந்திக்கும் போது கூட இது பற்றிக்கேட்டேன். ஹம் பண்ணியாவது காட்டச்சொன்னார். நானும் ஆர்வமாய் ஹம் பண்ணிக் காட்டினேன். ஆனால் மூன்றாம் பிறை கமல் போலாகிவிட்டது என் நிலைமை. இந்நிலையில் நேற்று ஓய்வான நேரத்தில் மீண்டும் இளையாராசாவின் அந்த பாடலைக் கேட்க நேர்ந்தது. இந்த முறை எப்படியாவது கண்டுபிடித்தே தீருவது என்ற் முடிவில் கூகிளாண்டவரின் உதவியை நாடினேன். என் நினைவில் நின்ற “ஏஞ்சலீனா” ஒரே ஒரு வார்த்தையை வைத்து அதைப்பாடியவரின் பெயரைக்கண்டு பிடித்தேன். ஆனால் பாடல்களை தரவிறக்க முடியவில்லை. அதன் பிறகு பாடகரின் பெயரை வைத்து யூடியூப்பில் மேய்ந்தபோது ஒரு வழியாக எல்லாப் பாடல்களையும் கண்டு பிடித்து விட்டேன் - பதினைந்து வருடங்கள் கழித்து. விஞ்ஞான வளர்ச்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் கண்டுபிடித்தப் சில பாடல்களை கீழே உங்களுக்கும் தந்துள்ளேன் கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். அதற்கு முன் அந்த பாடல்களைப் படைத்த அந்த படைப்பாளியை குறித்து சில வார்த்தைகள்……. இந்தப் பாடல்களைப்பாடியவர் ஹாரி பிளபாண்டே என்ற அமெரிக்க கறுப்பின பாடகர். இவர் ஒரு பாடகர் மட்டுமில்லாமல் நடிகர் மற்றும் சமூக ஆர்வலர். அமெரிக்காவில் நிற வெறிக்கு எதிராக குரல் கொடுத்த கலைஞர்களில் முக்கியமானவர். இன்றும் அமெரிக்காவின் ஆதிக்க வெறியினை எதிர்ப்பவர். ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் ஈராக படையெடுப்பை மும்முரமாக எதிர்த்தவர். இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவிரவாதிகளுக்கும் புஷ்ஷுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று வாதிட்டவர். 82 வயதாகும் இவர் இப்போது இசைப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவரது பாடலகள் பெரும்பாலும் நாட்டுப்புற இசை வகையை சார்ந்தவை. உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் புழங்கும் பாடல்களை அடிப்படையாக கொண்டவை. (இப்போது புரிந்திருக்குமே அவரது பாடலகள் ஏன் எனக்கு பிடித்தது என்று) இந்த பாடல்களை கேட்கும்போது பல பழைய தமிழ் திரைப்பட பாடல்களும் சந்திரபாபு பாடல்களும் நினைவில் வந்து செல்லும். பதிவின் நீளம் கருதி இதோடு முடித்துக்கொள்கிறேன். .

Friday, 6 November 2009

இந்தோனேசியாவில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்களை காப்பாற்றக்க்கோரி அமைச்சர் மு.க. அழகிரியிடம் மனு!

மனுவை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்
இலங்கையின் தடுப்பு முகாம்களில் இருந்து ஆவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் தப்பி வந்த சுமார் 300 தமிழர்கள் இந்தோனேசிய கடல் எல்லையில் சென்ற மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தியை நீங்கள் அறிந்திருக்க கூடும். பல மாதங்கள் காடுகளிலும் கடலிலும் உயிரை பயணம் வைத்து அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் இந்தோனேசியா கடல் எல்லையை தாண்டும் முன் அவர்கள் இந்தோனேசியா கப்பற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்களான அவர்கள் தங்களுக்கு அவுஸ்திரேலிய அரசு அரசியல் தஞ்சம் அளிக்கவேண்டும் என்று கோரினர். ஆனால் அவர்களுக்கு தஞ்சம் வழங்க அவுஸ்திரசு மறுத்தவிட்டது. அவர்களை தடுத்து வைத்துள்ள இந்தோனேசிய அரசும் அவர்களுக்கு தஞ்சம் வழங்க மறுத்துவிட்டது. ஐ.நா அமைப்புகளும் அவர்களை கைவிட்டு விட்டன. இந்த நிலையில் அந்த 266 பேரும் படகிலேயே கடந்த சில வாரகாலமாக காத்திருக்கின்றனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென இந்தோனேசிய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களை திருப்பி அனுப்பினால் அவர்கள் நிலை என்ன ஆகுமோ என்ற கவலை உலகத்தமிழர்களை ஆட்கொண்டுள்ளது. பல தமிழ் அமைப்புகளும் அவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசு தஞ்சம் அளிக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. தாம் வாழும் நாட்டில் தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள இத்தகைய நிலை இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களின் மனங்களையும் பாதிக்கத்தவறவில்லை. ஆனால் பிழைப்புக்காக புலம்பெயர்ந்துள்ள நாட்டில் எந்த வித சட்ட உரிமைகளும் இல்லாத நிலையில் அவர்கள் கையை மட்டுமே பிசைய முடிந்தது. இந்நிலையில் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க. அழகிரி அவர்கள் இந்தோனேசியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக நேற்று வந்திருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்தோனேசியா வாழ் தமிழர்கள் அவரை மிகுந்த சிரமங்களுக்கிடையில் சந்தித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றை அளித்தனர். இந்த பிரச்சினை குறித்த விவரங்களை சிரத்தையுடன் கேட்டுக் கொண்டபின் அவரும் தன்னால் இயன்றவரை உதவுவதாக உறுதி அளித்துள்ளார். இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்தியா எந்த அளவுக்கு தலையிட முடியும் என்ற கேள்வி இருந்த போதும், இந்தோனேசியாவும், அவுஸ்திரேலியாவும் கைவிட்டு விட்ட நமது சொந்தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமல் தமிழகத்துக்கு அனுப்ப ஐ.நா மனித உரிமை கழகத்துக்கு தமிழக அரசு தாமாகவே முன்வந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக உள்ளது. தமிழக அரசு நமது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று நம்புகிறோம். பிழைக்க வந்த இடத்தில் இடைவிடாத வேலைப்பலுவின் இடையிலும் வார வேலை நாளான நேற்று பல கிலோ மீட்டர்கள் பயணித்து வந்து அமைச்சரை சந்தித்து சக தமிழனுக்காக குரல் கொடுத்த நமது சொந்தங்களை மனதார பாராட்டுகிறோம். தமிழன் என்ற உணர்வை நாடு கடந்து வந்தும் உயிர்ப்பித்து வைத்திருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக நேரில் வந்தும், நேரில் வராமல் இந்த நிகழ்விற்கான முன்னெடுப்பை செய்தும் உதவிய பின்வரும் நமது சொந்தங்களை நாம் பாராட்ட கடைமைப்பட்டுள்ளோம். திரு. கமல கிருஷ்ணன், சகார்த்தா திரு. சந்திரசேகரன், சகார்த்தா திரு. மாணிக்கம், போகூர் திரு. ஆன்டோனியோ டியோபில், போகூர் திரு. யாசிர் முகம்மது, போகூர் திரு. அருண், சுகபூமி திரு. திருநாவுக்கரசு, சகார்த்தா திரு. பத்மநாபன், போகூர் திரு. பாலசுப்ரமணியன், பாண்டுங் திரு. ஜெகதீசன் , பாண்டுங் திரு. மகேஸ்வரன் , பாண்டுங் திரு. பிரபு , பாண்டுங் திரு. ரமேஷ் , பாண்டுங் திரு. சுரேஷ் , பாண்டுங் திரு. பத்மநாபன் , பாண்டுங் திருமதி. விஜய காந்தி, சகார்த்தா .