எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Tuesday 28 October 2008

குடிப்பழக்கம் ஒரு மன நோய்!

தீவிர குடிப்பழக்கம் என்பது ஒரு முற்றிய மனநோய் ஆகும். சரியான மன நல சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாமல் இதை சரிப்படுத்த முடியாது. இதை நான் சொல்லவில்லை. ஒரு மன நல மருத்துவரே சொல்கிறார். சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கேள்வி பதில் பகுதியில் மனநல மருத்துவர் ஒருவர் அளித்த பேட்டியை கானும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமான கேள்வி பதில் போல் இல்லாமல் சற்று சுவாரசியமாகவும் பல நல்ல தகவல்களை கொண்டதாகவும் இருந்தது. அதில் அவர் தெரிவித்த கருத்துதான் இது. மேலும் அவர் மன நலன் குறித்த பல ஆச்சரியமூட்டும் விவரங்களை தெரிவித்தார். குடிப்பவருக்கு தெறியாமல் குடிப்பழக்கத்தை குனப்படுத்தமுடியும் என்பது இயலாதது. குடிப்பவருக்கு தெறியாமலும் மருந்து கொடுக்கலாம் என பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களை பார்த்து இருப்பீர்கள். அவை எல்லாம் கடைந்தெடுத்த பொய்கள். பலர் ஐயப்பன் கோவிலுக்கு மாலைப்போடுவதற்காக குடியை விட்டுவிட்டதாக சொல்வார்கள். சிலர் தான் மிகுந்த மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டவன் என்றும் தான் நினைத்தால் குடிப்பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிடுவேன் என்றும் சொல்வார்கள் அல்லது நினைப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று. ஒருவர் குறைந்தபட்சம் நான்கு வருடங்கள் மதுவிடமிருந்து முற்றிலும் விலகி இருந்தால் மட்டுமே அவர் குடியை மறந்துவிட்டதாக கொள்ளலாம். மேலும் தீவிர குடிப்பழக்கம் அல்லது போதைப்பழக்கம் கொண்டிருப்போர் புத்திசாலிகளாகவும் இருப்பதாகவும் சிலர் கூறுவதுண்டு. என்னதான் குடித்தாலும் அவன் வேலையிலே கெட்டி என்பார்கள் சிலர். இது சாத்தியமே இல்லை. மது ஒருவரின் மூளையின் செயல்பாட்டை கண்டிப்பாக பாதிக்கும். குடிபழக்கத்தினால் குடிப்பவர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினரின் மனநிலையும் பாதிக்கபடுகிறது. இவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் மனச்சோர்வு எனும் மனநோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இது தற்கொலை அல்லது மனச்சிதைவு போன்ற கொடிய முடிவுகளை தந்துவிடும்.குடிப்பழக்கத்தை முறையான சிகிச்சை மூலம் கண்டிப்பாக நிறுத்தமுடியும். இதற்கு குடிப்பவரின் ஒத்துழைப்பு மிக முக்கியம். பெரும்பாலான மன நோய்கள் மூளையில் சில வேதி திரவங்கள் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினைகளாலேயே உருவாகின்றன். இவற்றை எளிதில் மருந்துகள் மூலம் குனப்படுத்தலாம். இதற்கான பல தரமான மருந்துகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. மிகக்குறைந்த அல்லது நமக்கு வசதிப்படுகின்ற விலையில் இவை கிடைக்கின்றன. நோயின் தன்மையையும் தீவிரத்தையும் பொறுத்து சில மாதங்ளோ, வருடங்களோ அல்லது தொடர்ந்தோ மருந்து உட்கொள்ள நேரிடும். ஆனால் நம்மவர்கள் மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலே கோயில் குற்றாலம் ஆசிரமம் சாமியார் மந்திரவாதி என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு எல்லாம் முற்றியபிறகு மருத்துவ மனைக்கு வருகிறார்கள். இதனால் எல்லாம் கை மீறிப்போய்விடுகிறது. இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் அதிகம் என்ற எண்ணம் சில பாரம்பரிய மருத்துவர்களால் ஊடகங்களில் பரப்பபடுகின்றன. இதுவும் மிகவும் தவறு. மனநோய்கள் பெரும்பாலும் நமது பாரம்பரிய ஜீன்களால் நிர்ணயிக்க படுகின்றன். ஒருவரின் குடும்பத்தில் நிறைய தற்கொலைகள் நடந்திருந்தால் அவர்களின் சந்ததியினருக்கு இந்த எண்ணம் மேலோங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். சாமி ஆடுதல் குறி சொல்லுதல் இவை எல்லாம் ஹிஸ்டீரியா எனும் மன நோயின் பாதிப்புகளாகும். இவர்களை கைகூப்பி கொண்டாடுவதை விட்டுவிட்டு இவர்களை நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. சிலர் தம் இணைகளிடம் அதி தீவிர பாசம் கொண்டவர்கள் போல் சிலர் நடந்து கொள்வார்கள். இவர்கள் தமது இணைகளை மிக தீவிர சொந்தம் கொண்டாடுவார்கள். இதுவும் மன நோயின் ஒரு கட்டமாகும். ஒரு நேயர் ஒருவர் கேட்ட் கேள்வி இதைப்பற்றியதுதான். தன் நன்பன் ஒருவர் தன் மனைவியிடம் அதீத பாசத்துடன் இருப்பதாகவும், அவரை பிரிய மனமில்லாமல் வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்றும் சொன்னார். மேலும் கருவுற்றிருக்கும் தன் மனைவியை தாய் வீட்டிற்கு செல்லவும் அனுமதிக்கவில்லை என்றும் தன் தாயிடம் தொலைபேசியில் பேசக் கூட அனுமதிக்கவில்லையாம். ஆனால் மனைவியின் பக்கத்திலேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாகவும் சொன்னார். இதுபோன்று இருப்பது அதிக பாசத்தினால் (possessiveness) என்று நாம் நினைக்ககூடும். ஆனால் இது சந்தேகத்தினால் ஏற்படும் ஒரு தீவிர மனநோயின் முற்றிய நிலையாம். இந்த நபர்களிடம் இதைப்பற்றி சொன்னால் ஏற்ககமாட்டார்களாம். அவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துதான் உள்ளிருப்பு சிகிச்சை அளிக்கவேண்டுமாம். சாதாரண கலந்தாய்வுகள் (councelling) எல்லாம் இவர்களிடம் செல்லுபடியாகாதாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதுதானோ? சிலர் எல்லா தகுதிகள் இருந்தும் எந்த சரியான காரணமே இல்லாமல் திருமணத்தை வெறுப்பார்கள் அல்லது தவிர்ப்பார்கள். இதுவும் ஒரு மன நோயின் அறிகுறியாம்.இது மேற்கத்திய நாடுகளில் சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால் திருமணத்தை ஒரு சமூக நிலைபாடாக ஏற்றுக்கொண்டிருக்கிற நம்மை போன்ற நாடுகளில் இது சாதாரண பிரச்சினை இல்லை என்கிறார் மருத்துவர். ( நன்கு கவனிக்கவும் - சரியான காரணம் இன்றி!) தகுந்த மன நல சிகிச்சை மூலம் இதற்கும் தீர்வு காணலாம். இன்னொருவர் கேட்ட கேள்வி ஹிப்னாட்டிசம் மற்றும் மெஸ்மரிஸம் பற்றியது. தான் இவைகளைப்பற்றிய புத்தகங்களை நிறைய படித்திருப்பதாகவும் இவற்றை செயல் படுத்தி பார்த்ததாகவும் சொன்னார். ஆனால் தான் சோதனை செய்யும் நபர்கள் உடனே தூங்கிவிடுவதாகவும் கேள்விகளுக்கு பதில் தருவதில்லை என்றும் சொன்னார். இதைகேட்ட மருத்துவர் சற்று அதிர்ச்சி அடைந்துவிட்டார். நடைபாதைகளில் கிடைக்கும் இதுபோன்ற புத்தகங்களை அரைகுறையாய் படித்துவிட்டு இதுபோன்ற முயற்ச்சிகளை செய்வது மிகவும் ஆபத்தானதாம். இது சோதனைக்கு உட்படுவரின் வாழ்க்கையை பணயம் வைப்பதாகும். நன்பர்களே இது போன்ற நபர்களிடம் கவனமாக இருங்கள்! திரும்ப திரும்ப ஒரு செயலை செய்வது கூட ஒரு மன நோயின் அறிகுறியாம். பூட்டிய கதவை இருமுறை இழுத்துப் பார்த்தால் அது எச்சரிக்கை உணர்வாகும். ஆனால் சிலருக்கு பல முறை திரும்ப திரும்ப இழுத்துப் பார்ப்பார்க்கத் தோன்றும். அதன் பின்னும் வழி நெடுக சரியாக பூட்டினேனா என்று சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். சில பேர்களுக்கு கோவிலுக்குச் சென்று சாமி சிலையை பார்ததாலே கெட்ட கெட்ட எண்ணமாய் வருமாம். இத்தகைய நபர்கள் எல்லாவற்றிலும் அதீத நேர்த்தியை (perfectionist) எதிர்ப்பார்ப்பவர்களாக இருப்பார்கள். மேலும் அநியாயத்திற்கு நேர்மையாகவும் இருப்பார்களாம். ஒரு சில மருந்துகள் மூலமே இதை சரிசெய்ய முடியுமாம். எல்லா மனநோய்களுக்கும் சரியான சிகிச்சையும் மருந்தும் உள்ளதென்றும் மக்களுக்குத்தான் அதற்கான விழிப்புனர்வு வேண்டும் என்றும் சொல்லி மருத்துவர் விடை பெற்றார். எனக்குத்தான் சற்று குழப்பமாக இருந்தது யார் யார் மன நோயாளி இல்லை என்று.என்ன உங்களுக்குமா?? ஹா! ஹா!

Wednesday 22 October 2008

தமிழர்களே ஓங்கி முழங்குங்கள்!!

”தமிழன் இல்லாத நாடில்லை. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை” என்பது எத்தனை உண்மை என்பது கடல் கடந்த அத்தனை தமிழனும் உணர்வுப்பூர்வமாக அறிவான். சென்ற உலக கோப்பை கால்ப்ப்ந்து போட்டியின் போது அனைவரின் புருவங்களையும் உயரச் செய்த்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நாடு செனகல் எனும் சின்னஞ்சிறிய தேசம். இத்தேசத்தில் கூட தமிழர்கள் அதிக அளவில் வாழ்வதாக செய்திகள் மூலம் அறிகிறோம். இப்படி உலமெங்கும் பட்டு பரவிக்கடக்கிறது தமிழினம். இப்படி உலமெங்கும் தமிழன் வாழ்ந்தாலும் தமிழனுக்கு அசைக்கமுடியாத முகவரியைத் தந்தது தமிழீழ்ம் தான். இன்றும் என்னுடன் பழகும் மேற்க்கத்தியர்கள் நான் தமிழன் என்று அறிந்ததும் என்னைப்பார்த்து கேட்கும் கேள்வி நீர் யாழ்ப்பானத்தை சேர்ந்தவரா என்பதுதான். அதற்கு என் தோற்றம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களை பொறுத்தவரை மறத்தமிழன் என்பவன் ஈழத்தை சேர்ந்தவனாகத்தான் இருப்பான் என்று நினைக்கிறார்கள். இதை அவர்களிட்ம் உரையாடும்போது நான் உணர்ந்திருக்கிறேன். இந்திய தமிழர்களை அவர்கள் தமிழர் என்று உணர மறுக்கிறார்கள். இப்போது தமிழகத்திலுள்ள நிலை கூட இதை வலுப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. தமிழகத்திலுள்ள தமிழர்கள் சோரம் போய்விட்டாரகள். தமிழன் ஆண்ட இலங்கை மண்ணில் இன்று தமிழரின் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. இதை தட்டிக்கேட்க ஒன்று சேரக்கூட நாதியற்ற இனமாக தமிழக தமிழினம் மாறிவிட்டது. அரசியல் என்ற போர்வையில் தமிழினத்தின் உணர்வுகளை கொச்சைப் படுத்துகிறது ஒரு ஆள்காட்டி கூட்டம். நேற்று கூட செய்திகளில் ஈழத்தில் ஒரு குண்டு வீச்சின் நேரடிக் காட்சிகளை ஒளி பரப்பினார்கள். ஒன்றுமறியா பிஞ்சுகள் வெடித்து சிதறுவதை பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போல் உள்ளது. சிறார்களும் பெண்டுகளும் வயோதிகர்களும் இடும் கூக்குரல் நெஞ்சை பிசைகிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பதுங்குகுழிகளை நோக்கி ஒடும் போதே சிதறுகிறார்களே! ஐயோ வயிறு எரிகிறது! இங்கோ தமிழகத்தில் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அறிக்கைப்போர் புரிகிறார்கள். தமிழனின் பிணத்தின் மீது அரசியல் செய்கிறார்கள் வந்தேறிகள். தன் சொந்த பிறப்பின் இனமே தெரியாத இவர்களுக்கு தன் இனத்துக்காக சொந்த உயிரையே துச்சமாக என்னும் தமிழனின் உணர்வுகள் புரிந்திருக்க ஞாயம் இல்லை. ஆனால் இந்த வந்தேறிகளை வாழவைத்து இன்னும் இவர்களுக்கு சொம்பு தூக்கம் தமிழனை பெற்ற தாயும் ஏற்பாளோ? தமிழனின் ரத்தத்தின் மீது அரசியல் செய்து பணம் பார்க்கும் பிணந்திண்ணி கழுகுகளை யாரும் வந்து மாய்ப்பாரோ? தன் இனம் அழிவதைக்கூட அறியாத தமிழினமே நீர் தமிழ்த்தாய் வயிற்று பிள்ளைகளில்லையா? அய்யோ மனதைக்கொன்ற மானிடமே! கண்டன குரல்களும், மனித சங்கிலியும் என்ன பலனை தரப்போகிறது என்று ஒரு கூட்டம் கேட்கிறது ஒரு கூட்டம். இந்திய இறையாண்மை என்று எதோ புதிய கண்டுபிடிப்பை சொல்லி புலுகுகிறது இன்னொரு கூட்டம். வெற்றுக் குரல் கொடுக்கக்கூட மனமில்லாத உணர்வில்லாத கூட்டம் குரல் கொடுப்பனைப்பார்த்துக் பதவியை இழக்கசொல்லி கேட்கிறது. இவர்களுக்கெல்லாம் அக்கரை தமிழன் படும் பாடு மீது அல்ல…..பதவி மீது. எரியும் வீட்டில் பிடுங்கினவரை லாபம் பார்க்க நினைக்கிறார்கள். கேவலம்! தமிழர்களே! தமிழக தமிழர்களே! இத்தகைய புல்லுறுவிகளை புறந்தள்ளுங்கள்! ஒன்று பட்டு குரல் கொடுங்கள். ஓங்கி முழங்குங்கள். நமது உணர்வுகளை இந்திய அரசுக்கு புரிய வையுங்கள். உலகத்தின் பார்வை நம் மீது திரும்பட்டும். ராஜபக்சே அரசின் அத்துமீறல் உலகத்தின் கண்டனத்துக்கு வரட்டும். இது நம் ஈழத்து மக்களுக்கு ஆதராவாக அமையட்டும். அடக்கு முறைகளை எதிர்கொள்ள அவர்களுக்கு நம் குரல் ஆதரவாய் இருக்கட்டும்.

Tuesday 21 October 2008

அடுத்த ஜனாதிபதி ஷாருக்கானா?!

இந்தோனேசியாவில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை. குறிப்பாக இந்தியர்களை அசத்தும் விடயங்கள் அதிகமாகவே உண்டு. அவைகளில் சிலவற்றை வரும் பதிவுகளில் காண்போம். இந்தோனேசியாவின் மிகப்பிரபலமான இந்தியர் யார் என்றால் இங்கு வந்த இந்தியர்கள் அனைவரும் எளிதில் சொல்லிவிடுவார்கள். அவர் யாரும் இல்லை. நம் ஷாருக்கான் தான். தாம் முதல் முறையாக சந்திக்கும் இந்தியரை இந்நாட்டவர் கேட்கும் முதல் கேள்வி உங்களுக்கு ஷாருக்கானை தெரியுமா என்பதுதான். அவர் பெயரை சொல்லும்போதெ வெட்கப்படும் இந்நாட்டு பெண்களை கண்டால் எனக்கு சிரிப்புத்தான் வரும். அவர் நடித்த பல படங்கள் இங்கே மிகவும் பிரசித்தம். குச் குச் ஹோத்தஹை திரைப்படப்பாடல்களை என்னுடன் பணிபுரியும் தோழிகள் அடி பிறழாமல் பாடுவதைக்கண்டு மலைத்துப் போய்விட்டேன். இங்கு தொலைக்காட்சிகளில் அதிகம் இடம்பெறுபவை குரல் மாற்றம் செய்யப்பட்ட இந்தி சினிமா படங்கள் தான். அதே போல் திரைப்பட் தயாரிப்பிலும் வட இந்தியர்கள் அதிக ஈடுபட்டுள்ளார்கள். இதில் என் நன்பர் ஒருவர் சொன்ன செய்தி மிகக்கொடுமையானது. சென்ற முறை ஷாருக்கான் ஜகார்த்தாவில் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியின் கட்டணத்துக்காக என் நண்பரின் வீட்டு வேலைப்பெண் இரண்டு மாத சம்பளத்தை முன்பணமாக கேட்டாராம். முடியாது என்றதுக்கு வேலையைவிட்டு நின்றுவிடுதாக சொல்லிவிட்டாராம் அந்தப்பெண். நன்பர் வேறு வழியின்றி அதை கொடுத்து தொலைத்தாராம்! ஷாருக்கான் இங்கு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டால் வெற்றி உறுதி! இதை நான் சொல்லவில்லை. உள்ளூர் நன்பரே சொல்கிறார். வாழ்க இந்தோனேசிய மக்கள். இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி திரு சுகர்னோ ஆவார். இவர் நம் அன்புக்குரிய தலைவர் ஜவஹர்லால் நேருவின் மிக நெருங்கிய நன்பர். திரு சுகர்னோ அவர்களின் ஆத்ம குரு யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை வீர்த்துறவி சுவாமி விவேகானந்தர் தான். சுவாமி விவேகானந்தரின் படத்தை எப்போதும் தன் அறையிலே மாட்டியிருப்பாராம் இவர். பஞ்சசீலக் கொள்கை என்றதும் இந்தியர்கள் நினைவுக்கு வருவது திரு நேரு அவர்கள் 1956ல் சீனாவுடன் செய்து கொண்ட பஞ்சசீல உடன்படிக்கையாகும். ஆனால் இந்தோனேசிய ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடும் பஞ்சசீலக் கோட்பாடு (“Dasar Negara Pancasila” ) என்றே அழைக்கப்படுகிறது. இது ஜனாதிபதி திரு சுகர்னோ அவர்களாலேயே கொண்டுவரப்பட்டதாகும். உண்மையில் இது சமஸ்கிருத வார்த்தையாகும். இறைவன் ஒருவனே, ஒன்றுபட்ட இந்தோனேசியா, அனைவருக்கும் ஒரே சமூக நீதி போன்ற ஐந்து கோட்பாடுகளைக்கொண்டதே இந்த பஞ்சசீலக்கொள்கை. இந்தோனேசியா ஒரு இசுலாமிய தேசம் என்று பிரகனப்படுத்தப்பட்டுள்ள போதும் மற்ற மதங்களும் சம நிலையுடன் மதிக்கப்படுகின்றன. இந்துக்கள், கிருத்துவர்கள் மற்றும் பவுத்தர்களுக்கான முக்கிய பண்டிகை நாட்கள் தேசிய விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய இந்துக்களுக்கு ராமாயண மகாபாரதக் கதைகள் தெரியுமோ இல்லையோ இந்நாட்டில் உள்ள இசுலாமியருக்கும் இக்கதைகள் அத்துப்படி.. ஏன் என்றால் அது அவர்களின் ஆரம்ப பள்ளி பாடத்திட்டங்களில் சொல்லிகொடுக்கப்படுகிறது. ஜகார்த்தாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள அர்ச்சுனன் ரதச்சிற்பம் இந்நாட்டின் கலைத்திறனுக்கும் மத சகிப்புத்தன்மைக்கும் ஒரு முகிகிய சான்று ஆகும்! (தொடரும்)

Saturday 4 October 2008

முகத்தில் கரியை பூசிக்கொள்ளாதீர்கள் !

நாங்கள் இங்கு வந்தபுதிதில் பல இந்தோனேசிய நடைமுறைகள் எங்களுக்கு சரிவர புரியவில்லை. அதனால் இந்நாட்டை பற்றிய எங்களுடைய மதீப்பீடுகள் சற்று குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக நம் நாட்டைப்பற்றி உள்ளூர் தமிழர்களிடம் சற்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் இந்தியாவில் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் இங்கு இது சரியில்லை அது சரியில்லை என்று எதையாவது பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு நாள் எங்கள் முகத்தில் சரியாக கரியை பூசிக்கொள்ள போகிறோம் என்று நாங்கள் உணர்ந்திருக்கவில்லை! இங்கேயே பிறந்து வளர்ந்த ஒவ்வொரு தமிழருக்கும் ஒரு முறையாவது ஊருக்கு சென்று கால் வைக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஊர் என்றாலே அவர்களின் பாவிப்பில் அது தமிழகத்தை குறிக்கும். அவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தாலும் தமிழ்நாட்டை இன்றும் ”ஊர்” என்றுதான் அழைப்பார்கள். அதாவது தமிழ்நாட்டை இன்றும் அவர்கள் சொந்த ஊர் என்றே பாவிக்கிறார்கள். எங்களையும் ஊர் ஆட்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நம்ம ஆள் இரண்டு மாதம் அமரிக்காவிற்கு பயிற்ச்சிக்கு சென்று திரும்பினாலே தமிழ்நாட்டை பார்க்கிற பார்வையே வேறு மாதிரியாக இருக்கும். சரி சரி விசயத்திற்கு வருகிறேன். இவ்வாறு நாம் பாடிய சுய புராணங்களை நம்பிய ஒரு இந்தோனேசிய தமிழர் சமீபத்தில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் சென்று திரும்பியிருந்தார். அவருடன் வழக்கம்போல அலாவிக்கொண்டிருந்தோம். சற்று ஏமாற்றம் மேலோங்கிய தொனியில் அவர் கேட்ட கேள்விகள்தான் எங்கள் முகத்தில் கரியை பூச வைத்தது. அவை, 1. நம்மூரில் ஏன் பாதையிலேயே மலம் ஜலம் கழிக்கிறார்கள்? புகையிலையை ஏன் துப்பிவைக்கிறார்கள்? இந்நிலை கிராமங்களில் என்றால் கூட பொறுத்துக்கொள்ளலாம். சென்னை மாநகரிலேயே இவ்வாறு இருப்பதை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை? 2. அவசியமே இல்லாமல் ஏன் ஹாரனை பயன்படுத்துகிறார்கள்? நோயாளிகளையும் குழந்தைகளையும் இது பாதிக்காதா? 3. சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன? நீங்கள் எல்லாம் ஒழுங்காக வரி கட்டுவதில்லையா? 4. விமான நிலையங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் ஏன் அலுவலர்கள் எல்லோரும் கடு கடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இங்கெல்லாம் ஏன் தமிழில் பேசினால் கண்டுகொள்ள மாட்டேன்கிறார்கள்? ஆங்கிலம் படிக்காதவர்கள் மற்றும் அதிகம் படிக்காதவர்கள் இங்கெல்லாம் செல்லக்கூடாதா? 5. கோயில்களில் ஏன் சிறப்பு தரிசன கட்டணம் வாங்குகிறார்கள்? உடல் ஊனமுற்றோர்களுக்கு வயதானவர்களுக்கு சிறப்பு வழி இல்லை. ஆனால் நல்லா இருப்பவர்களுக்கு பணம் கொடுத்தால் ஏன் சிறப்பு வழி? 6. கோயில்களில் ஏன் நமக்கு புரியாத மொழியிலேயே எல்லாம் செய்கிறார்கள்? ஏன் பிரசாதங்களை கையில் படாமல் தூக்கியெறிகிறார்கள்? தொட்டு கொடுத்தால் அது கெட்டுப்போகுமா? 7. கல்வியிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்குவதாக பீற்றிக்கொள்ளும் நீங்கள் இதையெல்லாம் ஏன் கண்டுகொள்வதில்லை? இப்போதெல்லாம் நம் நாட்டைப்பற்றி நாங்கள் அதிகம் பேசுவதில்லை. படங்கள் மேலே- துர்கா கோயிலில் தீ மிதிக்க ஆயத்தமாகும் பக்தர்கள். கீழே– ஜகார்த்தாவை அடுத்த தங்கரங்கில் உள்ள துர்கா கோயில் விமானம்.