எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 24 December 2008

மின்னும் சகார்த்தா! ( ஒளிப்படங்கள்)

இந்தோனேசியாவை முன்பெல்லாம் எல்லோரும் ஏழை நாடு என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றோ படிப்படியாக முன்னேறி வளரும் நாடுகள் வரிசையில் இடம் பிடித்து விட்டது. எது எப்படியோ என்னை பொறுத்தவரை இது ஒரு வளமான நாடு. ஏனென்றால் அவ்வளவு இயற்கை வளத்தையும் அழகையும் கொண்டுள்ளது இந்த நாடு. கீழே இருக்கும் படங்களை பார்த்தால் உங்களுக்கு இது ஏழை நாடாகவா தெரிகிறது? இப்போது இந்நாட்டின் தலைநகர் சகார்த்தாவின் அழகை கண்டுகளியுங்கள். படத்தை பெரிதாக்க படத்தின் மீது சுட்டுங்கள். மேலே படத்தில் உள்ளது சகார்த்தாவின் மையப்பகுதியி அமைந்துள்ள” மோனாஸ்” என்று அழைக்கப்படும் தேசிய நினைவுச்சின்னம். இது முந்தைய சாவா இந்துக்களின் லிங்க-யோனி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதின் உச்சியில் 35 கிலோ தங்கத்தை கொண்டு அடர்த்தியான முலாம் பூசப்பட்ட தீச்சுடர் வடிவ கும்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1961 -ல் அதிபர் சுகர்னோவால் ஆரம்பிக்கப்பட்டு 1975-ல் அதிபர் சுகார்த்தாவால் கட்டிமுடிக்கப்பட்டது. மோனாஸ் கோபுரம் மற்றுமொரு கோனத்தில். நீங்கள் மேலே பார்ப்பது சகார்த்தாவின் மையப்பகுதி. இந்த பகுதியில்தான் சகார்த்தாவின் முக்கிய நட்சத்திர விடுதிகளும் மிகப்பெரிய விற்பனை வளாகங்களும் உள்ளன.கீழே உள்ளது அதே மையப்பகுதின் மறு பகுதி இரவில் மின்னொளியில் மின்னும் காட்சி. இதில் பின்புலத்தில் தெரிவது நல்வரவு சிலை (துகு செலாமத் தத்தாங்). ஒரு சிறுவனும் சிறுமியும் கையைதூக்கி வரவேற்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழே இருப்பவை அனைத்தும் சகார்த்தாவின் அழகிய சாலைகள் இரவில் மின்னொளியில் மின்னும் காட்சிகள். சகார்த்தாவின் சாலைகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். இரவு நேர சகார்த்தா இன்னும் அழகாக இருக்கும். சகார்த்தாவின் இரவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இனிமையானவை.

Monday 22 December 2008

யாரைத்தான் நம்புவதோ!

இப்போதெல்லாம் யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. தனியார் நிதி நிறுவனங்கள்தான் பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டுகிறார்கள் என்றால் அரசுத்துறை நிறுவனங்களும் இதையே செய்வது வருத்தமாக இருக்கிறது. இதுபோன்றதொரு நிகழ்வு பற்றிய தகவல் ஒன்று அண்மையில் வெளிவந்திருக்கிறது. என் நன்பர் ஒருவர் 1993 ஆம் ஆண்டு குசராத் அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சர்தார் சரோவர் நர்மதா நிகாம் வெளியிட்ட டிடிபி (டீப் டிசுகவுண்ட் பாண்ட்) எனும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தார். சர்தார் சரோவர் எனும் அணையை கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு இக்கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இந்த பத்திரம் ஒவ்வொன்றும் 3600 ரூபாய் முகவிலைக்கொண்டது. இப்பத்திரத்தின் முதிர்வுக்காலம் இருபது வருடங்கள். இவ்வாறு இருபது ஆண்டுகள் கழித்து முதிர்வு பெரும்போது அதாவது 2014-ல் முதிர்வுத்தொகையாக 1,11,000 ரூபாய் கிடைக்கும் என்று பத்திர வெளியீட்டின்போது அறிவித்தார்கள். இதுதான் பத்திரத்திலேயும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் இப்பத்திரங்கள் குசராத் அரசால் பாதுகாப்பிற்காக இணைச்சாண்றும் செய்யப்பட்டிருக்கின்றன். அதாவது இத்தகைய நிதி திட்டங்கள் திவாலாகும் நிலைக்கு வந்தால் குசராத அரசு இப்பணத்திற்கு பொறுப்பேற்கும் என்பதுதான் இதன் சாராம்சம். முதலீட்டாளர்கள் விரும்பினால் 9,11 அல்லது 15 ஆம் ஆண்டுகளில் தாமாக முன்வந்து பத்திரத்தை ஒப்படைத்து அன்றைய நிலையில் முதிர்வுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். எளிதான மற்றும் பாதுகாப்பான முதலீடு என்பதால் லட்சக்கணக்கான நடுத்தர தட்டு மக்கள் இப்பத்திரத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் சென்ற மாதம் இந்நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் இந்நிறுவனத்தின நிதி நிலையை காரணம் காட்டி இக்கடன்பத்திரங்களை முன்கூட்டியே திரும்ப பெற விரும்புவதாகவும் அவ்வாறு திரும்பப்பெறும் போது முதிர்வுத்தொகயாக 50000 ரூபாய் மட்டுமே வழங்கி கணக்கை முடித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு முதிர்வு பெற இன்னும் ஐந்து ஆண்டுகளே உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு முதலீட்டார்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கள் பத்திரம் முதிவடையும் போது 1,11,000 கிடைக்கும் என்று திட்டமிட்டிருந்த முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்று தெறியாமல் கையைப்பிசைந்து கொண்டிருக்கின்றனர். வழக்கமாக இத்தகைய நீண்டகால முதலீடுகள் தங்கள் குழந்தைகளின் கல்லூரிக் கல்வி அல்லது திருமணச் செலவுகளை மனத்தில் கொண்டே செய்யப்படுகின்றன. மகனோ அல்லது மகளோ பெரியவர்களாகும் போது இது போன்ற முதலீடுகள் உதவும் என்றுதான் மக்கள் இத்திட்டங்களில் முத்லீடு செய்கிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இப்பிரச்சினையின் காரணத்தை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதாவது இந்நிறுவனம் போதுமான வருமானம் குறித்த திட்டமிடல் இன்றி இத்தகைய பத்திரங்களை வெளியிட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் எதிர்பார்த்த வருமானம் இந்த திட்டத்தில் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால் 2001 ஆண்டு வெளியிடப்பட்ட தலைமை தணிக்கையாளர் அறிக்கையிலேயே இது குறித்து இந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது இந்நிறுவனம் அவற்றையெல்லாம் புறந்தள்ளியிருக்கிறது. ஆனால் இப்போது நிதி நிலைமை அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதால் இந்நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை நீதிமன்றம் அல்லது மக்களின் எதிர்ப்பால் இம்முடிவை இந்நிறுவனம் கைவிட நேர்ந்தால் பணத்தை எப்படி திருப்பித்தருவார்கள் என்று தெரியவில்லை. பாதுகாப்பு சானறளித்த குசராத் அரசும் இவர்களுக்கு உதவ முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால் இத்திட்டம் 2014-ல் நிறைவடையும் போது இவர்கள் முதலீட்டார்களுக்கு திருப்பித்தர சுமார் 8100 கோடி ரூபாய் தேவைப்படும். இது இம்மாநிலத்தின் அன்றைய நிதித்திட்டத்தின் மதிப்பில் பாதியாக இருக்கும். இந்த ஒரு முதலீட்டு திட்டத்திற்காக மட்டும் தனது மொத்த நிதியின் பாதியை இழப்பது ஒரு அரசு சாத்தியமானதாக இருக்காது. அப்போ முதலீட்டாளர்களின் கதி? அதோகதிதான். இன்னொரு அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவெனில், முன் காலத்தில் இதேபோன்றதொரு நிதிச்சிக்கல்கள் வந்தபோது இந்நிறுவனம் மேலும் புதிய பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் நிதி திரட்டி பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்திருக்கிறது. அப்பத்திரங்களும் பெரிய அளவில் விற்பனையாகியுள்ளன என்பதுதான் இதில் பெரிய கொடுமை. அதில் முதலீடு செய்தவர்கள் கதை என்ன ஆகப்போகிறதோ! ஆனால் அப்போதெல்லாம் இம்மாதிரியான பிரச்சினைகளை இந்நிறுவனம் வெளியில் சொல்லவில்லை. இதை தொடர்ந்துதான் 2001ல் தலைமை தணிக்கையாளர் இந்நிறுவனத்தை தனது அறிக்கையில் கண்டித்திருக்கிறார். அரசுத்துறை நிறுவனங்களே இவ்வாறு மக்களை ஏமாற்ற முற்ப்பட்டால் மக்கள் எங்கே போவார்கள் என்று புரியவில்லை! நீதிமன்றம் வழக்கு என்று அலைவதற்கு நடுத்தர வர்க்கத்திற்கு சக்தியிருக்கிறதா?

Thursday 18 December 2008

வளர்ச்சியின் நிறம் சிவப்பு !

அண்மைக் காலங்களில் எழுத்துலகிலும் ஊடகங்களிலும் உலக பொருளாதார தேக்க நிலை குறித்தும் முக்கியமாக அதில் இந்தியா மற்றும் சீனாவின் பங்கு குறித்தும் பரவலாக பல விடயங்கள் அலசப்படுகின்றன. மேலும் மேற்கு தேய்கிறது கிழக்கு வளர்கிறது போனற முழக்கங்களும் தென்படுகின்றன. கூடவே முதலில் வல்லரசாகப் போவது யார்? என்ற கேள்வியும் இந்தியா சீனாவை முந்திவிடும் என்ற அனுமானங்களும் பலமாக வீசுகின்றன. ஆனால் இந்த கருத்துக்களில் எல்லாம் எந்த அளவு உண்மை உள்ளது என்பது பெரிய கேள்வி. என்னைப்போன்ற பாமரனின் பார்வையில் இவை அனைத்தும் வெற்றுக் முழக்கங்கள் என்றே தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை சீனா என்ற நாடு பல ஆண்டுகளுக்குமுன்னாலேயே வல்லரசு நிலையை அடைந்துவிட்டது. இன்றைய சிக்கலான பொருளாதார நிலையினால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிற போதும் சாய்து கிடக்கிற வல்லரசுகளுக்கு முட்டு கொடுத்து நிறுத்தி இருப்பது சீனாதான். இன்றைக்கு வல்லரசு என்று தம்மை முன்னிறுத்திக் கொண்டிருக்கிற நாடுகளுக்கு இணையான ஆயத பலமும் பொருளாதார வளமும் பெற்றிருக்கும் ஒரே ஆசிய தேசம் சீனாதான். அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகள் இதை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியது. ஒலிம்பிக் போட்டியை கானவந்த மேற்கத்தியர்களே சீனாவின் வளர்ச்சியை கண்டு அசந்து போய் விட்டனர். சீனாவை பற்றி அவர்கள் கொண்டிருந்த தவறான அனுமானங்கள் முற்றிலும் தகர்ந்து போயின. இந்த போட்டிகள் சீனாவின் பிரமாண்டத்தையும் சீன மக்கள் தங்கள் நாட்டின் மீது கொண்டிருக்கும் அளவிலா பிணைப்பையும் அவர்களின் ஒற்றுமையையும் பறைசாற்றியது. இப்படி ஒரு ஒலிம்பிக் போட்டியை உலகம் இதுவரை கண்டதுமில்லை இனிக்கானப்போவதுமில்லை. மற்றொரு புறம் சிச்சுவான் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்ப்பட்ட போது அவர்கள் அதிலிருந்து மீண்ட வேகம் குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெற்ற புணரமைப்பு பணிக்காக ஆங்காங் பகுதியில் உள்ள ஒவ்வொரு பணியாளரும் தம் ஊதியத்திலிருந்து ஆயிரம் டாலர் அளவுக்கு வாரி வழங்கியது அந்நாட்டில் உள்ள குடிமக்களின் நாட்டுப்பற்றை பறை சாற்றுகிறது. ஒடுக்குவதாலோ கட்டாயப் ப்டுத்துவதாலோ இவற்றை பெறமுடியாது. உணர்வுப்பூர்வமான உந்துதலினால் மட்டுமே இது சாத்தியம். படம்: சீனாவின் சாலைகள் ஒவ்வொரு முறை சீனா செல்லும் போதும் அந்த தேசத்தின் உள் கட்டமைப்பு வசதிகளைப் பார்த்து நான் அசந்து போய்விடுவேன். வானுயுயர்ந்த கட்டிடங்கள் விசாலமான சாலைகள் விலையுயர்ந்த வாகனங்கள் என்று எல்லாமே பிரமாண்டம்தான். இவ்வளவு பெரிய தேசத்தில் அவர்கள் செய்திருக்கும் தரமான சாலை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் அலாதியானவை. பல்வேறு நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அபாரமானவை. தொழில் வாய்ப்புகள் உள்ளவை சின்னஞ்சிறு நகரமானாலும் அவைகளுக்கு உலகத்தரத்திலான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. ஒரு முறை யீவு எனும் சிறிய தொழில் நகரத்திலிருந்து 250 கிமீ தொலைவில் உள்ள ஆன்சாவ் எனும் நகரத்திற்கு சாலைவழியே பயணிக்க வேண்டியிருந்தது. நகரத்தை விட்டு வெளியில் வந்து நெடுஞ்சாலையில் இணைந்த பிறகு ஒரு இடத்தில் கூட குறுக்கிடும் சாலைகள் இல்லை. இந்த முழுத்தொலைவிலும் ஒரு இடத்தில் கூட மகிழுந்தின் நிறுத்துவிசையை பாவிக்கும் வாய்ப்பே வரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கு நேர்த்தியான சாலைகள் அங்கு இருக்கினறன. இடையிடையே மலையை குடைந்து சுரங்கப் பாதைகள் வேறு. அதுவும் போவதற்கும் வருவதற்கும். சொல்லப்போனால் யீவு என்பது ஒரு சிறிய தொழில் நகரம்தான். அப்படி என்றால் பெரிய தொழில் நகரங்களில் சாலைவசதிகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். படம்: ஆங்காங் – சென்சன் - கான்ச்சோவ் தொடர்வண்டி அதேபோல பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாக செய்து தரப்பட்டிருக்கினறன. இந்த வசதிகள் அனைத்தும் சாதாரண குடிமக்களும் பயன் படுத்துவதற்கு ஏற்ற செலவில் கிடைப்பது இவற்றின் சிறப்பம்சம். இதற்கு எடுத்துக்காட்டாக ஆங்காங் – சென்சன் - கான்ச்சோவ் நகரங்களுக்கு இடையிலான தொடர்வண்டி சேவையை சொல்லலாம். கிட்டத்தட்ட 180 கிமீ வேகத்தில் செல்லும் அள்வுக்கு இந்த தொடர்வண்டியும் அதன் பாதைகளும் அமைந்துள்ளன. இந்த தொடர்வண்டி பயணம் விமான பயணத்தைவிட சிறப்பாக இருக்கும். அதேபோல பெரும்பாலான நகரங்களில் சிறப்பான வாடகை மகிழுந்து சேவைகள் கிடைக்கின்றன. அதேபோல சிறந்த பேருந்து வசதிகளும் இருக்கின்றன. இவ்வளவு மக்கள் தொகையை வைத்துக்கொண்டு எவற்றை எப்படி இவ்வள்வு சிறப்பாக பராமரிக்க முடிகிறது என்று நினைத்தால் வியப்பே மிஞ்சும். படம்: யீவு நகர சாலைகள் அதே போல தொழில் துறையினருக்கு சீன அரசு செய்து கொடுத்திருக்கும் உள் கட்டமைப்பு வசதிகள் சிறப்பானவை. சீனாவின் ஒவ்வொரு தொழில் துறையிலும் நவீன தொழிற் நுட்பங்களை கொண்ட இயந்திரங்களை பயன்ப்டுத்துகிறார்கள். மாறிவரும் காலத்திற்கேற்ப இயந்திரங்களும் தொழிற்நுட்பங்களும் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அரசு தொழிற் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஒரு சிறிய பொருள் ஆனாலும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டாக கைக்கடிகாரத்தை எடுத்துக்கொண்டால் அதன் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிப்பதற்கு தனித்தனியாக ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இவை அந்தந்த பாகத்தினை தயாரிப்பதற்கு ஏற்றவாறு பல நவீன இயந்திரங்களை கொண்டிருக்கினறன. எல்லா பாகத்தையும் ஒரே இடத்தில் தயாரிப்பதில்லை. அதனால் ஒவ்வொருவரும் சிறந்த இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த முடிகிறது. தரமும் சிறப்பாக இருக்கிறது. கைக்கடிகாரத்திற்கு தேவையான ஒவ்வொரு பாகத்தையும் இந்த தொழிற்சாலைகளிடமிருந்து வாங்கி ஒரு இடத்தில் இணைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் உற்பத்தி அதிகரித்து செலவுக் குறைகிறது. ஒவ்வொரு பாகங்களை தயாரிக்கும் அனத்து நவீன இயந்திரங்களையும் ஒருவரே வாங்கி பயன்படுத்துவதால் ஏற்படும் பெரிய முதலீடு மற்றும் பராமரிப்பு செலவு தவிர்க்கப்படுகிறது. இதுதான் அவர்களின் குறைந்த விலையின் ரகசியம். மாறாக சீனாவில் தொழிலாளர்களின் கூலி குறைவு அதனால்தான் உற்பத்தி செலவு குறைவு என்பது சரியல்ல. ஏன் என்றால் இங்கு தொழிளாளர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஊதியம் தவிர்த்து தங்குவதற்கு இடமும் உணவும் சீருடையும் தொழிற்சாலைகளால் வழங்கப்படுகின்றன. மொத்தமே ஐந்து பேர் கொண்ட அலுவலகங்களில் கூட இவை பின்பற்றப் படுகின்றன. மேலும் அரசு நிர்ணயித்த குறைந்த ஊதிய விகிதங்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன. படம்: யீவு கமாடிட்டி மார்க்கெட் கழுகுப் பார்வையில் யீவு நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறு பொருள் மொத்த விற்பனை அங்காடி (யீவு கமாடிட்டி மார்க்கெட்) சீன அரசு சிறு தொழில் துறையினருக்கு செய்து தரும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். உலகிலேயே மிகப்பெரிய சிறு பொருள் அங்காடி இதுதான். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவுடன் அமக்கப்பட்டுள்ள இந்த அங்காடியில் சீனா முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள் தங்களின் நிரந்தர அரங்குகளை அமைத்துள்ளனர். எதில் அமைந்துள்ள மொத்த அரங்குகளின் எண்ணிக்கை 40000. இங்கு குண்டூசி முதல் மிதிவண்டி வரையிலான பொருட்கள் 200000 மேற்பட்ட வகைகளில் விற்பனை செய்ய படுகின்றன. ஒவ்வொரு பொருள் வகைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதனால் வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு தமது வியாபார பொருட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதாக உள்ளது. மேலும் சரியான விலைக்கும் உத்திரவாதம் ஆகிறது. இங்கு நாள் தோறும் 20000 மேற்ப்பட்ட வெளிநாட்டினர் வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி. மொத்த அங்காடியையும் சுற்றிப்பார்க்க சில வாரங்கள் கூட ஆகும் என்றால் பாத்துக்கொள்ளுங்கள்.. படம்: யீவு கமாடிட்டி மார்க்கெட் முன்புறம் தொழில் துறையை ஆதரிக்கும் அதே நேரம் விவசாயத்திற்கும் சம பங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு முறை மகிழுந்தில் செல்லும் போது கிட்டத்தட்ட 50 கிமீ தூரம் சாலையின் இரு புறமும் பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்யப்பட்டிருப்பதை பார்த்தேன். உடன் வந்த சீன நன்பரிடம் இவ்வள்வு பெரிய விவசாயிகள் இங்கே இருக்கிறார்களா என்று அவற்றைக் காட்டிக் கேட்டேன். அதற்கு அவர் இவையெல்லாம் அரசால் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன என்றார். அந்த அளவுக்கு அரசு விவசாயத்தை ஆதரிக்கிறது. இப்படி நாம் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். படம் :சுரங்கப் பாதை இத்தகைய உள் கட்டமைப்புகளும் சாலை வசதிகளும் தொழிற்துறை வசதிகளும் இந்தியாவில் உருவாக இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும். இந்த நிலையில் நாம் சீனாவை இப்ப முந்துவோம் அப்ப முந்துவோம் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய்தான். சீனா என்பது ஒரு வளர்ந்துவிட்ட வல்லரசு. அவர்களின் நிலையை அடைய இந்தியர்களும் இந்தியாவும் இன்னும் தயாராகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் இவ்வாறு சொல்வதால் நான் இந்தியாவை மட்டம் தட்டுகிறேன் என்று பொருளில்லை. வள்ளுவம் சொல்வது போல் எதிரியின் பலவீனங்களைவிட பலத்தை அறிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டுவிட்டு வீன் கற்பனையில் உழல்வது நம் வளர்ச்சிக்கு உதவாது. சீனாவை நாம் முந்தவேண்டும் என்றால் இந்தியர்கள் இன்னும் அதிகமாக உழைக்கவும் திட்டமிடவும் வேண்டும். உண்மையில் எனக்கு பொதுவுடமை சித்தாந்தம் குறித்தோ அவற்றின் அடிப்படை கோட்பாடுகள் குறித்தோ எனக்கு சிறிதும் புரிதல் இல்லை. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சனநாயகத்திற்கும் பொதுவுடமைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. என்னை பொறுத்தவரை எந்த ஒரு ஆட்சி முறையையும் நல்லது கெட்டது என்று வெளியில் இருப்பவர்கள் கணிப்பதைவிட அதை ஏற்றுக்கொண்டிருக்கும் மக்கள் அதை உறுதிப்படுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். எந்த ஆட்சிமுறை அதன் மக்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் நல் வாழ்க்கையையும் அளிக்கிறதோ அதுவே சிறந்த ஆட்சிமுறை என்று நான் சொல்வேன். அது பொதுவுடைமை ஆட்சியா அல்லது சனநாயக ஆட்சியா என்பதெல்லாம் அடுத்ததுதான். ஒரு வேலை நம்மூரில் இருக்கும் பொதுவுடமைவாதிகள் என்று தம்மை கூறிக்கொள்பவர்கள் பொதுவுடமை சித்தாந்தம் குறித்து நமக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி விட்டார்களோ என்று கூட சில நேரம் எனக்குத் தோன்றும். இதை நான் முக்கியமாக இங்கே குறிப்பிடுவதற்கான காரணம் இக்கட்டுரையை படிப்பவர்கள் என்னையும் அவர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதால்தான்.

Monday 15 December 2008

ஆக்சுபோர்டு பட்டமும் ஆண்டியப்பன் கோவனமும் !

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று நம் ஊர்க்காட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம்ம ஊரு விவசாயிகளுக்கு நல்லாப் பொருந்தும். பாரட்லா படித்த நம் அரசியல்வாதிகளிடம் ஒலிவாங்கி கிடைத்துவிட்டால் போதும் ஒரு விசயத்தை மறக்காமல் கூவி விட்டுப் போவார்கள். அது விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு அவர்களின் முன்னேற்றத்துக்கு நாங்கள் ஆனதை செய்வோம் என்பதுதான். அது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் பட்ட பால பாடம். அதனால் அதை மறக்காமல் ஒவ்வொரு முறையும் கூவி விட்டு செல்வார்கள். அதன் பிறகு விவசாயிகளைப் பற்றி அவர்கள் மறந்தும் கூட நினைப்பதில்லை. இது அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட இரண்டாம் பாடம். ஆம்! விவசாயிகளை நினைத்தால் ஆட்சி நடத்த முடியாது என்பதுதான் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் ப்ட்டிருக்கிறது. மாத்திக்கட்ட கோவனம் கூட இல்லாத விவசாயிக்கும் இவர்கள் பேச்சையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள நேரமோ திருப்பிக்கேட்க சக்தியோ இருப்பதில்லை. ஊரை அடித்து உலையில் போடும் ரிலையன்சு சகோதரருக்குள் சக்காளத்தி சண்டை என்றால் கூட பிரதமரே இருக்கின்ற எல்லா வேலையையும் போட்டுவிட்டு சமாதானம் பேச போய்விடுவார். காரணம் அவர்கள் சக்காளத்தி சண்டையினால் பங்கு சந்தை எனும் சூதாட்டம் படுத்துவிடுமாம். அதனால் நாட்டின் பொருளாதாரமே ஆடிப்போய்விடுமாம். ஆனால் ஊருக்கே உணவு தரும் விவசாயின் பிரச்சினைகளை எத்தனை மேடை போட்டுக்கத்தினாலும் கதறினாலும் அவரின் செவிட்டு காதுகளுக்கு அவை கேட்பதே இல்லை. நம் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை விவசாயிகள் என்பவர்கள் ஒரு பிச்சைக்கார கூட்டம். இவர்கள் போடும் கடன் தள்ளுபடி மற்றும் மானியம் போன்ற பிச்சைகளை பொறுக்கிக்கொண்டு ஓட்டுப் போடும் கூட்டம். இது அவர்களுக்கு அமரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் படித்த பொருளாதாரம் சொல்லிக்கொடுத்த பாடம். நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதமே உள்ளத் தொழில் துறையினருக்கு பிரச்சினை என்றால் உடனே அம்பானியையும் ஆசீசு பிரேம்சீயையும் பக்கத்தில் உட்கார வைத்து கூட்டம் போடுவார் நம் பாரதப் பிரதமர். ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் மூலாதாரமான விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டால் கூட அவர்களின் பிரதிநிதிகளை கூப்பிட்டு பேச அவருக்கு தோன்றுவதே இல்லை. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தேர்தல் வந்தால் செலவுக்கு இந்த பஞ்ச பரதேசிக் கூட்டமா பொட்டி கொடுக்கப் போகிறது. நம்ம நாட்டு அரசுகளும் அதன் மந்திரி பிரதானிகளும் விவசாயிகளுக்காகவும் விவசாய தொழிலாளர்களுக்காகவும் கொண்டுவரும் திட்டம் எதுவும் அவர்களுக்குப் முழுமையாகப் போய் சேருவதில்லை என்பது அவர்களுக்கே நன்குத் தெரியும். இத்திட்டங்களின் நோக்கமும் அது அல்ல. இத்திட்டங்கள் அனைத்தும் மேல் மட்டத் தலைவருக்கு கொடிபிடிக்கும் அடி மட்டத்தலைவர்கள் பணம் பார்க்க வேண்டி கொண்டுவரப்பட்டவை. ஆனால் இத்திட்டங்கள் தவறாமல் இவர்களின் ஆட்சியின் சாதனைப்பட்டியலில் இடம் பிடிக்கும். அதையும் நம்பி நாமும் வாக்களித்துவிட்டு வந்துவிடுவோம். அண்மையில் குறைந்தப்பட்ச வேலைத்திட்டம் என்ற திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் ஊரகப்பகுதியிலுள்ள விவசாயக் கூலித் தொழிளாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் 90 நாட்கள் நேரடி வேலை தருவதுதான். இதன் மூலம் ஊரக ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரி சுத்தப் ப்டுத்தப்பட திட்டமிட்ப்பட்டன. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் ஏற்கனவே ஊரகப்பகுதிகளில் விவசாய பணிகளைச் செய்வதற்கு கூலித் தொழிளாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் அவர்களுக்கு குறைந்த பட்ச வேலை கொடுக்கிறார்களாம். சரி வேலை கொடுத்தார்கள். கூலியை ஒழுங்காக கொடுத்தார்களா? நாளொன்றுக்கு அரசு நிர்ணயித்து வழங்கியது 80 ரூபாய். ஆனால் தொழிளாளர்களுக்கு வழங்கப்பட்டதோ இதில் பாதிதான். மீதியை இவர்களுக்கு வேலை கொடுத்த ஊராட்சித் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் தார்மீக உரிமையோடு பகிர்ந்து கொண்டார்கள். சரி கூலிதான் இப்படி வேலையாவது ஒழுங்காக நடந்ததா? ஒழுங்காக நடந்திருந்தால் ஒரு வார மழைக்கே நம் மக்கள் இந்த பாடு பட வேண்டியிருக்குமா? நம் ஆக்சுபோர்டு பொருளாதார நிபுணர் முன்னாள் நிதி மந்திரி இந்நாள் உள்துறை ம்ந்திரி 60000 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக்கடன் தள்ளுபடி அறிவித்தார். இதனால் உண்மையிலேயே சிரமப்படும் விவசாயிகள் பயனடைந்தார்களா என்று உங்களுக்கு தெரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள். உண்மை தெரிய வரும். இதில் அதிகம் பயனடைந்தவர்கள் விவசாயத்தைக் காட்டி வேறு தொழிலுக்கு கடன் வாங்கியர்கள்தான். கடன் தள்ளுபடி என்றால் திருப்பி கட்டியவன் கட்டாதவன் அனைவருக்கும் அல்லவா வழங்கியிருக்க வேண்டும். கடினப்பட்டு வாயை வயிற்றைக்கட்டி கடனை திருப்பிக் கட்டியவனுக்கு தள்ளுபடியில்லை. திருப்பிக்கட்டாமல் கல்தா கொடுத்தவனுக்குத்தான் தள்ளுபடி. இந்த கடன் தள்ளுபடியால் விவசாயி பயன் அடைந்தானோ இல்லையோ அவர்களுக்கு உண்மையிலேயே உதவியாக இருந்த கூட்டுறவு வங்கிகள்தான் திவால் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிடம் விவசாயிகள் கடன் கேட்டு சென்றால் மிகப் பெரிய கும்பிடு போடுகிறார்கள். இவர்களின் பொருளாதார நிபுணத்துவத்தின் லட்சனத்தைப் பார்த்தீர்களா? எல்லாம் சரி. மேலை நாட்டில் பொருளாதாரம் படித்து விட்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த பொருளாதார நிபுணர்களால் நம் விவசாயிகளுக்கு உதவிதான் செய்ய முடியவில்லை. உபத்திரவமாவது கொடுக்காமல் இருந்தால் தலையெழுத்தே என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் அவன் கட்டியிருக்கும் கந்தைக் கோவனத்தையும் அவிழ்க்கப்பார்க்கிறார்கள். அதைத்தான் நம்மால் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை. பெப்சி கோக் போன்ற அமரிக்க நிறுவனங்கள் மக்களின் உடல் நலத்தை முற்றிலும் கெடுக்கக்கூடிய பானங்களை சொற்ப செலவில் தயாரித்து கொள்ளை லாபத்திற்கு விற்கலாம். 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய சிமண்டை சிண்டிகேட் எனும் கூட்டு சேர்ந்து 300 ரூபாய்க்கு விற்று கூட்டுக் கொள்ளையடிக்கலாம். அதையெல்லாம் தட்டிக்கேட்க இந்த அரசுகளுக்கு யோக்கியதையில்லை. இது எல்லாம் நம் பொருளாதார சூரப்புலிகளின் சீழ் பிடித்த காமாலைக் கண்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியே மக்கள் கத்தி கதறி இவர்களின் செவிட்டு காதில் ஓதினாலும் மேற்படி சிண்டிகேட் கூட்டுக் கொள்ளையர்களிடம் விலையை குறைக்கச் சொல்லி மாறி மாறி கருணை மனு போடுவார்கள். கண்ணுக்கு கண்ணெதிரே நடக்கும் பொருளாதார அட்டூழியங்களை தடுக்க மகாகணம் பொருந்திய இவர்களுக்கு திராணி கிடையாது. ஆனால் நம் விவசாயிகளுக்கோ தான் இரத்த வேர்வை சிந்தி விளைவிக்கும் விவசாய விளைப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை கிடையாது. இந்த சீழ் பிடித்து புரயோடிய அரசின் அதிகாரிகளும் இடைத்தரகர்களும்தான் விவசாயப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். இடையில் இருப்பவர்கள் எல்லாம் கொழுத்து பெருக்க உற்பத்தி செய்த விவசாயிக்கு மிஞ்சியது ஒட்டிய வயிரும் கந்தை கோவணமும்தான். என்னவோ இழவு! இவர்கள் விலையை நிர்ணயம் செய்து தொலையட்டும். அதில் ஒரு நியாயம் இருக்கவேண்டாமா? சென்ற வருடம் 40 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் இந்த வருடம் 55 ரூபாய். ஆனால் சென்ற வருடம் ஒரு டன் கரும்புக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 1036 ரூபாய். இந்த வருடம் 1050 ரூபாய். உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் விற்பனை விலை இப்படி இருந்தால் விவசாயி எப்படி தாக்குப் பிடிக்கமுடியும்? மேலை நாடுகளில் பட்டம் பெற்ற நம் பொருளாதார சூரப்புலிகளுக்கு இந்த கணக்கு புரியாதா? கேட்டால் விவசாய இடு பொருட்களுக்கு மானியம் வழங்குவதால்தான் இப்படி என்கிறார்கள். சரி! மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினார்களா? அதுவும் இல்லை. ஆண்டு ஒன்றிற்கு உர மாணியமாக சுமார் 125000 கோடி அரசால் வழங்கப் படுகிறது. ஆனால் இது உரம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்குத்தான் நேரடியாக வழங்கப்படுகிறது. அவர்களும் ஒன்றுக்கு இரண்டாக உற்பத்திக் கணக்கைக் காட்டி மாணியத்தை கொள்ளையடித்து விடுகிறார்கள். இப்படி ஏன் தலையை சுற்றி மூக்கை தொடவேண்டும்? நேரடியாக விசாயிகளுக்கு மாணியம் கொடுத்தால் என்ன? வேறு எதற்காக நம் மந்திரி பிரதானிகளின் பொட்டி வாங்கும் வேலையை எளிதாக்கத்தான். பயிர் செய்ய ஆற்றில் நீரோ மழையோ இல்லை. நிலத்தடி நீரை எடுக்க மின்சாரமும் தட்டுப்பாடு. களையெடுக்க உழுதுப்போட ஆட்களும் இல்லை. நவீன இயந்திரங்களை வாங்கி விவசாயம் செய்ய வசதியும் இல்லை. இவற்றை எல்லாம் கடந்து தன் சொந்த உழைப்பில் விளைவித்தாலும் விளைப்பொருட்களுக்கு கட்டுப் படியாகும் விளையும் இல்லை. பார்த்தான் விவசாயி இந்த மண்ணையே நம்பியதால்தானே தனக்கு இந்த நிலைமை என்று தன் பிள்ளைகளை எப்பாடு பட்டாவது படிக்க வைத்து பட்டனத்துக்கு அனுப்பி விட்டான். இன்று இரண்டாம் தலைமுறை விவசாயிகளே நாட்டில் இல்லை. விவசாயத்தில் ஈடு பட்டிருக்கும் இந்த ஒரு தலைமுறையும் போய்விட்டால் அப்புறம் சிறு குறு விவசாயிகளை தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். நிலைமை இப்படியே போனால் பாரம்பரிய விவசாயம் எனும் தொழில் நம் நாட்டிலே இல்லாமலே போய்விடும். இதைப் பற்றியெல்லாம் பட்டனத்தில் வாழும் நம் துரைமார்களுக்கு கவலையில்லை. அரிசி மரத்தில் காய்க்குமா செடியில் விளையுமா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. ஏன் என்றால் இன்றுவரை அவர்களுக்கு தேவையானவை பணம் கொடுத்தால் கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது அது எங்கிருந்து வந்தால் அவர்களுக்கென்ன? அதை விளைவித்தவன் பட்டினியாகக் கிடந்தால் அவர்களுக்கென்ன? ஆனால் காலம் இவர்களை இப்படியே அனுபவிக்க விட்டுவிடாது. மனிதன் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை அதுதான் அவனுக்கு கற்றுக் கொடுக்கும். சிறு வியாபாரிகள் சிறு தொழில்கள் என்று அனைத்தையும் வின்று விழுங்கிய டாடா பிர்லா ரிலையன்சு போன்ற ஆதிக்க சக்திகளும் பன்னாட்டு பன்னாடைகளும் இன்று சிறு குறு விவசாயிகளையும் விழுங்கக் காத்திருக்கின்றன. நாட்டின் முழு விவசாயமும் இவர்களின் கட்டுப்பாட்டுக்கு போகும் ஆபத்து காத்திருக்கிறது. இதை அறியும் பட்டினத்து துரைமார்கள் இன்னும் ஆனந்தப்படக்கூடும். ஏன் என்றால் ரிலையன்சு பிரசு கடையில் பொருட்கள் இன்னும் விலை குறைவாகக் கிடைக்கக்கூடும் என்று. ஆனால் அப்ப்டியெல்லாம் ஆனந்தப்பட விட்டுவிட மாட்டார்கள் நம் முதலாளிகள். அப்படி ஒரு நிலைமை வந்தால் அன்று அவர்கள் வைத்ததுதான் விலை. இன்று விவசாயப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அரசு அன்று அவர்கள் போடும் ரொட்டித்துண்டுக்கு வாலாட்டிவிட்டு தேமே என்று போய்விடுவார்கள். ஆகவே நம் சிறு குறு விவசாயிகளை காக்கவேண்டியது நம் அவசரக்கடைமை. மனசாட்சி இருக்கும் அரசியல்வாதிகள் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். பொதுமக்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் நாட்டுப் பொருளாதார சூரப்புலிகள் ஆக்சுபோர்டிலும் கேம்பிரிட்சிலும் படித்து விட்டு உலகப் பொருளாதார தேக்க நிலையை போக்க வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் வல்லரசு கணவு வேறு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்த படோபங்கள் அனைத்தையும் ஒரமாய் சுருட்டி வைத்துவிட்டு இந்த சிறு குறு விவசாயிகள் அறுகிப்பொவதை தடுத்து நாட்டின் அடுத்த வேளை கஞ்சிக்கு வழி செய்தால் தேவலாம். கூடிய விரைவில் இந்தியர்களுக்கு சந்திரனில் குடியிருக்க அடுக்ககம் கிடைக்கலாம். ஆனால் பூமியில் குடிப்பதற்கு கஞ்சிதான் கிடைக்கப்பொவதில்லை!

Monday 1 December 2008

காயமே இது பொய்யடா! ( டவுன் சின்ரோம் பற்றிய பதிவு)

வேகமாக போய்க்கொண்டிருக்கிறது அவசர உலகம். அறிவியல் கண்டுபிடிப்புகள் நாள்தோறும் மனிதர்களுக்கு புதிய புதிய வசதிகளை நாளும் வாரி வழங்கிக்கொண்டுருக்கிறது. இந்த புதிய புதிய வசதிகள் மனிதர்களை இயற்கையிலிருந்து வெகுதூரம் கொண்டுசென்று விட்டது. அதானால்தானோ என்னவோ இயற்கையும் மனிதனுக்கு இன்னும் பல சவால்களை விடுத்துக்கொண்டே இருக்கிறது. என்னதான் பிரபஞ்ச தொற்றத்தின் சூட்சுமங்களை கண்டுபிடிக்கிறோம், கடவுள் துகளை உருவாக்குகிறோம் என்று மனிதன் சொன்னாலும், இன்னும் மனித இனத்திற்கான பல முக்கிய சவால்களின் முடிச்சுகளை அவனால் அவிழ்க்க முடியவில்லை என்பதே உண்மை. அப்படியே முடிச்சுகள் அவிழ்ந்தாலும் அவற்றை தடுப்பதற்கான் வழி தெறியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறை ஆங்க்காங்கு செல்லும் போதும் எனது வங்காள நன்பர் ஒருவரை சந்திப்பது வழக்கம். கடந்த பதினைந்து வருடமாக அவர் அங்கே வசிக்கிறார். வேலைகள் முடிந்த பிறகு மாலை நேரங்களில் ஒய்வாக மணிகணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அவர் எண்ணைவிட அதிக விடய ஞானம் உள்ளவர் என்பதால் அவரிடமிருந்து பல புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அவரிடம் என் நவீன மாற்றங்கள் குறித்த எனது எண்ணத்தை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் மாறிவரும் காலத்திற்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம் என்றார். ஆனால் எந்த நவீன வசதியும் நாட்டின் கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும். இல்லையெனில் அது எதிர்மறை பலனைத்தான் தரும் . இந்த நிலை இந்தியாவில் இல்லை என்றார். மேலும் இந்தியர்கள் என்னதான் அறிவுசார் ஆளுமைகள் பெற்றிருந்தாலும் அது மக்களுக்கு முழு அளவில் உதவவில்லை. பல மருத்துவ வசதிகள் இன்னும் இந்தியாவை சென்றடயவில்லை. அப்படியே கிடைத்தாலும் அது நம்மைப்போல சாதாரண மனிதர்களுக்கு கானல் நீர்தான். இது நவீன முன்னேற்றங்கள் இந்தியாவில் இன்னும் பரவலாக்கப்படவில்லை என்பதற்கான் சான்று என்றார். இதற்கு எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டது “டவுன் சின்ரம்” என்னும் நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதியை பற்றித்தான். இந்நோய் பற்றி நான் முன்பே அறிந்திருந்தாலும் இது விதியின் செயல் என்றும் இதை நம் சக்தியால் கண்டுகொள்ள முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் இதை கருவிலேயே கண்டுபிடித்து அந்த கருவை தவிர்த்து விடும் வாய்ப்புகள் தற்காலத்தில் உள்ளன என்றார். இந்த விடயங்கள் எனக்கு மிகவும் புதியவை. என்னை போன்றே பலரும் இருக்கக்கூடும் எண்ணத்தில் இது குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டும் என்பதற்க்காகத் தான் இந்த பதிவு. ஏதேனும் தொழிற்நுட்ப தவறுகள் இருந்தால் நன்பர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். டவுன் சின்ரோம் என்னும் நோய் மனிதனின் மரபணுக்களில் ஏற்படும் கோளாறுகளினால் உருவாகிறது. இந்நோய் கண்டவர்கள் மாறுபட்ட முகத்தோற்றத்துடனும் மூளை வளர்ச்சி குறைபாடுகளுடனும் கானப்படுவர். தட்டையான முகம், மேல் நோக்கி வளைந்த கண்கள், அழுந்திய மூக்கு மற்றும் துருத்திய நாக்கு போனறவை இவர்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும். இவர்களை இருதய நோய்கள் மற்றும் லுக்குமியா நோய்கள் எளிதில் தாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. முறையான பராமரிப்பு மற்றும் பயிற்ச்சிகள் மூலம் இவர்களும் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள இயலும். பண்டைய காலந்தொட்டே இந்நோய் மனிதர்களை தாக்கியதற்கான குறிப்புகள் வரலாற்றுப் பக்கங்களில் கானப்படுகிறது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் டாக்டர் லாங்டான் டவுன் என்பவர்தான் இந்நோய் குறித்த முறையான தகவல்களை முதன் முதலில் வெளியிட்டார். அதுமுதற் கொண்டு இந்நோய் அவரது பெயாராலேயே டவுன் சின்ரம் என்று அழைக்கப்படுகிறது. இவரே இந்நோயின் தந்தை என்று அறியப்படுகிறார். அது முதலே இந்த நோய்ப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடத்தப்பட்டு வந்தன. இறுதியாக 1959 ஆம் ஆண்டு செரோம் லியோன் எனும் பிரஞ்சு மருத்துவர் இந்நோய் குரோமோசோம்களில் ஏற்படும் ஒரு குறைபாட்டினால் உருவாவதை கண்டுபிடித்தார். இது இந்நோயை பற்றிய அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவியது. மனிதனின் உடலானது பல கோடி செல்களின் கூட்டமைப்பு என்பது நமக்குத் தெரியும். இந்த செல்களின் மையப்பகுதி நியுக்குளியசு என்று அழைக்கப்ப்டுகிறது. இங்குதான் நமது பாரம்பரிய குணங்களை நிர்ணயிக்கினற மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணுக்கள் X வடிவிலான அடுக்குகளாக உள்ளன. இவை குரோமோசோம் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நியூக்ளியசிலும் 23 சோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் சரிபாதி குரோமோசோம்கள் தாயிடமிருந்தும் மறுபாதி குரோமோசோம்கள் தந்தையிடமிருந்தும் பெறப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள அடுக்கில் சரியாக 21 ஆம் சோடியில் ஏற்படும் கோளாறினால் இந்நோய் ஏற்படுகிறது என்று செரோம் லியோன் கண்டுபிடித்தார். அதாவது இந்நோய் உள்ளவர்களுக்கு மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை 46க்கு பதிலாக 47 இருக்கும். குரோமோசோம் அடுக்கில் சரியாக 21 ஆம் சோடியில் இரண்டு குரோமோசோம்களுக்கு பதிலாக மூன்று குரோமோசோம்கள் இருக்கும். இந்த கோளாறு மனிதர்களுக்கு டவுன் சின்ரம் எனும் நோயை உருவாக்குகிறது. இந்த நோயிக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்க படவேயில்லை. ஆனால் இந்த நோயை கருவிலேயே கண்டறிந்து இந்நோய் இருப்பின் கருவை கலைத்துவிடும் நடைமுறை மேலை நாடுகளில் உள்ளது. இதற்கு இரண்டு பிரிவான சோதனை முறைகள் நடைமுறையில் உள்ளன. 1. மேலாராய்தல் முறை (screening tests) 2. மரபனு பகுப்பாய்வு முறை (diagnostic tests) மேலாராய்தல் சோதனை – ட்ரிபிள் ச்கிரின் (Triple Screen )மற்றும் ஆல்பா ஃபெட்டோபுரோட்டின் ப்ளசு (Alpha-fetoprotein Plus ) ஆகிய சோதனை முறைகள் இதில் அடங்கும். கருவுற்ற தாயின் ரத்தத்தை எடுத்து பரிசோதித்து இந்நோயின் தாக்கம் குறித்து முடிவு செய்யப்படுகிறது. இச்சோதனைகள் 15 முதல் 20 வார கர்ப்பகாலத்தில் செய்யப்படுகின்றன. இந்த முறைகள் மூலம் இந்நோயை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் 60% ஆகும். மரபனு பகுப்பாய்வு முறை – குரோனிக் வில்லசு சாம்பிளிங் (சி.வீ.சா – 8 முதல் 12 வார கரு) (chorionic villus sampling (CVS)) அமீனோசெண்டீசு ( 12 முதை 20 வார கரு) (amniocentesis ) பியுபி சாம்பிளிங் சோதனைகள் ( 20 வாத்திற்கு மேற்ப்பட்ட கரு) (percutaneous umbilical blood sampling (PUBS)) மேற்கண்ட மூன்று சோதனைகளும் இப்பிரிவில் அடங்கும். இச்சோதனைகளை செய்ய மிகுந்த பயிற்ச்சியும் எச்சரிக்கையும் தேவை. இல்லாவிட்டால் அது தாய் மற்றும் சிசுவின் உயிருக்கு ஆபத்தாய் முடியும். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் பிளசண்ட்டா எனும் உயிர் திரவம் மிகக்கவனமாக சேகரிக்கப்பட்டு மரபனு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இம்முறையின் மூலம் 98-99% துல்லியமாக இந்நோயின் தாக்குதலை அறியமுடியும். இந்நோய் மத இன நிற தேச வேறுபாடின்றி யாவரையும் தாக்குகிறது. ஆனால் இந்நோய் தாக்குண்டவர்களை ஆராய்ந்ததில் 80% பேர் 35 வயதிற்கு மேற்பட்ட தாயின் கர்ப்பத்தில் உருவானவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. தாயின் வயது அதிகரிக்க அதிகரிக்க இந்நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுவும் இந்த நோய் தற்போது 1:800 என்ற விகித்தில் அதாவது பிறக்கின்ற 800 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்நோயின் தாக்குதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது மிகவும் வருந்த தக்க செய்தி. அதனால்தான் நாம் அனைவரும் இந்நோயைப்பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமாகிறது. மாறிவரும் சமுதாய சூழல்களால் பெண்களின் திருமண வயது கணிசமாக உயர்ந்திருக்கிறது. குடும்பத்திற்காக பொருளீட்ட வேண்டியும் குடும்பத்தின் பொறுப்புகளை சுமக்க வேண்டியும் பல பெண்கள் தங்களின் திருமணத்தை தள்ளிப்போடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருமண பந்தத்தின் மீது பிடிப்பில்லாத நாகரீக மங்கையரும் திருமணத்தை முடிந்தவரை தள்ளிப்போடுகிறார்கள். இவர்கள் திருமணத்திற்கு பின் முதல் கற்பமடைய 35 வயதிற்குமேல் ஆகிறது. இவர்களின் குழந்தைகளுக்கு இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இச்சோதனைளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த வசதிகள் இந்தியாவில் கிடைக்கினறனவா என்று தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் இட்டால் அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டும். நன்றி!

Friday 28 November 2008

ஐயாம் கோயிங் டூ சுடுகாடு - தமிழ்

சில நாட்களுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்த் தாத்தா திரு நன்னன் அவர்களின் தமிழ்ப் பண்ணை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அய்யா அவர்கள் சொன்னக்கருத்து ஒன்றை கேட்டபோது சுருக்கென்று முள் தைப்பது போன்று உணர்ந்தேன். தன் சொந்த மொழியை சிதைப்பதில் தமிழனுக்கு நிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றார். இது எவ்வளவு உண்மை என்பதை நீங்கள் கண நேரம் சிந்தித்தாலே உங்களுக்கு புலப்படும். உலகத்தில் உள்ள எந்த ஒரு இனமும் தன் மொழியில் பிறன் மொழியை கலந்து பேசுவதில்லை. ஒன்று தன் மொழியில் பேசுவார்கள் அல்லது பிறன் மொழியில் பேசுவார்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து வாந்தி எடுப்பது போல் யாரும் பேசுவதில்லை.

 தவிர்க்க முடியாது சில சமயங்களில் பிற மொழியில் உள்ள சில வார்த்தைகளை கையாளும் போது கூட அவற்றை தன் மொழியின் ஒளியமைப்பிற்கு ஏற்ப மாற்றி கொள்வார்கள். ஆங்கிலத்தில் உள்ள பல சொற்களின் வேர் சொற்கள் இலத்தின் மொழியில் உள்ளவை. அதற்காக அவற்றை அவர்கள் அப்படியே பயன் ப்டுத்துவது இல்லை. பக்கத்திலிருக்கும் புதுச்சேரியை எட்டிப்பார்த்தால் இது உங்களுக்குத் தெரியவரும். இங்கே வந்த பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை பாண்டிச்சேரி என்றும் உருளையன்பேட்டை என்பதை ஒர்லயன்பெட் என்றும் தன் வாயில் நுழைந்தவாறுத்தான் பேசினார்கள் எழுதினார்கள். தமிழை ”டமில்” என்றுதான் ஆங்கிலேயர்கள் எழுதினார்கள். அய்யோ ”ழ்” க்கு இணையான ஆங்கில எழுத்து இல்லையே அதனால் ”ழ்” ழை அப்படியே ஆங்கிலத்துக்கு தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றா நினைத்தார்கள். இல்லையே! நாம்தான் சற்றுக்கூட கூச்ச நாச்சமே இல்லாமல் செத்துவிட்ட மொழிகளில் இருந்து கூட எழுத்துக்களை பொறுக்கி தமிழில் சேர்த்து தமிழை சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம். 26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கிலம் உலகையாளும் போது 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியைக்கொண்டு நம்மால் இயல்பாக பேசக்கூடமுடியாதா?

மேலும் இந்த மொழிக்கொலையை சீரழிப்பை செய்வதில் முன்னனியில் இருப்பவர்கள் தாய்த்தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் ஆகிய நாம்தான். ஈழத்தமிழர்களோ அல்ல பிற நாடுகளில் குடியேறிய பழந்தமிழர்களோ இந்த தவறை செய்வதில்லை. இந்தோனேசியாவில் வாழும் பூர்வீகத்தமிழர்களில் பெரும்பாலோனோர் தமிழை மறந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் பலர் கூடியமட்டில் இல்லங்களில் தமிழை பேசுகின்றனர். அவர்களின் குழந்தைகள் பெற்றோரை அம்மா, அப்பா என்றுதான் விளிக்கிறார்கள். மம்மி டாடி என்று ஒரு போதும் அழைக்க கண்டதில்லை.அவர்களின் வீட்டுக்குச் சென்றால் முதலில் அவர்கள் கேட்பது என்ன தண்ணி குடிக்கிறிங்க? காபித்தண்ணியா டீத்தண்ணியா என்பதுதான். என்ன டிரிங்க் வேனும் என்று கேட்டதே இல்லை. அரிசி சோற்றை சோறு என்றுதான் சொல்வார்களெ தவிர சாதம் என்றுச்சொல்லி நான் கேட்டதே இல்லை. கோழிக்கறி என்று சொல்வார்களே தவிர சிக்கன் கறி என்று சொல்லுவதில்லை.

 இந்த நாட்டில் பேசும் மலையக மொழி தமிழை விட பல ஆயிரம் ஆண்டுகள் பிந்தியதுதான். தமிழைப்பொன்று ஆழமான் இலக்கண வரம்போ சொல் வளமோ இல்லாத மொழிதான். அவ்வளவு ஏன்? சொந்த எழுத்துருக்கூட இல்லாமல் ஆங்கில எழுத்துருக்களைத்தான் பயன் படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் கூட தம் மொழியின் ஊடே மற்ற மொழிகளை கலந்து ஒருபோதும் பேசுவதில்லை. தம் மொழியில் இல்லாத சொற்களை பல மொழிகளில் இருந்து பெற்று பயன் படுத்தும் போதும் அவற்றை தம் மொழியின் ஒளியமைப்புக்கு ஏற்ற முறையில் மாற்றித்தான் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக பெசிலிட்டி என்ற வார்த்தையை பெசிலிட்டாச் என்ற உச்சரிப்போடுதான் பயன்படுத்துகிறார்கள் எழுதுகிறார்கள். நன்றாக கவனியுங்கள்! தம் மொழியில் இல்லாத ஒரு வார்த்தைக்குத்தான் இந்த ஏற்பாடு. தம் மொழியில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு மாற்றாக இன்னொரு மொழியின் வார்த்தைகளை ஒரு போதும் பயன் படுத்துவதில்லை. எனக்கு சீனர்கள் சப்பானியர்கள் ஐரோப்பியர்கள் என்று பல நாட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. அவர்கள் பேசுவதையும் நான் உண்ணிப்பாக கவனிப்பேன். அவர்களும் தப்பி தவறி கூட பிற மொழியை கலந்து பேசுவதில்லை. ஆனால் உலக நாகரீகங்களுக்கு எல்லாம் முதன்மையான நாகரீகத்தை சேர்ந்த நாம், உலகிலேயே தொன்மையான மொழிக்கு சொந்தக்காரர்களாகிய நாம் சற்று கூட சுய சிந்தனையில்லாமல் தொட்டதிற்கெல்லாம் ஆங்கிலத்தை கலந்து துப்புகிறோம். என்னால் பேசுகிறோம் என்று சொல்லமுடியவில்லை. ”ஐ யாம் கோயிங் டூ பள்ளி” என்று ஒரு ஆங்கிலேயரிடம் சொன்னால் அவர் வாயாலேயா சிரிப்பார்? சிந்தித்து பாருங்கள். ஆனால் கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ இன்றி நான் ச்கூலுக்கு போறேன், ஆபிசுல இருக்கேன், பைவ் அன்றட் இருக்கா, பேசா இருக்கேன் என்கிறோம். இந்த வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகள் தமிழில் இல்லையா? தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமா? நம் சொந்த தாய் மொழியை தேவையே இல்லாமல் கொல்வதுதான் நாகரீகமா? நாம் எல்லாம் படித்தவர்கள்தானா? நாம் சிந்திக்க வேண்டும். லண்டனில் இருந்தோ அல்லது மலையத்திலிருந்தோ வெளிவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாவது “சீ யு நெக்ச்ட் வீக். டில் தென் பாய் பிறம் குரங்கு” என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? ஆனால் நம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளை பாருங்கள். ஏதொ அமரிக்காவில் நிகழ்ச்சி நடாத்துவதுபோல் தொட்டதுக்கெல்லாம் ஆங்கிலத்தில் பீற்றிக் கொள்கிறார்கள்.

சென்ற வாரம் இந்தோனேசியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் முக்கிய புள்ளி ஒருவரை அலுவல் விடயமாக சந்திக்க சென்றேன். அவர் ஒரு இந்தொனேசிய தமிழர். நான் மெதுவாக ஆங்கிலத்தில் உரையாடலை துவக்கினேன். உடனே அவர் “ஆர் யு பிரம் சென்னை” என்றார். நான் ஆமாம் என்றேன். அப்போ தமிழிலேயே பேசலாமே என்றார். பிறகு நாங்கள் உரையாடலை தமிழில் தொடர்ந்தோம். உரையாடல் முழுக்க அலுவல் சார்ந்தது என்ற போதும் அவர் ஒரு தடவை கூட ஆங்கிலத்தை துணைக்கு அழைக்கவில்லை. இயல்பான தமிழில் சாதாரணமாக பேசினார். ஆனால் என்னால் ஆங்கில பிரயோகங்களை பல் இடங்களில் தவிர்க்கவே இயலவில்லை. இது எனக்கு மிக்க அவமானமாக இருந்தது. தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் படித்து என்ன பயன்? தாய்த்தமிழை கொலை செய்யும் மகா பாதகர்களாகத்தானே இருக்கிறோம். நான் இவ்வாறு எழுதுவதால் நான் பிற மொழிகளை கற்பதற்கு எதிரானவன் அல்ல. பன்மொழி பேசும் திறன் என்பது குறிப்பாக இப்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் நம் சொந்த தாய் மொழியை கெடுத்து குட்டிச்சுவராக்கித்தான் பிறன் மொழியை பழக வேண்டும் என்பது அபத்தம் இல்லையா? சிந்திப்போமா? தமிழ் இனி மெல்லச் சாவதை தடுப்போமா?

Sunday 16 November 2008

இதுதான் இந்தியாவின் பெருமையா?

ஒரு சில மாதங்களுக்கு முன் எனது நன்பர் ஒருவரிடமிருந்து “பாகிசுதானிய எழுத்தாளர் ஒருவரின் எழுச்சிமிகு எழுத்துகள்” என்ற தலைப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று வந்தது. உங்களுக்கும் கூட வந்திருக்கலாம். ஆங்கிலத்தில் வந்த அந்த மின்னஞ்சலை என்னால் இயன்றவரை தமிழ்ப்ப்டுத்தியுள்ளேன். முதலில் இதைப்படியுங்கள் பின்னர் விவாதத்திற்கு வரலாம். அந்த மின்னஞ்சல் இப்படி தொடங்குகிறது.............. இரண்டு அம்பானி சகோதரர்கள் இணைந்தால் கராச்சி பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளையும் முழுமையாக வாங்க முடியும். அதற்கு பிறகும் அவர்களிடம் முப்பது பில்லியன் டாலர்கள் மிச்சமிருக்கும். இந்தியாவின் முதல் நான்கு பணக்காரர்கள் சேர்ந்தால் 17 கோடி பாகிஸ்தானியர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் வாங்கி விட முடியும். அதற்கு மேலும் அவர்களிடம் 60 பில்லியன் டாலர்கள் மிச்சமிருக்கும். இந்தியாவின் முதல் நான்கு பணக்காரர்களின் சொத்து மதிப்பு சீனாவின் முதல் நாற்பது பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பை பங்கு வர்த்தக குறீயீட்டு எண் இருபதாயிரத்தை தொட்டதின் விளைவாக முகேசு அம்பானியின் ரிலையன்சு நிறுவன மதிப்பு 100 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. (கராச்சி பங்கு சந்தையில் நிறுவனங்களின் மொத்த மதிப்பே 65 பில்லியன் டாலர்கள்தான்). முகேசு அம்பானி இந்த நிறுவனத்தின் 48 சதவீத பங்குகளை வைத்துள்ளார். சென்ற நவம்பரோடு நீத்தாவிற்கு நாற்ப்பத்தி நான்கு வயது முடிந்தது. அவரின் கணவர் அவருக்கு அளித்த பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா? 60மில்லியன் டாலர் மதிப்புள்ள செட் விமானம். இதில் சொகுசு படுக்கை அறை, குளியல் அறை, மது அருந்தும் இடம், செயற்கைகோள் தொலைக்காட்சி, கம்பியில்லா தொடர்பு, விளையாடும் இடம் என அனைத்து சொர்க்கலோக வசதிகளும் உண்டு. நீத்தா வேறு யாரும் இல்லை இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் முகேசு அம்பானியின் மனைவி. முகேசு அம்பானி தற்போது தனது அந்த்தில்லா என்ற புதிய வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு பில்லியன் டாலர்கள் செலவழித்து கட்டும் இந்த வீடுதான் பூலோகத்திலேயே விலையுயர்ந்த வீடு என்று சொல்லமுடியும். ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு 60 தளங்கள் கொண்ட இந்த வீடு 173 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது. முதல் ஆறு தளங்கள் மகிழுந்துகள் நிறுத்துவதற்கும் ஏழாவது தளம் மகிழுந்துகளின் பராமரிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டாவது தளத்தில் ஒரு சிறிய திரையரங்கமும் உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளமும் அமைக்கபட உள்ளது. அடுத்த இரண்டு தள்ங்கள் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலுள்ள நான்கு தளங்கள் இவரின் குடும்பத்தினருக்காக அட்டகாசமான அரபிக்கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இவைகளுக்கு எல்லாம் மேலே மூன்று எலிகாப்டர் தள்ங்கள் அமைக்க பட உள்ளன. இவர்களின் வீட்டை பராமரிப்பதற்கும் குடும்பத்தினருக்கு சேவை செய்யவும் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். (என்ன கண்ணை கட்டுதா?! மேலே படியுங்க) கடந்த 2004 நான்காம் வருடத்தில் உலகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை கவரக்கூடிய நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்தது. ஆனால் பாகிசுதானோ முதல் 25 இடங்கள் வரை கூட இடம் பெற இயலவில்லை. 192 நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் சபை ஆப்கானிசுதானிலும் ஈராக்கிலும் தேர்தல்கள் நடத்த எத்தனித்த போது அதற்கு உதவ யாரை அழைத்தார்கள் தெரியுமா? இந்திய தேர்தல் ஆணையத்தை! காபூலுக்கு மிக அருகில் இருந்தபோதும் பாகிசுதானை அவர்கள் அழைக்கவில்லையே ஏன்? சற்றே சிந்தித்து பாருங்கள்! 12 சதவீத அமரிக்க விஞ்ஞானிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 38 சதவீத அமரிக்க மருத்துவர்கள் இந்தியர்கள். 36 சதவீத நாசா விஞ்ஞானிகள் இந்தியர்கள். மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களில் 34 சதவீதம் பேர் இந்தியர்கள். மேலும் இபிஎம் ஊழியர்களில் 28 சதவீதம் பேர் இந்தியர்கள். இப்படி இந்த பட்டியல் நீளுகிறது. உங்கள் சிந்தனைக்கு இன்னும் சில தகவல்கள்...... ஆட் மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியா ஒரு இந்தியர். சன் மைக்ரோ சிசுடம்சுவை உருவாக்கப்பட்டதும் வினோத் கோசுலா எனும் இந்தியரால்தான். இன்று 90 சதவீதம் கணணிகளை இயக்கிக்கொண்டிருக்கும் இண்ட்டெல் பிராசசர் செயலியின் தந்தை வினோத் தாம் ஒரு இந்தியர். ஆவ்லெட் பாக்கர்டுவின் ஈ பேச்சு திட்டத்தின் இணை கண்டுபிடிப்பாளர் ராசீவ் குப்தா ஒரு இந்தியர். இப்படியாக பத்தில் நான்கு பங்கு கணணி நிறுவனங்களை இந்தியர்கள் நிறுவகிக்கிறார்கள். கலைத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள்! இந்தி படவுலகம் ஆண்டொன்றுக்கு 800 படங்களை வெளியிடுகிறது. ஆறு இந்திய பெண்கள் இதுவரை உலக அழகி அலலது பிரபஞ்ச அழகிப்பட்டம் வென்றுள்ளனர். ஆசிசு பிரேம்சி- இந்திய விப்ரோ நிறுவனத்தின் தலைவர். இவர்தான் உலகின் மிக பணக்கார இசுலாமிய தொழில் முனைவர் ஆவார். இவர் மும்பையில் பிறந்து பெங்களூருவில் வசிக்கிறார். இப்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 36 க்கும் மேற்ப்பட்ட பில்லியனர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிசுதானில் ஒரு பில்லியனர் கூட இல்லை. அண்மை காலங்களில் செல்வம் சேர்ப்பதில் இந்தியர்களின் அசுர வேகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2002 ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி அவர்கள் தம் பிள்ளைகளுக்கு விட்டுச்சென்ற சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 2.8 பில்லியன் டாலர்கள்தான். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப்பின் இரு அம்பானி சகோதரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 94 பில்லியன் டாலர்கள். கடந்த 2007ல் பங்கு சந்தையின் மதிப்பும் இந்திய ரூபாயின் மதிப்பும் எகிறிய போது முகேசு அம்பானி உலகிலேயே முதல் பணக்காரர் ஆனார். அப்போது அவரின் சொத்து மதிப்பு 63.2 பில்லியன் அமரிக்க டாலர்கள். அமரிக்காவின் பில்கேட்சு 56 பில்லியன் டாலர்கலோடு அப்போது அவரின் பின்னால் நின்றார். இவ்வளவுக்கும் இந்தியருக்கும் பாகிசுதானியர்களுக்கும் அடிப்படையில் அப்படியொன்றும் அதிக வேறுபாடுகள் இல்லை. நாம் ஒரே ஒய் குரோமோசோம் ஆப்ளோ தொகுதியை சேர்ந்தவர்கள்தான். ஒரே மாதிரியான பாரம்பரிய சீன் அடுக்கையும் எம்124 எனும் சீன் குறியீட்டையும் கொண்டவர்கள். ஒரே மாதிரியான் டி.என்.ஏ மூலக்கூறுகளையும் டி.என்.ஏ அடுக்கையும் கொண்டவர்கள். நமது கலாச்சாரம் பாரம்பரியம் உண்வு பழக்க வழக்கம் இவை அனைத்துமே ஒரே மாதிரியானது. அப்படியானால் பாகிசுதானியர்கள் இந்தியர்களிடமிருந்து எங்கே வேறுபடுகிறார்கள்? ”அவர்களது தலைவர்களை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்”. இவ்வாறு அந்த மின்னஞ்சல் முற்றுப்பெற்றது. படிக்க ஆரப்பித்தபோது எனக்கு கூட மிகவும் பெருமையாகத்தான் இருந்தது. இறுதிப்பகுதிக்கு வந்தபோது எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. நாம் தேர்ந்தெடுக்கிற அரசியல் வாதிகளின் லட்சணம் நமக்குத்தான் தெரியுமே. பாரளுமன்ற கூட்டம் நடக்கிற லட்சணத்தை தூர்தர்சனில் பார்த்தால் அனைவருக்கும் புரியும். இவ்வளவும் தெரிந்த பாகிசுதானிய எழுத்தாளருக்கு நம் அரசியல்வாதிகளின் சுயரூபம் தெரியாதது வியப்புதான். இதைவிட பல முக்கிய காரணங்களை அவரால் வெளிப்படுத்தியிருக்க முடியும். அனால் நிதர்சனத்தை வெளிப்படையாக காட்டமுடியாத வழமையான இயலாமை ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஒரு கோர்வைக்காகக் கூட அவர் அவ்வாறு எழுதி இருக்ககூடும். சரி எழுதிய அவரையும் விட்டுவிடுவோம். அரசியல்வாதிகளையும் விட்டுவிடுவோம். இந்தியர்கள் என்ற முறையில் நாம் முன்னெடுத்து செல்லக்கூடிய அளவிற்கு இவைகள் உண்மையிலெயே நமக்கு பெருமையா? இந்த கட்டுரையில் உள்ள இந்தியர்களின் அறிவுசார் ஆளுமை குறித்த விடயங்கள் உண்மையிலேயே ஏற்புடையவைதான். இதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அனால் மற்றவை? குறிப்பாக பணக்காரர்களான இந்த அம்பானி சகோதர்கள் குறித்த கருத்துகள் நமது பெருமையின் சின்னமா? இவர்களின் பணக்கார டாம்பீகங்கள் நம் நாட்டுக்கு உண்மையிலேயே பெருமையா? ஏன் என்றால் இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள கையாண்ட மோசமான வழிமுறைகளை ஒரு குழந்தை கூட அறியும். மேலும் தொழிலில் இவர்கள் காட்டும் ஒழுக்கத்தையும் நாம் அறிவோம். இவர்களின் கோரப்பற்களில் சிக்குண்டு அழிந்த சிறு வணிகர்கள் ஏராளம். சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது. அது மேற்படி கட்டுரையில் வந்த சொகுசு விமானம் பற்றிய செய்தி. அதாவது இந்த விமானத்தை அரசு பறிமுதல் செய்து விட்டதாக. காரணம் இந்த விமானத்தை இறக்குமதி செய்தபோது இந்த நிறுவனம் செய்த ஏமாற்றுவேலை. என்ன அது? தனது மனைவின் அந்தப்புறத்தின் தனி உபயோகத்திற்காக வாங்கிய இந்த விமானததை பொது உபயோகத்திற்காக வாங்கியதாக பொய் சொல்லி வரியேய்ப்பு செய்துவிட்டார் முகேசு. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சுபவரா இவர். சரி சரி வரிக்கட்டுகிறோம் என்று சொல்லி எழுதித் தந்துவிட்டு பறந்துவிட்டார் அதே விமானத்தில். வரி ஏய்ப்பு செய்வது என்பது இவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை. முன்பு கைப்பேசி நிறுவனத்தின் மூலமாக பல ஆயிரம் கோடி வரியை ஏப்பம் விட்டவர்கள். பிரச்சினை வந்தால் சில கோடிகளை தூக்கிப் போட்டுவிட்டு அலட்டிகொள்ளாமல் போய்விடுவார்கள். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். இவர்கள் சகத்தினை அழித்து ஒருவன் வாயில் போட்டுகொண்டவர்கள். இவர்கள் நமது அவமானச்சின்னங்கள் !

Tuesday 11 November 2008

மார்பகப்புற்று நோய் பெண்களுக்கு மட்டும்தான் வருமா?

மார்பகப்புற்று நோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்பது தவறு. 1:100 என்ற விகிதத்தில் ஆண்களுக்கும் இது வருகிறது என்பதுதான் புதிய செய்தி. வருடந்தோறும் அக்டோபர் மாதம் மார்பகப்புற்று நோய் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெண்கள் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவை என்பதே இப்பதிவின் நோக்கம். சென்ற நூற்றாண்டுகளில் மேற்க்கத்திய நாடுகளில் மட்டுமே பெண்கள் இந்த நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது ஆசிய நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்கள் இந்த நோய் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேற்க்கத்திய கலாச்சார கழிசடைகளை கூச்சமின்றி நாம் ஏற்றுக்கொண்டதுதான் இதற்கும் காரணம். இந்த நோய் வருவதற்கான காரணங்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகமெங்கும் இதற்கான ஆராச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. ஆனால் நோய் பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் பற்றி மட்டுமே இதுவரை அறியப்பட்டிருக்கிறது. இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் இந்நோயை கட்டுப்படுத்தி வாழமுடியும். இவற்றைப்பற்றி வலையுலகில் சிறப்பான தகவல்கள் உள்ளன். கீழே உள்ள சுட்டிகளை சுட்டினால் இவற்றை அறியலாம். ஆகவே அவற்றை பற்றி இங்கே நான் அதிகம் விவரிக்கவிரும்பவில்லை தமிழில் http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4843 http://reallogic.org/thenthuli/?p=238 ஆங்கிலத்தில் http://en.wikipedia.org/wiki/Breast_cancer http://ww5.komen.org/breastcancer/aboutbreastcancer.html இது பெண்கள் சம்பந்தப்பட்ட நோய் என்பதாக அனேக ஆண்கள் இந்த நோயைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் ஆண்கள் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நோயைப்பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பெரும்பாலான் நம் தாய்மார்கள் திருமணமானவுடன் தமது முழுக்கவனத்தையும் தமது குடும்பத்தை பராமதிப்பதிலேயே செலவிடுகிறார்கள். கணவண் மற்றும் குழந்தைகளின் உடல்நிலை மீது செலுத்தும் அக்கறையை தன்னுடைய உடல் நலத்தின் மீது அவர்கள் செலுத்துவதில்லை. அபபடியே ஏதாவது நோய் வந்தாலும் கைமருந்தோ அல்லது கடையிலிருந்தோ மருந்து வாங்கி சாப்பிட்டு காலத்தை ஓட்டிவிடுவார்கள். ஆனால் இதுபோன்ற நோய்கள் இவர்களை தாக்கி கடைசி கந்தாயத்தில் தெரிய வரும்போது இவர்களுடன் சேர்ந்து இவர்கள் பேணிக்காத்த குடும்பத்தின் நிலையும் பரிதாபமாகிவிடுகிறது. ஆகவே இத்தகைய தாய்மார்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்த வேண்டியது கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரின் கடமை ஆகும். நாற்பது வயதிற்கு மேற்ப்பட்ட அனைத்து பெண்களையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்நோயிக்கான சோதனைகளை மேற்கொள்ள செய்யவேண்டும். தம் குடும்ப மருத்துவரை கண்டு சுய பரிசோதனை முறைகளை அறிந்துகொள்ள அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நோய் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சை அளித்து அவர்களை காக்கவேண்டும். மேலும் மனரீதியாக அவர்களுக்கு மிகவும் அதரவாக இருந்தால் இந்நோயுடனேயே பல ஆண்டுகள் இயல்பாக வாழ முடியும். மேலும் இந்நோயைப்பற்றி நாளும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாள்கள் தாய்பபால் புகட்டும் தாய்மார்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் தெறிவிக்கின்றன. தற்போது பெண்கள் மட்டுமன்றி ஆண்களையும் இந்த நோய் தாக்குவதாக சொல்கிறார்கள். 1:100 என்ற விகிதத்தில் இந்நோய் ஆண்களையும் தாக்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வியர்வை கட்டுபடுத்திகள் ( ஆண்ட்டி பெரிஸ்பெரண்ஸ்) உபயோகிப்பதும் இந்நோயிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாயின. நம்மூரில் குளித்தவுடன் அக்குளில் வாரிவாரிப்பூசும் டால்கம் பவுடர் என்னும் வாசனைப்பொடிகளும் இவற்றில் அடக்கம். இவற்றில் உள்ள பல வேதிப்பொருள்கள் நம் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நம் வியர்வை வழியே வெளியேறுவதை தடுத்துவிடுவதாக இச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் இது தவறு என்று சாதிக்கின்றன. இது எந்த ஆராய்ச்சிகளாலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இவர்கள் வாதிடுகிறார்கள். எது எப்படியோ நாம்தான் எச்சரிக்கயாக இருக்க வேண்டும். நம் இல்லத்து தாய்மார்களை இந்நோயிலிருந்து காக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள் “பெண்கள் நமது வீட்டுக் கண்கள்”.

Tuesday 28 October 2008

குடிப்பழக்கம் ஒரு மன நோய்!

தீவிர குடிப்பழக்கம் என்பது ஒரு முற்றிய மனநோய் ஆகும். சரியான மன நல சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாமல் இதை சரிப்படுத்த முடியாது. இதை நான் சொல்லவில்லை. ஒரு மன நல மருத்துவரே சொல்கிறார். சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கேள்வி பதில் பகுதியில் மனநல மருத்துவர் ஒருவர் அளித்த பேட்டியை கானும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமான கேள்வி பதில் போல் இல்லாமல் சற்று சுவாரசியமாகவும் பல நல்ல தகவல்களை கொண்டதாகவும் இருந்தது. அதில் அவர் தெரிவித்த கருத்துதான் இது. மேலும் அவர் மன நலன் குறித்த பல ஆச்சரியமூட்டும் விவரங்களை தெரிவித்தார். குடிப்பவருக்கு தெறியாமல் குடிப்பழக்கத்தை குனப்படுத்தமுடியும் என்பது இயலாதது. குடிப்பவருக்கு தெறியாமலும் மருந்து கொடுக்கலாம் என பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களை பார்த்து இருப்பீர்கள். அவை எல்லாம் கடைந்தெடுத்த பொய்கள். பலர் ஐயப்பன் கோவிலுக்கு மாலைப்போடுவதற்காக குடியை விட்டுவிட்டதாக சொல்வார்கள். சிலர் தான் மிகுந்த மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டவன் என்றும் தான் நினைத்தால் குடிப்பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிடுவேன் என்றும் சொல்வார்கள் அல்லது நினைப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று. ஒருவர் குறைந்தபட்சம் நான்கு வருடங்கள் மதுவிடமிருந்து முற்றிலும் விலகி இருந்தால் மட்டுமே அவர் குடியை மறந்துவிட்டதாக கொள்ளலாம். மேலும் தீவிர குடிப்பழக்கம் அல்லது போதைப்பழக்கம் கொண்டிருப்போர் புத்திசாலிகளாகவும் இருப்பதாகவும் சிலர் கூறுவதுண்டு. என்னதான் குடித்தாலும் அவன் வேலையிலே கெட்டி என்பார்கள் சிலர். இது சாத்தியமே இல்லை. மது ஒருவரின் மூளையின் செயல்பாட்டை கண்டிப்பாக பாதிக்கும். குடிபழக்கத்தினால் குடிப்பவர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினரின் மனநிலையும் பாதிக்கபடுகிறது. இவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் மனச்சோர்வு எனும் மனநோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இது தற்கொலை அல்லது மனச்சிதைவு போன்ற கொடிய முடிவுகளை தந்துவிடும்.குடிப்பழக்கத்தை முறையான சிகிச்சை மூலம் கண்டிப்பாக நிறுத்தமுடியும். இதற்கு குடிப்பவரின் ஒத்துழைப்பு மிக முக்கியம். பெரும்பாலான மன நோய்கள் மூளையில் சில வேதி திரவங்கள் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினைகளாலேயே உருவாகின்றன். இவற்றை எளிதில் மருந்துகள் மூலம் குனப்படுத்தலாம். இதற்கான பல தரமான மருந்துகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. மிகக்குறைந்த அல்லது நமக்கு வசதிப்படுகின்ற விலையில் இவை கிடைக்கின்றன. நோயின் தன்மையையும் தீவிரத்தையும் பொறுத்து சில மாதங்ளோ, வருடங்களோ அல்லது தொடர்ந்தோ மருந்து உட்கொள்ள நேரிடும். ஆனால் நம்மவர்கள் மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலே கோயில் குற்றாலம் ஆசிரமம் சாமியார் மந்திரவாதி என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு எல்லாம் முற்றியபிறகு மருத்துவ மனைக்கு வருகிறார்கள். இதனால் எல்லாம் கை மீறிப்போய்விடுகிறது. இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் அதிகம் என்ற எண்ணம் சில பாரம்பரிய மருத்துவர்களால் ஊடகங்களில் பரப்பபடுகின்றன. இதுவும் மிகவும் தவறு. மனநோய்கள் பெரும்பாலும் நமது பாரம்பரிய ஜீன்களால் நிர்ணயிக்க படுகின்றன். ஒருவரின் குடும்பத்தில் நிறைய தற்கொலைகள் நடந்திருந்தால் அவர்களின் சந்ததியினருக்கு இந்த எண்ணம் மேலோங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். சாமி ஆடுதல் குறி சொல்லுதல் இவை எல்லாம் ஹிஸ்டீரியா எனும் மன நோயின் பாதிப்புகளாகும். இவர்களை கைகூப்பி கொண்டாடுவதை விட்டுவிட்டு இவர்களை நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. சிலர் தம் இணைகளிடம் அதி தீவிர பாசம் கொண்டவர்கள் போல் சிலர் நடந்து கொள்வார்கள். இவர்கள் தமது இணைகளை மிக தீவிர சொந்தம் கொண்டாடுவார்கள். இதுவும் மன நோயின் ஒரு கட்டமாகும். ஒரு நேயர் ஒருவர் கேட்ட் கேள்வி இதைப்பற்றியதுதான். தன் நன்பன் ஒருவர் தன் மனைவியிடம் அதீத பாசத்துடன் இருப்பதாகவும், அவரை பிரிய மனமில்லாமல் வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்றும் சொன்னார். மேலும் கருவுற்றிருக்கும் தன் மனைவியை தாய் வீட்டிற்கு செல்லவும் அனுமதிக்கவில்லை என்றும் தன் தாயிடம் தொலைபேசியில் பேசக் கூட அனுமதிக்கவில்லையாம். ஆனால் மனைவியின் பக்கத்திலேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாகவும் சொன்னார். இதுபோன்று இருப்பது அதிக பாசத்தினால் (possessiveness) என்று நாம் நினைக்ககூடும். ஆனால் இது சந்தேகத்தினால் ஏற்படும் ஒரு தீவிர மனநோயின் முற்றிய நிலையாம். இந்த நபர்களிடம் இதைப்பற்றி சொன்னால் ஏற்ககமாட்டார்களாம். அவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துதான் உள்ளிருப்பு சிகிச்சை அளிக்கவேண்டுமாம். சாதாரண கலந்தாய்வுகள் (councelling) எல்லாம் இவர்களிடம் செல்லுபடியாகாதாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதுதானோ? சிலர் எல்லா தகுதிகள் இருந்தும் எந்த சரியான காரணமே இல்லாமல் திருமணத்தை வெறுப்பார்கள் அல்லது தவிர்ப்பார்கள். இதுவும் ஒரு மன நோயின் அறிகுறியாம்.இது மேற்கத்திய நாடுகளில் சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால் திருமணத்தை ஒரு சமூக நிலைபாடாக ஏற்றுக்கொண்டிருக்கிற நம்மை போன்ற நாடுகளில் இது சாதாரண பிரச்சினை இல்லை என்கிறார் மருத்துவர். ( நன்கு கவனிக்கவும் - சரியான காரணம் இன்றி!) தகுந்த மன நல சிகிச்சை மூலம் இதற்கும் தீர்வு காணலாம். இன்னொருவர் கேட்ட கேள்வி ஹிப்னாட்டிசம் மற்றும் மெஸ்மரிஸம் பற்றியது. தான் இவைகளைப்பற்றிய புத்தகங்களை நிறைய படித்திருப்பதாகவும் இவற்றை செயல் படுத்தி பார்த்ததாகவும் சொன்னார். ஆனால் தான் சோதனை செய்யும் நபர்கள் உடனே தூங்கிவிடுவதாகவும் கேள்விகளுக்கு பதில் தருவதில்லை என்றும் சொன்னார். இதைகேட்ட மருத்துவர் சற்று அதிர்ச்சி அடைந்துவிட்டார். நடைபாதைகளில் கிடைக்கும் இதுபோன்ற புத்தகங்களை அரைகுறையாய் படித்துவிட்டு இதுபோன்ற முயற்ச்சிகளை செய்வது மிகவும் ஆபத்தானதாம். இது சோதனைக்கு உட்படுவரின் வாழ்க்கையை பணயம் வைப்பதாகும். நன்பர்களே இது போன்ற நபர்களிடம் கவனமாக இருங்கள்! திரும்ப திரும்ப ஒரு செயலை செய்வது கூட ஒரு மன நோயின் அறிகுறியாம். பூட்டிய கதவை இருமுறை இழுத்துப் பார்த்தால் அது எச்சரிக்கை உணர்வாகும். ஆனால் சிலருக்கு பல முறை திரும்ப திரும்ப இழுத்துப் பார்ப்பார்க்கத் தோன்றும். அதன் பின்னும் வழி நெடுக சரியாக பூட்டினேனா என்று சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். சில பேர்களுக்கு கோவிலுக்குச் சென்று சாமி சிலையை பார்ததாலே கெட்ட கெட்ட எண்ணமாய் வருமாம். இத்தகைய நபர்கள் எல்லாவற்றிலும் அதீத நேர்த்தியை (perfectionist) எதிர்ப்பார்ப்பவர்களாக இருப்பார்கள். மேலும் அநியாயத்திற்கு நேர்மையாகவும் இருப்பார்களாம். ஒரு சில மருந்துகள் மூலமே இதை சரிசெய்ய முடியுமாம். எல்லா மனநோய்களுக்கும் சரியான சிகிச்சையும் மருந்தும் உள்ளதென்றும் மக்களுக்குத்தான் அதற்கான விழிப்புனர்வு வேண்டும் என்றும் சொல்லி மருத்துவர் விடை பெற்றார். எனக்குத்தான் சற்று குழப்பமாக இருந்தது யார் யார் மன நோயாளி இல்லை என்று.என்ன உங்களுக்குமா?? ஹா! ஹா!

Wednesday 22 October 2008

தமிழர்களே ஓங்கி முழங்குங்கள்!!

”தமிழன் இல்லாத நாடில்லை. ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை” என்பது எத்தனை உண்மை என்பது கடல் கடந்த அத்தனை தமிழனும் உணர்வுப்பூர்வமாக அறிவான். சென்ற உலக கோப்பை கால்ப்ப்ந்து போட்டியின் போது அனைவரின் புருவங்களையும் உயரச் செய்த்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நாடு செனகல் எனும் சின்னஞ்சிறிய தேசம். இத்தேசத்தில் கூட தமிழர்கள் அதிக அளவில் வாழ்வதாக செய்திகள் மூலம் அறிகிறோம். இப்படி உலமெங்கும் பட்டு பரவிக்கடக்கிறது தமிழினம். இப்படி உலமெங்கும் தமிழன் வாழ்ந்தாலும் தமிழனுக்கு அசைக்கமுடியாத முகவரியைத் தந்தது தமிழீழ்ம் தான். இன்றும் என்னுடன் பழகும் மேற்க்கத்தியர்கள் நான் தமிழன் என்று அறிந்ததும் என்னைப்பார்த்து கேட்கும் கேள்வி நீர் யாழ்ப்பானத்தை சேர்ந்தவரா என்பதுதான். அதற்கு என் தோற்றம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவர்களை பொறுத்தவரை மறத்தமிழன் என்பவன் ஈழத்தை சேர்ந்தவனாகத்தான் இருப்பான் என்று நினைக்கிறார்கள். இதை அவர்களிட்ம் உரையாடும்போது நான் உணர்ந்திருக்கிறேன். இந்திய தமிழர்களை அவர்கள் தமிழர் என்று உணர மறுக்கிறார்கள். இப்போது தமிழகத்திலுள்ள நிலை கூட இதை வலுப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. தமிழகத்திலுள்ள தமிழர்கள் சோரம் போய்விட்டாரகள். தமிழன் ஆண்ட இலங்கை மண்ணில் இன்று தமிழரின் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. இதை தட்டிக்கேட்க ஒன்று சேரக்கூட நாதியற்ற இனமாக தமிழக தமிழினம் மாறிவிட்டது. அரசியல் என்ற போர்வையில் தமிழினத்தின் உணர்வுகளை கொச்சைப் படுத்துகிறது ஒரு ஆள்காட்டி கூட்டம். நேற்று கூட செய்திகளில் ஈழத்தில் ஒரு குண்டு வீச்சின் நேரடிக் காட்சிகளை ஒளி பரப்பினார்கள். ஒன்றுமறியா பிஞ்சுகள் வெடித்து சிதறுவதை பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போல் உள்ளது. சிறார்களும் பெண்டுகளும் வயோதிகர்களும் இடும் கூக்குரல் நெஞ்சை பிசைகிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பதுங்குகுழிகளை நோக்கி ஒடும் போதே சிதறுகிறார்களே! ஐயோ வயிறு எரிகிறது! இங்கோ தமிழகத்தில் இதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அறிக்கைப்போர் புரிகிறார்கள். தமிழனின் பிணத்தின் மீது அரசியல் செய்கிறார்கள் வந்தேறிகள். தன் சொந்த பிறப்பின் இனமே தெரியாத இவர்களுக்கு தன் இனத்துக்காக சொந்த உயிரையே துச்சமாக என்னும் தமிழனின் உணர்வுகள் புரிந்திருக்க ஞாயம் இல்லை. ஆனால் இந்த வந்தேறிகளை வாழவைத்து இன்னும் இவர்களுக்கு சொம்பு தூக்கம் தமிழனை பெற்ற தாயும் ஏற்பாளோ? தமிழனின் ரத்தத்தின் மீது அரசியல் செய்து பணம் பார்க்கும் பிணந்திண்ணி கழுகுகளை யாரும் வந்து மாய்ப்பாரோ? தன் இனம் அழிவதைக்கூட அறியாத தமிழினமே நீர் தமிழ்த்தாய் வயிற்று பிள்ளைகளில்லையா? அய்யோ மனதைக்கொன்ற மானிடமே! கண்டன குரல்களும், மனித சங்கிலியும் என்ன பலனை தரப்போகிறது என்று ஒரு கூட்டம் கேட்கிறது ஒரு கூட்டம். இந்திய இறையாண்மை என்று எதோ புதிய கண்டுபிடிப்பை சொல்லி புலுகுகிறது இன்னொரு கூட்டம். வெற்றுக் குரல் கொடுக்கக்கூட மனமில்லாத உணர்வில்லாத கூட்டம் குரல் கொடுப்பனைப்பார்த்துக் பதவியை இழக்கசொல்லி கேட்கிறது. இவர்களுக்கெல்லாம் அக்கரை தமிழன் படும் பாடு மீது அல்ல…..பதவி மீது. எரியும் வீட்டில் பிடுங்கினவரை லாபம் பார்க்க நினைக்கிறார்கள். கேவலம்! தமிழர்களே! தமிழக தமிழர்களே! இத்தகைய புல்லுறுவிகளை புறந்தள்ளுங்கள்! ஒன்று பட்டு குரல் கொடுங்கள். ஓங்கி முழங்குங்கள். நமது உணர்வுகளை இந்திய அரசுக்கு புரிய வையுங்கள். உலகத்தின் பார்வை நம் மீது திரும்பட்டும். ராஜபக்சே அரசின் அத்துமீறல் உலகத்தின் கண்டனத்துக்கு வரட்டும். இது நம் ஈழத்து மக்களுக்கு ஆதராவாக அமையட்டும். அடக்கு முறைகளை எதிர்கொள்ள அவர்களுக்கு நம் குரல் ஆதரவாய் இருக்கட்டும்.

Tuesday 21 October 2008

அடுத்த ஜனாதிபதி ஷாருக்கானா?!

இந்தோனேசியாவில் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லை. குறிப்பாக இந்தியர்களை அசத்தும் விடயங்கள் அதிகமாகவே உண்டு. அவைகளில் சிலவற்றை வரும் பதிவுகளில் காண்போம். இந்தோனேசியாவின் மிகப்பிரபலமான இந்தியர் யார் என்றால் இங்கு வந்த இந்தியர்கள் அனைவரும் எளிதில் சொல்லிவிடுவார்கள். அவர் யாரும் இல்லை. நம் ஷாருக்கான் தான். தாம் முதல் முறையாக சந்திக்கும் இந்தியரை இந்நாட்டவர் கேட்கும் முதல் கேள்வி உங்களுக்கு ஷாருக்கானை தெரியுமா என்பதுதான். அவர் பெயரை சொல்லும்போதெ வெட்கப்படும் இந்நாட்டு பெண்களை கண்டால் எனக்கு சிரிப்புத்தான் வரும். அவர் நடித்த பல படங்கள் இங்கே மிகவும் பிரசித்தம். குச் குச் ஹோத்தஹை திரைப்படப்பாடல்களை என்னுடன் பணிபுரியும் தோழிகள் அடி பிறழாமல் பாடுவதைக்கண்டு மலைத்துப் போய்விட்டேன். இங்கு தொலைக்காட்சிகளில் அதிகம் இடம்பெறுபவை குரல் மாற்றம் செய்யப்பட்ட இந்தி சினிமா படங்கள் தான். அதே போல் திரைப்பட் தயாரிப்பிலும் வட இந்தியர்கள் அதிக ஈடுபட்டுள்ளார்கள். இதில் என் நன்பர் ஒருவர் சொன்ன செய்தி மிகக்கொடுமையானது. சென்ற முறை ஷாருக்கான் ஜகார்த்தாவில் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியின் கட்டணத்துக்காக என் நண்பரின் வீட்டு வேலைப்பெண் இரண்டு மாத சம்பளத்தை முன்பணமாக கேட்டாராம். முடியாது என்றதுக்கு வேலையைவிட்டு நின்றுவிடுதாக சொல்லிவிட்டாராம் அந்தப்பெண். நன்பர் வேறு வழியின்றி அதை கொடுத்து தொலைத்தாராம்! ஷாருக்கான் இங்கு ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டால் வெற்றி உறுதி! இதை நான் சொல்லவில்லை. உள்ளூர் நன்பரே சொல்கிறார். வாழ்க இந்தோனேசிய மக்கள். இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி திரு சுகர்னோ ஆவார். இவர் நம் அன்புக்குரிய தலைவர் ஜவஹர்லால் நேருவின் மிக நெருங்கிய நன்பர். திரு சுகர்னோ அவர்களின் ஆத்ம குரு யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை வீர்த்துறவி சுவாமி விவேகானந்தர் தான். சுவாமி விவேகானந்தரின் படத்தை எப்போதும் தன் அறையிலே மாட்டியிருப்பாராம் இவர். பஞ்சசீலக் கொள்கை என்றதும் இந்தியர்கள் நினைவுக்கு வருவது திரு நேரு அவர்கள் 1956ல் சீனாவுடன் செய்து கொண்ட பஞ்சசீல உடன்படிக்கையாகும். ஆனால் இந்தோனேசிய ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடும் பஞ்சசீலக் கோட்பாடு (“Dasar Negara Pancasila” ) என்றே அழைக்கப்படுகிறது. இது ஜனாதிபதி திரு சுகர்னோ அவர்களாலேயே கொண்டுவரப்பட்டதாகும். உண்மையில் இது சமஸ்கிருத வார்த்தையாகும். இறைவன் ஒருவனே, ஒன்றுபட்ட இந்தோனேசியா, அனைவருக்கும் ஒரே சமூக நீதி போன்ற ஐந்து கோட்பாடுகளைக்கொண்டதே இந்த பஞ்சசீலக்கொள்கை. இந்தோனேசியா ஒரு இசுலாமிய தேசம் என்று பிரகனப்படுத்தப்பட்டுள்ள போதும் மற்ற மதங்களும் சம நிலையுடன் மதிக்கப்படுகின்றன. இந்துக்கள், கிருத்துவர்கள் மற்றும் பவுத்தர்களுக்கான முக்கிய பண்டிகை நாட்கள் தேசிய விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய இந்துக்களுக்கு ராமாயண மகாபாரதக் கதைகள் தெரியுமோ இல்லையோ இந்நாட்டில் உள்ள இசுலாமியருக்கும் இக்கதைகள் அத்துப்படி.. ஏன் என்றால் அது அவர்களின் ஆரம்ப பள்ளி பாடத்திட்டங்களில் சொல்லிகொடுக்கப்படுகிறது. ஜகார்த்தாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள அர்ச்சுனன் ரதச்சிற்பம் இந்நாட்டின் கலைத்திறனுக்கும் மத சகிப்புத்தன்மைக்கும் ஒரு முகிகிய சான்று ஆகும்! (தொடரும்)

Saturday 4 October 2008

முகத்தில் கரியை பூசிக்கொள்ளாதீர்கள் !

நாங்கள் இங்கு வந்தபுதிதில் பல இந்தோனேசிய நடைமுறைகள் எங்களுக்கு சரிவர புரியவில்லை. அதனால் இந்நாட்டை பற்றிய எங்களுடைய மதீப்பீடுகள் சற்று குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக நம் நாட்டைப்பற்றி உள்ளூர் தமிழர்களிடம் சற்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் இந்தியாவில் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் இங்கு இது சரியில்லை அது சரியில்லை என்று எதையாவது பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு நாள் எங்கள் முகத்தில் சரியாக கரியை பூசிக்கொள்ள போகிறோம் என்று நாங்கள் உணர்ந்திருக்கவில்லை! இங்கேயே பிறந்து வளர்ந்த ஒவ்வொரு தமிழருக்கும் ஒரு முறையாவது ஊருக்கு சென்று கால் வைக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஊர் என்றாலே அவர்களின் பாவிப்பில் அது தமிழகத்தை குறிக்கும். அவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தாலும் தமிழ்நாட்டை இன்றும் ”ஊர்” என்றுதான் அழைப்பார்கள். அதாவது தமிழ்நாட்டை இன்றும் அவர்கள் சொந்த ஊர் என்றே பாவிக்கிறார்கள். எங்களையும் ஊர் ஆட்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நம்ம ஆள் இரண்டு மாதம் அமரிக்காவிற்கு பயிற்ச்சிக்கு சென்று திரும்பினாலே தமிழ்நாட்டை பார்க்கிற பார்வையே வேறு மாதிரியாக இருக்கும். சரி சரி விசயத்திற்கு வருகிறேன். இவ்வாறு நாம் பாடிய சுய புராணங்களை நம்பிய ஒரு இந்தோனேசிய தமிழர் சமீபத்தில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் சென்று திரும்பியிருந்தார். அவருடன் வழக்கம்போல அலாவிக்கொண்டிருந்தோம். சற்று ஏமாற்றம் மேலோங்கிய தொனியில் அவர் கேட்ட கேள்விகள்தான் எங்கள் முகத்தில் கரியை பூச வைத்தது. அவை, 1. நம்மூரில் ஏன் பாதையிலேயே மலம் ஜலம் கழிக்கிறார்கள்? புகையிலையை ஏன் துப்பிவைக்கிறார்கள்? இந்நிலை கிராமங்களில் என்றால் கூட பொறுத்துக்கொள்ளலாம். சென்னை மாநகரிலேயே இவ்வாறு இருப்பதை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை? 2. அவசியமே இல்லாமல் ஏன் ஹாரனை பயன்படுத்துகிறார்கள்? நோயாளிகளையும் குழந்தைகளையும் இது பாதிக்காதா? 3. சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன? நீங்கள் எல்லாம் ஒழுங்காக வரி கட்டுவதில்லையா? 4. விமான நிலையங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் ஏன் அலுவலர்கள் எல்லோரும் கடு கடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இங்கெல்லாம் ஏன் தமிழில் பேசினால் கண்டுகொள்ள மாட்டேன்கிறார்கள்? ஆங்கிலம் படிக்காதவர்கள் மற்றும் அதிகம் படிக்காதவர்கள் இங்கெல்லாம் செல்லக்கூடாதா? 5. கோயில்களில் ஏன் சிறப்பு தரிசன கட்டணம் வாங்குகிறார்கள்? உடல் ஊனமுற்றோர்களுக்கு வயதானவர்களுக்கு சிறப்பு வழி இல்லை. ஆனால் நல்லா இருப்பவர்களுக்கு பணம் கொடுத்தால் ஏன் சிறப்பு வழி? 6. கோயில்களில் ஏன் நமக்கு புரியாத மொழியிலேயே எல்லாம் செய்கிறார்கள்? ஏன் பிரசாதங்களை கையில் படாமல் தூக்கியெறிகிறார்கள்? தொட்டு கொடுத்தால் அது கெட்டுப்போகுமா? 7. கல்வியிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்குவதாக பீற்றிக்கொள்ளும் நீங்கள் இதையெல்லாம் ஏன் கண்டுகொள்வதில்லை? இப்போதெல்லாம் நம் நாட்டைப்பற்றி நாங்கள் அதிகம் பேசுவதில்லை. படங்கள் மேலே- துர்கா கோயிலில் தீ மிதிக்க ஆயத்தமாகும் பக்தர்கள். கீழே– ஜகார்த்தாவை அடுத்த தங்கரங்கில் உள்ள துர்கா கோயில் விமானம்.

Tuesday 23 September 2008

என்றைக்குத்தான் உறைக்குமோ !!

இந்தோனேசியா என்றாலே இயற்கை பேரழிவுகளுக்கு குறைவு இல்லை. இங்கு இயற்கையின் சீற்றம் பல வழிகளிலும் வெளிப்பட்டு அவ்வப்போது பேரழிவுகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது. இதில் மிகவும் சிக்கலான ஒரு நிகழ்வு சென்ற 2006 ஆம் ஆண்டு ஏற்பட்டது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்பார்கள். ஆனால் இங்கோ கிணறு வெட்ட ஒரு பிரளயமே கிளம்பிவிட்டது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய தொழில் மாநகரம் சுரபயா. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அள்ள அள்ள குறையாத இயற்கை வளமும் இங்கு உண்டு. இந்நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளிகளில் பல இயற்கை எரி வாயு எடுக்கும் நிறுவங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று லாப்பிண்டோ பிராண்டாஸ் எனும் நிறுவனம். இந்நிறுவனம் சிதார்ஜோ எனும் கிராமத்தில் தனது தொரொப்பன கிணறுகளை அமைத்திருந்தது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தியதி இத்தகைய கிணறு ஒன்று அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அக்கிணற்றிலிருந்து பொத பொதவென்று சேறும் சகதியும் வெளியேறத்தொடங்கியது. அடுத்து சில நிமிடங்களில் சுற்றியுள்ள பல கிணறுகளில் இருந்தும் இதே போன்று சேறும் சகதியும் வெளியேறத்தொடங்கியது. கட்டுங்கடங்காத வேகத்தில் வெளியேறிய இச்சகதியை கண்டு அனைவரும் பயந்து வெளியேறினார்கள். இவ்வாறு வெளியேற தொடங்கிய சகதி கொஞ்சம் கொஞ்சமாக அந்நிறுவனத்தையும் மேலும் சுற்றியுள்ள பல நிறுவனங்களையும் மூழ்கடித்துவிட்டது. இதனால் பெரும் பொருளிழப்பும் பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை இழப்பும் ஏற்பபட்டது. இயற்கையின் இக்கோரத்தண்டவம் இத்துடன் முடிந்துவிடவில்லை . படிப்படியாக இச்சகதியானது சுற்றியுள்ள 15-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களையும் மூழ்கடித்து அங்கு வாழ்ந்த மக்களை நிராதரவாய் விட்டுவிட்டது. மேலும் சகதியுடன் வெளிப்படுகின்ற கந்தக நெடி தாங்க முடியாமல் சுற்றியுள்ள இன்னும் பல கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 50,000 கன அடியாக இருந்த இந்த சகதி வெளியெற்றம் தற்போது ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்திருப்பதாய் சொல்லுகிறார்கள். இதில் மிகப்பெரிய செய்தி என்னவென்றால் இச்சகதி வெளியேற்றம் இன்னும் 10-15 ஆண்டுகள் தொடரும் என்பதுதான். இதுவரை வெளியேறிய சகதியாலேயே பல ஹெக்டேர் நிலப்பரப்பு மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் எவ்வளவு நிலப்பரப்பு இதனால் பாதிக்கபடுமோ என்று நினைக்கும் பொழுது தலையே சுற்றுகிறது. நமக்கே இப்படி என்றால் அங்கு வாழும் மக்களின் நிலையை நினைத்து பாருங்கள். இந்நிகழ்வுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கிணறுகளை தோண்டிய போது சரியாண வரைமுறைகளை பின்பற்றாததே இப்பேரழிவுக்கு காரணம் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அருகில் இருக்கும் இன்னொறு பெரிய நகரமான யோக்யகர்த்தாவில் இந்நிகழ்வுக்கு இரண்டு நாளைக்கு முன் ஏற்ப்பட்ட பெரிய நில நடுக்கம்தான் இதற்கு காரணம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் வாதிடுகிறது. உலகின் பல மூலைகளிலும் இருந்து வந்த பல விஞ்ஞானிகளும் இந்நிகழ்வுக்கான சரியான காரணத்தையும் சகதி வெளியெற்றத்தை தடுத்து நிறுத்தும் வழிமுறைகளையும் கண்டுபிக்க முடியவில்லை. சில அலோசனைகளின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் உரிய பலனை தரவில்லை. இதனால் அரசும் செய்வதறியாது கைப்பிசைந்து நிற்கிறது. மேலும் ஒரு முயற்சியாக அருகில் உள்ள அணை ஒன்றில் இச்சகதியானது தேக்கிவைத்து மேலும் பரவாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அணை எத்தனை நாள் தாங்கும் என்று தெரியவில்லை. அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்!! இச்சம்பவம் நடந்து ஆறு மாதத்திற்கு பிறகு அதிபரின் அலுவலகம் இது தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் மேற்படி நிறுவனம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் படிப்படியாக இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் தனியாக ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை மிகக்குறைவான அளவே நிவாரணம் கிடைத்துள்ளபடியால் பாதிக்கப்ப்ட்ட மக்கள் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் பொருமை இழந்தவர்களாய் மேற்படி அணையை உடைத்து விடுவதாய் மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். லாப்பிண்டோ நிறுவனம் இந்தோனேசிய முக்கிய அமைச்சர் ஒருவரின் குடும்பத்திற்கு சொந்தமானது. இதனால் அந்நிறுவனத்தின் மீதான அரசின் நடவடிக்கை சொல்லும்படியாக இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இவ்வளவிற்கும் பிறகு இவ்வழிவை தேசிய பேரழிவாக அறவிக்க அரசுக்கு பலரும் வேண்டுகோள் விடுத்தும் அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது. அவ்வாறு அறிவித்தால் முழு இழப்பையும் ( தவறு செய்த நிறுவனத்திற்கும் சேர்த்து) அரசு ஏற்க வேண்டிவரும் என்பதே இதற்கான காரணம் என்கிறார்கள். ஆனால் பொறுப்பின்றி செயல்பட்ட தனியார் நிறுவனமும் இத்தகைய நிறுவனங்களை அனுமதித்த அரசுமே இவ்வழிவிற்கான முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. எது எப்படியோ ஒரு சிலரின் பேராசையினால் அற்ப சுகங்களுக்காக தேவையற்ற துய்ப்புகளுக்காக இயற்கையை கதற கதற சீறழித்துவிடுகிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் அதற்கான முழுப்பலனையும் நாம்தான் அனுபவிக்க போகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். என்றைக்குத்தான் இது நமக்கு உறைக்க போகிறதோ!!

மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் குண்டாக மாட்டீர்கள்!! (இந்தோனேசியா – ஒரு அறிமுகம் - பகுதி 3)

உணவு பழக்கங்கள்: இந்தோனேசிய மக்கள் அசைவ உணவு வகைகளையே மக்கள் பெரிதும் உண்கிறார்கள். மேலும் அரிசி மற்றும் நூடுல்ஸ் வகைகளை அதிகம் உண்ணுகிறார்கள். பக்க உணவுகள் முதல் பிரதான உனவுகள் வரை அசைவம் இல்லாமல் ஒன்றுமே இல்லை. சைவம் மட்டும் உண்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். சாதாரண நொறுக்குத்தீனி வகையறாக் கூட அசைவம் கலக்காதது இல்லை. குறைந்தபட்சம் அசைவ வாசனையாவது கூட்டப்பட்டதாக இருக்கும். அதிலும் மாட்டிறைச்சியை மக்கள் விரும்பி உண்கிறார்க்ள். இங்கு மாட்டிறைச்சி ஆட்டிறைச்சியை விட விலை அதிகம். அதுவும் மாட்டிறைச்சியை ஆஸ்திரேலியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறார்கள். இவ்வளவு அசைவ உணவு சாப்பிட்டும் அதுவும் மாட்டிறைச்சி சாப்பிட்டும் பெரும்பாலானவர்கள் அதுவும் பெண்கள் ஒல்லியாக அல்லது நல்ல வடிவான தேகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு வந்த புதுசில் இங்கு உள்ள மக்களை பார்த்து நான் மிகவும் வியைந்த விஷயம் இது. இதைப்பற்றி நம் மருத்துவர் ஒருவரிடமே கேட்டேன். அதற்கு அவர் இரு முக்கிய காரணங்களை பட்டியலிட்டார். ஒன்று அவர்களின் பாரம்பரிய ஜீன்கள். மற்றொன்று அவர்களின் நல்ல பாரம்பரிய உணவு பழக்கங்கள். உண்மைதான்! அவர்கள் நம்மை போன்று நூறு கிராம் இறைச்சிக்கு ஐநூறு கிராம் சோற்றை பாத்தி கட்டி உண்பதில்லை. இறைச்சியுடன் சிறிதளவே சோறு உன்கிறார்கள். மேலும் பச்சையாய் சில காய்கறிகளையும் சில நறுமன கீரை வகைகளையும் சேர்த்தே உண்கிறார்கள். உணவுக்கு முன்னும் பின்னும் பால் மற்றும் சீனி சேர்க்காத தேநீரை குடிக்கிறார்கள். மேலும் பசித்த பிறகே உண்ணும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் இவ்வாறு உடலை பேன முடிகிறது. ஆனால் இவர்களுக்கும் இப்போது பிரச்சினைகள் காத்திருக்கின்றன. எதனால்? இவ்வாறு ஒரு நாடு உருப்படுவதைக் கண்டால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பிடிக்குமா? அவர்களின் உலகமயமாக்கலை இங்கும் அவிழ்த்து விட்டு விட்டார்கள். மெக் டொனால்டு, கெண்டக்கி போன்ற அனைத்து அமரிக்க துரித உணவு நிருவனங்களும் இங்கு கடை விரித்து ஓகோ என்று கொடிகட்டி பறக்கவும் செய்கிறார்கள். பற்றா குறைக்கு பிட்சா ஹட் வேறு. விளைவை சொல்லவா வேண்டும்?? புதிய தலைமுறையினரிடம் ஒபேசிட்டி எனும் உடல் பருமன் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. நாடு எதுவாயினும் அவரவர்களின் பாரம்பரிய உணவும் பழக்க வழக்கங்களும்தான் சிறந்தவை என்று யாருமே அறிந்து கொள்வதில்லை. நாம் உட்பட !! இறுதியாக இந்தோனேசியா சம்பந்த்தப்பட்ட சில கொசுறு தகவல்களோடு இத்தொடரை முடிக்கிறேன். உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த இரும்பு ஜாம்பவான் லட்சுமி மிட்டல் தனது முதல் இரும்பு தொழிற்சாலையை தொடங்கியது இந்தோனெசியாவில்தான். அதேபோல் தற்போது அமரிக்காவை கலக்கி கொண்டிருக்கும் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா சிறு வயதில் வளர்ந்தது இங்கேதானாம். அவரின் மிகப்பிடித்தமான உணவு இந்தோனெசியாவின் “நாசி கோரங்” என்னும் பிரைடு ரைஸ் தானாம். இதை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்து இருந்தார். வாழ்க இந்தோனேசியா!! பி.கு : இத்தொடரை நான் பல வழிகளில் தெரிந்து கொண்ட விவரங்களை கொண்டே எழுதியிருக்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும் வேண்டுகிறேன். (முற்றும்)

Monday 8 September 2008

தங்கச் சுரங்கம் குத்தகைக்கு !!

(இந்தோனேசியா – ஒரு அறிமுகம் - பகுதி 2)

இயற்கை வளமும் பொருளாதாரமும்

தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகச்சிறந்த இயற்கை வளம் நிறைந்த நடாக இந்நாடு விளங்குகிறது. நிலக்கரி பெட்ரோல் தங்கம் ஆகியவை ஏராளமயாய் கிடைக்கின்றன. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற பாட்டு இந்தியாவுக்கு பொருந்துதோ இல்லையோ இந்தோனேசியாவுக்கு நன்கு பொருந்தும். ஆனால் அரசியல்வாதிகள் புண்ணியத்தில் இன்னும் மற்ற நாடுகளிடம் கையேந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பெட்ரோலைக்கூட சிங்கப்பூர் அனுப்பி சுத்திகரிப்பு செய்கிறார்கள். அரசியல்வாதிகளை கேட்டால் வியாபார ஒப்பந்தம் என்கிறார்கள். ஐந்து வருடம் கழித்து இயற்கை எரிவாயு வழங்க சீனாவுடன் அப்போது இருந்த சொற்ப விலையில் ஒப்பந்தம் போட்டுவிட்டு போய்விட்டார் அப்போதைய அதிபர் மேகாவதி. இப்போது சீனாவிடம் விலையை கூட்டிக்கொடுக்கவேண்டும் என்று மாறி மாறி கருணை மனு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இப்போதய அதிபரும் துணை அதிபரும். அவர்களும் முயற்சி செய்வதாய் பெரிய மனதுடன் ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கே போய் முட்டுவது என்று மக்கள் புலம்புகிறார்கள். ஆனாலும் தேர்தல் வந்தால் இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுகிறார்கள். எதிர் வரும் தேர்தலில் அதே மேகாவதிக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ஆமாம் நம்புங்கள்! தேசங்கள் மாறலாம் ஆனால் மக்களின் போக்கு மாறுவதில்லை போலும்!

உலகிலேயே அதிக கார்கள் உள்ள நகரம் என்று இந்நாட்டின் தலைநகரமான ஜகார்த்தாவை சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. உலகின் அனைத்து பிரபலமான கார்களையும் சர்வ சாதாரணமாய் சாலையில் பார்க்கலாம். உலகின் விலையுயர்ந்த இரண்டு சக்கர வாகனமான ஹார்லி டேவிட்சன் வாகனங்களையும் நிறைய கான முடிகிறது. ஆனால் இந்நாட்டை ஏழை நாடு என்கிறார்கள். நம்புவது கடினம் என்றாலும் அதில் உண்மையும் இருக்கிறது. ஆம்! பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரியது. கிராமங்களில் வாழும் மக்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி இன்னும் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்து தொழில் துறைகளிலும் ஜப்பானியர்களும் சீன வம்சாவளியினரே கொடி கட்டிப்பறக்கிறார்கள். வாகனச் சந்தை இவ்வளவு பெரியது என்றாலும் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தை தாங்கிய வாகனங்கள் ஒன்று கூட இல்லை. இவ்வளவு பெரிய சந்தையின் முழுப்பலனையும் ஜப்பானியர்களும் ஐரோப்பியர்களும் மற்றும் அமரிக்கர்களும்தான் அனுபவிக்கிறார்கள். இம்மண்ணின் பூர்வக்குடிகள் இன்னும் உத்தியோக வர்க்கத்தினர்களாகவே இருக்கிறார்கள். மிகச்சில முன்னேறியவர்களும் அரசியல் பெரும்பான்மை உரிமையால் பதவிக்கு வந்து மேற்படி நாட்டினர்களுக்கு சலுகைகளை வாரித்தந்து அதில் வாரிச்சுரிட்டியவர்களேயன்றி தொழிளால் முன்னேறியவர்கள் அல்ல. இத்தகைய வேறுபாடுகள் சில சமயங்களில் பெரிய இன மோதல்களை உருவாக்கிவிடுகிறது. இது பொருளாதார உறுதிப்பாட்டையும் குலைத்துவிடுகிறது. கடந்த காலங்களில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிகளுக்கு பிறகு தற்பொழுது சற்று நிலையான பொருளாதார நிலை கானப்படுகிறது.

நம் தாத்தா காலத்தில் சொல்வார்களே பொன்னு விளைகிற பூமி என்று அதை நம்மூரில் இப்போது கான்பது அரிது. ஆனால் இங்கே இப்போதும் பார்க்கலாம். வருடத்தில் ஆறு மாத காலம் நல்ல மழையும் இருக்கிறது. ஆனால் அதில் விவசாயத்தைதான் கானமுடியவில்லை. இவ்வளவையும் வைத்துக் கொண்டு கவலையில்லாமல் அரிசியை தாய்லாந்திலிருந்தும் காய்கறிகளை ஆஸ்திரேலியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கேட்டால் அரிசி பயிர் செய்வது கடினமான வேலையாம். அதனால் எண்ணெய்ப்பனை வளர்க்கிறார்கள் பயோ டீசல் தயார்செய்ய! இதனால் டாலர்களில் வருமானம் பார்க்கலாம் என்கிறார்கள். எதிர்காலத்தில் தட்டில் டாலரை போட்டுச் சாப்பிட முடியுமா? என்றால் அதை அப்போது பார்க்கலாம் என்கிறார்கள்.

அதுவும் சரிதான்! ஏன் என்றால் தங்கத்தை வெட்டி எடுக்க சோம்பேரித்தனப்பட்டு முழுத் தங்க சுரங்களையும் அமரிக்கர்களிடம் நூறு வருட குத்தகைக்கு விட்ட அரசியல் தலைவர்களின் பின் வந்தவர்கள் அயிற்றே! ஆமாம் நம்புங்கள்! இந்தோனேசியாவின் மிகப்பெரிய தங்க சுரங்கம் குத்தகை என்ற பெயரில் அமெரிக்க நிறுவனத்தின் வசம் உள்ளது. இன்றும் அமரிக்கர்கள் வெட்டும் இந்த சுரங்கத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற வகையில் ரானுவம் பாதுகாவல் வேலையும் செய்கிறது. சும்மாவா பின்னே? இரண்டு ஊதியம் கிடைக்கிறதே. அதிலும் அரசாங்க சம்பளத்தைவிட இவர்கள் தரும் சன்மானம் அதிகமாம். இதை நான் சொல்லவில்லை. அரசாங்கத்தின் கண் துடைப்பு விசாரணை கமிஷன் சொன்னது. இந்தியாவைப்போல் விசாரணை கமிஷன்கள் இங்கும் கண் துடைப்புக்குத்தான்.

(இன்னும் தொடரும்)

Friday 22 August 2008

இந்தோனேசியா – ஒரு அறிமுகம் – பகுதி-1

நான் இங்கு வந்த நாட்களில் இந்த தேசத்தை பற்றி அறிய தமிழில் தேடிய போது ஒன்றுமே கிடைக்கவில்லை. அப்போதுதான் இப்படி ஒரு பதிவை எழுத தோன்றியது. நான் அறிந்தவற்றை உங்களுக்காக எழுதுகிறேன். நாடு இந்தோனேசியா தென்கிழக்காசிய நாடுகளில் மிக முக்கியமான தீவு நாடு. இது பல தீவு கூட்டங்களை அடக்கிய அழகிய தேசம். ஜகார்த்தா மாநகரம் இந்நாட்டின் முக்கிய நகரமாகவும் தலை நகராகவும் விளங்குகிறது. சுரபயா, செமராங், சோலோ மற்றும் மேடான் ஆகியவை மற்ற பெரிய நகரங்களாக விளங்குகின்றன. பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் பாலித்தீவுகள் இந்நாட்டின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகின்றன. இதில் மிக சுவாரசியமான செய்தி இத்தீவுகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்பதாகும். மேலும் இவர்களை பற்றிய பல விவரங்களை தனிப்பதிவில் கான்போம். மக்கள் இந்நாட்டு மக்கள் மங்கோலிய சீன கலப்பின தோற்றத்தை கொண்டவர்களாக உள்ளனர். நிறமும் அவர்களை ஒத்தே காணப்படுகிறது. பழகுவதற்கு இனிமை ஆனவர்களகவும் அமைதியை விரும்பும் மென்மையான சுபாவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இசுலாமியர்கள் மிகப்பெரும்பான்மையாக மக்களாகவும் கிருத்துவம், பெளத்தம், இந்து சமயத்தவர்கள் மிகச்சிறுபான்மையினராகவும் வாழுகின்றனர். பல ஆசிய தேசங்களில் இருந்து புலம்பெயர்ந்த மக்களும் பெருமளவில் கானப்படுகிறார்கள். மேலும் மலேசியா மற்றும் சிங்கப்பூரை போல இங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பிற இந்தியர்கள் இந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மேடான் மாகாணத்தில் அதிக அளவில் வாழுகிறார்கள். வெற்றிகரமான பல தொழில் நிறுவனங்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்கின்றன. இவைகள்தான் எங்களை போன்ற இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலை கொடுத்து ஆதரிக்கின்றன. மொழி இந்தியாவை போன்றே இந்நாடும் பல இன பல மொழி கலாச்சாரத்தை கொண்டுள்ளது. ஆனாலும் ”பஹாசா இந்தோனேசியா” மொழி தேசிய மொழியாக பாவிக்கபட்டு எல்லோராலும் பெசப்படுகிறது. ஆட்சி மொழியாகவும் இம்மொழியே உள்ளது. இம்மொழி “மலாய்” மொழியை மிகவும் ஒத்ததாக உள்ளது. ஆங்கில எழுத்துருக்களே இம்மொழியையும் எழுத பயன்படுத்த படுகின்றன. சமஸ்கிருதம், தமிழ் முதலான இந்திய மொழிகளில் இருந்து பல சொற்கள் இம்மொழியில் அப்படியே கையாளப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் சீன மொழியை கற்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கலாச்சாரம் பெரும்பான்மை மதம் இசுலாம் ஆனாலும் மக்கள் பின்பற்றும் கலாச்சாரம் ராமாயண மகாபாரத பின்னனியை கொண்டதாக உள்ளது. பண்டிகைகள் மற்றும் திருமண விழாக்களின் போது இதை நாம் உணரமுடியும். திருமணத்தின் போது அணியும் உடைகள் நம் பழங்கால உடைகளை நினைவுறுத்துகின்றன. மக்கள் சமத்துவ சமுதாய கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். முக்கியமாக சாதி என்பதே இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தவிர்த்து வேறு சமுதாய ஏற்றத்தாழ்வுகள் கானப்படுவதில்லை. தன்னுடைய வாழ்க்கை துணையை தாமே தேடிக்கொள்ளும் வழக்கமே இருக்கிறது. இந்தியாவை போன்றே இங்கும் கூட்டுக்குடும்பங்கள் அறிதாகி வருகின்றன. பெண்களுக்கான சுதந்திரம் பாராட்டும்படியாக இருக்கிறது. பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகவும் தொழில் துறையில் கோலோச்சுபவர்களாகவும் உள்ளனர். வளர்ச்சி பெற்ற நகரங்களில் மேற்கத்திய கலாச்சாரத் தாக்கம் பெருமளவில் கானப்படுகிறது. சில இடங்களில் பெண்களின் உடையலங்காரம் மேற்க்கத்திய நாடுகளை மிஞ்சும் படியாக உள்ளது.

(இன்னும் தொடரும்)