எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Tuesday 28 October 2008

குடிப்பழக்கம் ஒரு மன நோய்!

தீவிர குடிப்பழக்கம் என்பது ஒரு முற்றிய மனநோய் ஆகும். சரியான மன நல சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாமல் இதை சரிப்படுத்த முடியாது. இதை நான் சொல்லவில்லை. ஒரு மன நல மருத்துவரே சொல்கிறார். சமீபத்தில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கேள்வி பதில் பகுதியில் மனநல மருத்துவர் ஒருவர் அளித்த பேட்டியை கானும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கமான கேள்வி பதில் போல் இல்லாமல் சற்று சுவாரசியமாகவும் பல நல்ல தகவல்களை கொண்டதாகவும் இருந்தது. அதில் அவர் தெரிவித்த கருத்துதான் இது. மேலும் அவர் மன நலன் குறித்த பல ஆச்சரியமூட்டும் விவரங்களை தெரிவித்தார். குடிப்பவருக்கு தெறியாமல் குடிப்பழக்கத்தை குனப்படுத்தமுடியும் என்பது இயலாதது. குடிப்பவருக்கு தெறியாமலும் மருந்து கொடுக்கலாம் என பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்களை பார்த்து இருப்பீர்கள். அவை எல்லாம் கடைந்தெடுத்த பொய்கள். பலர் ஐயப்பன் கோவிலுக்கு மாலைப்போடுவதற்காக குடியை விட்டுவிட்டதாக சொல்வார்கள். சிலர் தான் மிகுந்த மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டவன் என்றும் தான் நினைத்தால் குடிப்பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிடுவேன் என்றும் சொல்வார்கள் அல்லது நினைப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்று. ஒருவர் குறைந்தபட்சம் நான்கு வருடங்கள் மதுவிடமிருந்து முற்றிலும் விலகி இருந்தால் மட்டுமே அவர் குடியை மறந்துவிட்டதாக கொள்ளலாம். மேலும் தீவிர குடிப்பழக்கம் அல்லது போதைப்பழக்கம் கொண்டிருப்போர் புத்திசாலிகளாகவும் இருப்பதாகவும் சிலர் கூறுவதுண்டு. என்னதான் குடித்தாலும் அவன் வேலையிலே கெட்டி என்பார்கள் சிலர். இது சாத்தியமே இல்லை. மது ஒருவரின் மூளையின் செயல்பாட்டை கண்டிப்பாக பாதிக்கும். குடிபழக்கத்தினால் குடிப்பவர்கள் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினரின் மனநிலையும் பாதிக்கபடுகிறது. இவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் மனச்சோர்வு எனும் மனநோயினால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இது தற்கொலை அல்லது மனச்சிதைவு போன்ற கொடிய முடிவுகளை தந்துவிடும்.குடிப்பழக்கத்தை முறையான சிகிச்சை மூலம் கண்டிப்பாக நிறுத்தமுடியும். இதற்கு குடிப்பவரின் ஒத்துழைப்பு மிக முக்கியம். பெரும்பாலான மன நோய்கள் மூளையில் சில வேதி திரவங்கள் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினைகளாலேயே உருவாகின்றன். இவற்றை எளிதில் மருந்துகள் மூலம் குனப்படுத்தலாம். இதற்கான பல தரமான மருந்துகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. மிகக்குறைந்த அல்லது நமக்கு வசதிப்படுகின்ற விலையில் இவை கிடைக்கின்றன. நோயின் தன்மையையும் தீவிரத்தையும் பொறுத்து சில மாதங்ளோ, வருடங்களோ அல்லது தொடர்ந்தோ மருந்து உட்கொள்ள நேரிடும். ஆனால் நம்மவர்கள் மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றாலே கோயில் குற்றாலம் ஆசிரமம் சாமியார் மந்திரவாதி என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு எல்லாம் முற்றியபிறகு மருத்துவ மனைக்கு வருகிறார்கள். இதனால் எல்லாம் கை மீறிப்போய்விடுகிறது. இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் அதிகம் என்ற எண்ணம் சில பாரம்பரிய மருத்துவர்களால் ஊடகங்களில் பரப்பபடுகின்றன. இதுவும் மிகவும் தவறு. மனநோய்கள் பெரும்பாலும் நமது பாரம்பரிய ஜீன்களால் நிர்ணயிக்க படுகின்றன். ஒருவரின் குடும்பத்தில் நிறைய தற்கொலைகள் நடந்திருந்தால் அவர்களின் சந்ததியினருக்கு இந்த எண்ணம் மேலோங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம். சாமி ஆடுதல் குறி சொல்லுதல் இவை எல்லாம் ஹிஸ்டீரியா எனும் மன நோயின் பாதிப்புகளாகும். இவர்களை கைகூப்பி கொண்டாடுவதை விட்டுவிட்டு இவர்களை நல்ல மன நல மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. சிலர் தம் இணைகளிடம் அதி தீவிர பாசம் கொண்டவர்கள் போல் சிலர் நடந்து கொள்வார்கள். இவர்கள் தமது இணைகளை மிக தீவிர சொந்தம் கொண்டாடுவார்கள். இதுவும் மன நோயின் ஒரு கட்டமாகும். ஒரு நேயர் ஒருவர் கேட்ட் கேள்வி இதைப்பற்றியதுதான். தன் நன்பன் ஒருவர் தன் மனைவியிடம் அதீத பாசத்துடன் இருப்பதாகவும், அவரை பிரிய மனமில்லாமல் வேலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்றும் சொன்னார். மேலும் கருவுற்றிருக்கும் தன் மனைவியை தாய் வீட்டிற்கு செல்லவும் அனுமதிக்கவில்லை என்றும் தன் தாயிடம் தொலைபேசியில் பேசக் கூட அனுமதிக்கவில்லையாம். ஆனால் மனைவியின் பக்கத்திலேயே இருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாகவும் சொன்னார். இதுபோன்று இருப்பது அதிக பாசத்தினால் (possessiveness) என்று நாம் நினைக்ககூடும். ஆனால் இது சந்தேகத்தினால் ஏற்படும் ஒரு தீவிர மனநோயின் முற்றிய நிலையாம். இந்த நபர்களிடம் இதைப்பற்றி சொன்னால் ஏற்ககமாட்டார்களாம். அவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்துதான் உள்ளிருப்பு சிகிச்சை அளிக்கவேண்டுமாம். சாதாரண கலந்தாய்வுகள் (councelling) எல்லாம் இவர்களிடம் செல்லுபடியாகாதாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இதுதானோ? சிலர் எல்லா தகுதிகள் இருந்தும் எந்த சரியான காரணமே இல்லாமல் திருமணத்தை வெறுப்பார்கள் அல்லது தவிர்ப்பார்கள். இதுவும் ஒரு மன நோயின் அறிகுறியாம்.இது மேற்கத்திய நாடுகளில் சாதாரண விடயமாக இருக்கலாம். ஆனால் திருமணத்தை ஒரு சமூக நிலைபாடாக ஏற்றுக்கொண்டிருக்கிற நம்மை போன்ற நாடுகளில் இது சாதாரண பிரச்சினை இல்லை என்கிறார் மருத்துவர். ( நன்கு கவனிக்கவும் - சரியான காரணம் இன்றி!) தகுந்த மன நல சிகிச்சை மூலம் இதற்கும் தீர்வு காணலாம். இன்னொருவர் கேட்ட கேள்வி ஹிப்னாட்டிசம் மற்றும் மெஸ்மரிஸம் பற்றியது. தான் இவைகளைப்பற்றிய புத்தகங்களை நிறைய படித்திருப்பதாகவும் இவற்றை செயல் படுத்தி பார்த்ததாகவும் சொன்னார். ஆனால் தான் சோதனை செய்யும் நபர்கள் உடனே தூங்கிவிடுவதாகவும் கேள்விகளுக்கு பதில் தருவதில்லை என்றும் சொன்னார். இதைகேட்ட மருத்துவர் சற்று அதிர்ச்சி அடைந்துவிட்டார். நடைபாதைகளில் கிடைக்கும் இதுபோன்ற புத்தகங்களை அரைகுறையாய் படித்துவிட்டு இதுபோன்ற முயற்ச்சிகளை செய்வது மிகவும் ஆபத்தானதாம். இது சோதனைக்கு உட்படுவரின் வாழ்க்கையை பணயம் வைப்பதாகும். நன்பர்களே இது போன்ற நபர்களிடம் கவனமாக இருங்கள்! திரும்ப திரும்ப ஒரு செயலை செய்வது கூட ஒரு மன நோயின் அறிகுறியாம். பூட்டிய கதவை இருமுறை இழுத்துப் பார்த்தால் அது எச்சரிக்கை உணர்வாகும். ஆனால் சிலருக்கு பல முறை திரும்ப திரும்ப இழுத்துப் பார்ப்பார்க்கத் தோன்றும். அதன் பின்னும் வழி நெடுக சரியாக பூட்டினேனா என்று சந்தேகம் வந்துகொண்டே இருக்கும். சில பேர்களுக்கு கோவிலுக்குச் சென்று சாமி சிலையை பார்ததாலே கெட்ட கெட்ட எண்ணமாய் வருமாம். இத்தகைய நபர்கள் எல்லாவற்றிலும் அதீத நேர்த்தியை (perfectionist) எதிர்ப்பார்ப்பவர்களாக இருப்பார்கள். மேலும் அநியாயத்திற்கு நேர்மையாகவும் இருப்பார்களாம். ஒரு சில மருந்துகள் மூலமே இதை சரிசெய்ய முடியுமாம். எல்லா மனநோய்களுக்கும் சரியான சிகிச்சையும் மருந்தும் உள்ளதென்றும் மக்களுக்குத்தான் அதற்கான விழிப்புனர்வு வேண்டும் என்றும் சொல்லி மருத்துவர் விடை பெற்றார். எனக்குத்தான் சற்று குழப்பமாக இருந்தது யார் யார் மன நோயாளி இல்லை என்று.என்ன உங்களுக்குமா?? ஹா! ஹா!

2 comments:

Anonymous said...

குடி ஒரு மன நோய் ஆனால் குணப்படுத்தக் கூடிய நோய்.குடிப்பவரை மட்டுமன்றிக் குடும்பத்தையே அழித்துப் பாழாக்கக் கூடிய நோய்,ஒரு குடும்பப்
புற்று நோய்.எந்தக் குடிகாரரும் தான் குடிகாரர் என்று ஒத்துக் கொள்ள மாட்டார்.
அவர்கள் அதை ஒத்துக் கொள்ளாதவரை அவர்களைக் குணப்படுத்த முடியாது.அவர்களை உணர்ந்து ஒத்துக் கொள்ள வைத்துவிட்டால் பிறகு அதை நிலை நாட்டலாம்.ஒரு குடியிலிருந்து திருந்தியவர் தான் அதைச் செய்ய முடியும்.
உலகெங்கும் Alcohol Annonymus.Al Anon என்று குடிப்பவர்களுக்கும்,அவர்களது குடும்பத்தினர்க்கும் அமைப்புக்கள் உள்ளன.
தமிழகத்திலே சில நிறுவனங்கள் நன்கு செயல் படுகின்றன்.சென்னையில் டி.டி.கே மருத்துவ மனையும்,திருச்சியில் காஜாமலை மக்கள் மன்றமும் நன்கு செயல் படுகின்றன.
திரு லெனின்,பேராசிரியர் காந்தி இருவரும் ஒரு பறை,ஒரு கஞ்சிராவுடன் நடத்தும் கலை நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் அவர்கள் ஊரில் நடத்தி மக்கள் பயன் பெறச் செய்வதே பெரிய ஆக்கபூர்வ முயற்சியாகும்.9842028785 ல் தொடர்பு கொள்ளலாம்.

Anonymous said...

எந்தத் தீய பழக்கமானாலும் அதற்கு அடிமையானவர்கள் (Addicts) தாமாக மீள்வது அரிது. மருத்துவ உதவி கண்டிப்பாகத் தேவை.