எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 24 December 2008

மின்னும் சகார்த்தா! ( ஒளிப்படங்கள்)

இந்தோனேசியாவை முன்பெல்லாம் எல்லோரும் ஏழை நாடு என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றோ படிப்படியாக முன்னேறி வளரும் நாடுகள் வரிசையில் இடம் பிடித்து விட்டது. எது எப்படியோ என்னை பொறுத்தவரை இது ஒரு வளமான நாடு. ஏனென்றால் அவ்வளவு இயற்கை வளத்தையும் அழகையும் கொண்டுள்ளது இந்த நாடு. கீழே இருக்கும் படங்களை பார்த்தால் உங்களுக்கு இது ஏழை நாடாகவா தெரிகிறது? இப்போது இந்நாட்டின் தலைநகர் சகார்த்தாவின் அழகை கண்டுகளியுங்கள். படத்தை பெரிதாக்க படத்தின் மீது சுட்டுங்கள். மேலே படத்தில் உள்ளது சகார்த்தாவின் மையப்பகுதியி அமைந்துள்ள” மோனாஸ்” என்று அழைக்கப்படும் தேசிய நினைவுச்சின்னம். இது முந்தைய சாவா இந்துக்களின் லிங்க-யோனி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இதின் உச்சியில் 35 கிலோ தங்கத்தை கொண்டு அடர்த்தியான முலாம் பூசப்பட்ட தீச்சுடர் வடிவ கும்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 1961 -ல் அதிபர் சுகர்னோவால் ஆரம்பிக்கப்பட்டு 1975-ல் அதிபர் சுகார்த்தாவால் கட்டிமுடிக்கப்பட்டது. மோனாஸ் கோபுரம் மற்றுமொரு கோனத்தில். நீங்கள் மேலே பார்ப்பது சகார்த்தாவின் மையப்பகுதி. இந்த பகுதியில்தான் சகார்த்தாவின் முக்கிய நட்சத்திர விடுதிகளும் மிகப்பெரிய விற்பனை வளாகங்களும் உள்ளன.கீழே உள்ளது அதே மையப்பகுதின் மறு பகுதி இரவில் மின்னொளியில் மின்னும் காட்சி. இதில் பின்புலத்தில் தெரிவது நல்வரவு சிலை (துகு செலாமத் தத்தாங்). ஒரு சிறுவனும் சிறுமியும் கையைதூக்கி வரவேற்பது போன்று இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழே இருப்பவை அனைத்தும் சகார்த்தாவின் அழகிய சாலைகள் இரவில் மின்னொளியில் மின்னும் காட்சிகள். சகார்த்தாவின் சாலைகள் எப்போதும் சுறுசுறுப்பாகவே இருக்கும். இரவு நேர சகார்த்தா இன்னும் அழகாக இருக்கும். சகார்த்தாவின் இரவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இனிமையானவை.

Monday 22 December 2008

யாரைத்தான் நம்புவதோ!

இப்போதெல்லாம் யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. தனியார் நிதி நிறுவனங்கள்தான் பொதுமக்கள் பணத்தை வாங்கிக்கொண்டு கம்பி நீட்டுகிறார்கள் என்றால் அரசுத்துறை நிறுவனங்களும் இதையே செய்வது வருத்தமாக இருக்கிறது. இதுபோன்றதொரு நிகழ்வு பற்றிய தகவல் ஒன்று அண்மையில் வெளிவந்திருக்கிறது. என் நன்பர் ஒருவர் 1993 ஆம் ஆண்டு குசராத் அரசிற்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமான சர்தார் சரோவர் நர்மதா நிகாம் வெளியிட்ட டிடிபி (டீப் டிசுகவுண்ட் பாண்ட்) எனும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்தார். சர்தார் சரோவர் எனும் அணையை கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு இக்கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இந்த பத்திரம் ஒவ்வொன்றும் 3600 ரூபாய் முகவிலைக்கொண்டது. இப்பத்திரத்தின் முதிர்வுக்காலம் இருபது வருடங்கள். இவ்வாறு இருபது ஆண்டுகள் கழித்து முதிர்வு பெரும்போது அதாவது 2014-ல் முதிர்வுத்தொகையாக 1,11,000 ரூபாய் கிடைக்கும் என்று பத்திர வெளியீட்டின்போது அறிவித்தார்கள். இதுதான் பத்திரத்திலேயும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் இப்பத்திரங்கள் குசராத் அரசால் பாதுகாப்பிற்காக இணைச்சாண்றும் செய்யப்பட்டிருக்கின்றன். அதாவது இத்தகைய நிதி திட்டங்கள் திவாலாகும் நிலைக்கு வந்தால் குசராத அரசு இப்பணத்திற்கு பொறுப்பேற்கும் என்பதுதான் இதன் சாராம்சம். முதலீட்டாளர்கள் விரும்பினால் 9,11 அல்லது 15 ஆம் ஆண்டுகளில் தாமாக முன்வந்து பத்திரத்தை ஒப்படைத்து அன்றைய நிலையில் முதிர்வுத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். எளிதான மற்றும் பாதுகாப்பான முதலீடு என்பதால் லட்சக்கணக்கான நடுத்தர தட்டு மக்கள் இப்பத்திரத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் சென்ற மாதம் இந்நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில் இந்நிறுவனத்தின நிதி நிலையை காரணம் காட்டி இக்கடன்பத்திரங்களை முன்கூட்டியே திரும்ப பெற விரும்புவதாகவும் அவ்வாறு திரும்பப்பெறும் போது முதிர்வுத்தொகயாக 50000 ரூபாய் மட்டுமே வழங்கி கணக்கை முடித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு முதிர்வு பெற இன்னும் ஐந்து ஆண்டுகளே உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு முதலீட்டார்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தங்கள் பத்திரம் முதிவடையும் போது 1,11,000 கிடைக்கும் என்று திட்டமிட்டிருந்த முதலீட்டாளர்கள் என்ன செய்வது என்று தெறியாமல் கையைப்பிசைந்து கொண்டிருக்கின்றனர். வழக்கமாக இத்தகைய நீண்டகால முதலீடுகள் தங்கள் குழந்தைகளின் கல்லூரிக் கல்வி அல்லது திருமணச் செலவுகளை மனத்தில் கொண்டே செய்யப்படுகின்றன. மகனோ அல்லது மகளோ பெரியவர்களாகும் போது இது போன்ற முதலீடுகள் உதவும் என்றுதான் மக்கள் இத்திட்டங்களில் முத்லீடு செய்கிறார்கள். இப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இப்பிரச்சினையின் காரணத்தை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதாவது இந்நிறுவனம் போதுமான வருமானம் குறித்த திட்டமிடல் இன்றி இத்தகைய பத்திரங்களை வெளியிட்டுள்ளதாகவும் மேலும் அவர்கள் எதிர்பார்த்த வருமானம் இந்த திட்டத்தில் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால் 2001 ஆண்டு வெளியிடப்பட்ட தலைமை தணிக்கையாளர் அறிக்கையிலேயே இது குறித்து இந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்போது இந்நிறுவனம் அவற்றையெல்லாம் புறந்தள்ளியிருக்கிறது. ஆனால் இப்போது நிதி நிலைமை அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதால் இந்நிறுவனம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை நீதிமன்றம் அல்லது மக்களின் எதிர்ப்பால் இம்முடிவை இந்நிறுவனம் கைவிட நேர்ந்தால் பணத்தை எப்படி திருப்பித்தருவார்கள் என்று தெரியவில்லை. பாதுகாப்பு சானறளித்த குசராத் அரசும் இவர்களுக்கு உதவ முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனென்றால் இத்திட்டம் 2014-ல் நிறைவடையும் போது இவர்கள் முதலீட்டார்களுக்கு திருப்பித்தர சுமார் 8100 கோடி ரூபாய் தேவைப்படும். இது இம்மாநிலத்தின் அன்றைய நிதித்திட்டத்தின் மதிப்பில் பாதியாக இருக்கும். இந்த ஒரு முதலீட்டு திட்டத்திற்காக மட்டும் தனது மொத்த நிதியின் பாதியை இழப்பது ஒரு அரசு சாத்தியமானதாக இருக்காது. அப்போ முதலீட்டாளர்களின் கதி? அதோகதிதான். இன்னொரு அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவெனில், முன் காலத்தில் இதேபோன்றதொரு நிதிச்சிக்கல்கள் வந்தபோது இந்நிறுவனம் மேலும் புதிய பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் நிதி திரட்டி பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்திருக்கிறது. அப்பத்திரங்களும் பெரிய அளவில் விற்பனையாகியுள்ளன என்பதுதான் இதில் பெரிய கொடுமை. அதில் முதலீடு செய்தவர்கள் கதை என்ன ஆகப்போகிறதோ! ஆனால் அப்போதெல்லாம் இம்மாதிரியான பிரச்சினைகளை இந்நிறுவனம் வெளியில் சொல்லவில்லை. இதை தொடர்ந்துதான் 2001ல் தலைமை தணிக்கையாளர் இந்நிறுவனத்தை தனது அறிக்கையில் கண்டித்திருக்கிறார். அரசுத்துறை நிறுவனங்களே இவ்வாறு மக்களை ஏமாற்ற முற்ப்பட்டால் மக்கள் எங்கே போவார்கள் என்று புரியவில்லை! நீதிமன்றம் வழக்கு என்று அலைவதற்கு நடுத்தர வர்க்கத்திற்கு சக்தியிருக்கிறதா?

Thursday 18 December 2008

வளர்ச்சியின் நிறம் சிவப்பு !

அண்மைக் காலங்களில் எழுத்துலகிலும் ஊடகங்களிலும் உலக பொருளாதார தேக்க நிலை குறித்தும் முக்கியமாக அதில் இந்தியா மற்றும் சீனாவின் பங்கு குறித்தும் பரவலாக பல விடயங்கள் அலசப்படுகின்றன. மேலும் மேற்கு தேய்கிறது கிழக்கு வளர்கிறது போனற முழக்கங்களும் தென்படுகின்றன. கூடவே முதலில் வல்லரசாகப் போவது யார்? என்ற கேள்வியும் இந்தியா சீனாவை முந்திவிடும் என்ற அனுமானங்களும் பலமாக வீசுகின்றன. ஆனால் இந்த கருத்துக்களில் எல்லாம் எந்த அளவு உண்மை உள்ளது என்பது பெரிய கேள்வி. என்னைப்போன்ற பாமரனின் பார்வையில் இவை அனைத்தும் வெற்றுக் முழக்கங்கள் என்றே தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை சீனா என்ற நாடு பல ஆண்டுகளுக்குமுன்னாலேயே வல்லரசு நிலையை அடைந்துவிட்டது. இன்றைய சிக்கலான பொருளாதார நிலையினால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிற போதும் சாய்து கிடக்கிற வல்லரசுகளுக்கு முட்டு கொடுத்து நிறுத்தி இருப்பது சீனாதான். இன்றைக்கு வல்லரசு என்று தம்மை முன்னிறுத்திக் கொண்டிருக்கிற நாடுகளுக்கு இணையான ஆயத பலமும் பொருளாதார வளமும் பெற்றிருக்கும் ஒரே ஆசிய தேசம் சீனாதான். அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகள் இதை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியது. ஒலிம்பிக் போட்டியை கானவந்த மேற்கத்தியர்களே சீனாவின் வளர்ச்சியை கண்டு அசந்து போய் விட்டனர். சீனாவை பற்றி அவர்கள் கொண்டிருந்த தவறான அனுமானங்கள் முற்றிலும் தகர்ந்து போயின. இந்த போட்டிகள் சீனாவின் பிரமாண்டத்தையும் சீன மக்கள் தங்கள் நாட்டின் மீது கொண்டிருக்கும் அளவிலா பிணைப்பையும் அவர்களின் ஒற்றுமையையும் பறைசாற்றியது. இப்படி ஒரு ஒலிம்பிக் போட்டியை உலகம் இதுவரை கண்டதுமில்லை இனிக்கானப்போவதுமில்லை. மற்றொரு புறம் சிச்சுவான் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்ப்பட்ட போது அவர்கள் அதிலிருந்து மீண்ட வேகம் குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெற்ற புணரமைப்பு பணிக்காக ஆங்காங் பகுதியில் உள்ள ஒவ்வொரு பணியாளரும் தம் ஊதியத்திலிருந்து ஆயிரம் டாலர் அளவுக்கு வாரி வழங்கியது அந்நாட்டில் உள்ள குடிமக்களின் நாட்டுப்பற்றை பறை சாற்றுகிறது. ஒடுக்குவதாலோ கட்டாயப் ப்டுத்துவதாலோ இவற்றை பெறமுடியாது. உணர்வுப்பூர்வமான உந்துதலினால் மட்டுமே இது சாத்தியம். படம்: சீனாவின் சாலைகள் ஒவ்வொரு முறை சீனா செல்லும் போதும் அந்த தேசத்தின் உள் கட்டமைப்பு வசதிகளைப் பார்த்து நான் அசந்து போய்விடுவேன். வானுயுயர்ந்த கட்டிடங்கள் விசாலமான சாலைகள் விலையுயர்ந்த வாகனங்கள் என்று எல்லாமே பிரமாண்டம்தான். இவ்வளவு பெரிய தேசத்தில் அவர்கள் செய்திருக்கும் தரமான சாலை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் அலாதியானவை. பல்வேறு நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அபாரமானவை. தொழில் வாய்ப்புகள் உள்ளவை சின்னஞ்சிறு நகரமானாலும் அவைகளுக்கு உலகத்தரத்திலான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. ஒரு முறை யீவு எனும் சிறிய தொழில் நகரத்திலிருந்து 250 கிமீ தொலைவில் உள்ள ஆன்சாவ் எனும் நகரத்திற்கு சாலைவழியே பயணிக்க வேண்டியிருந்தது. நகரத்தை விட்டு வெளியில் வந்து நெடுஞ்சாலையில் இணைந்த பிறகு ஒரு இடத்தில் கூட குறுக்கிடும் சாலைகள் இல்லை. இந்த முழுத்தொலைவிலும் ஒரு இடத்தில் கூட மகிழுந்தின் நிறுத்துவிசையை பாவிக்கும் வாய்ப்பே வரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கு நேர்த்தியான சாலைகள் அங்கு இருக்கினறன. இடையிடையே மலையை குடைந்து சுரங்கப் பாதைகள் வேறு. அதுவும் போவதற்கும் வருவதற்கும். சொல்லப்போனால் யீவு என்பது ஒரு சிறிய தொழில் நகரம்தான். அப்படி என்றால் பெரிய தொழில் நகரங்களில் சாலைவசதிகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். படம்: ஆங்காங் – சென்சன் - கான்ச்சோவ் தொடர்வண்டி அதேபோல பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாக செய்து தரப்பட்டிருக்கினறன. இந்த வசதிகள் அனைத்தும் சாதாரண குடிமக்களும் பயன் படுத்துவதற்கு ஏற்ற செலவில் கிடைப்பது இவற்றின் சிறப்பம்சம். இதற்கு எடுத்துக்காட்டாக ஆங்காங் – சென்சன் - கான்ச்சோவ் நகரங்களுக்கு இடையிலான தொடர்வண்டி சேவையை சொல்லலாம். கிட்டத்தட்ட 180 கிமீ வேகத்தில் செல்லும் அள்வுக்கு இந்த தொடர்வண்டியும் அதன் பாதைகளும் அமைந்துள்ளன. இந்த தொடர்வண்டி பயணம் விமான பயணத்தைவிட சிறப்பாக இருக்கும். அதேபோல பெரும்பாலான நகரங்களில் சிறப்பான வாடகை மகிழுந்து சேவைகள் கிடைக்கின்றன. அதேபோல சிறந்த பேருந்து வசதிகளும் இருக்கின்றன. இவ்வளவு மக்கள் தொகையை வைத்துக்கொண்டு எவற்றை எப்படி இவ்வள்வு சிறப்பாக பராமரிக்க முடிகிறது என்று நினைத்தால் வியப்பே மிஞ்சும். படம்: யீவு நகர சாலைகள் அதே போல தொழில் துறையினருக்கு சீன அரசு செய்து கொடுத்திருக்கும் உள் கட்டமைப்பு வசதிகள் சிறப்பானவை. சீனாவின் ஒவ்வொரு தொழில் துறையிலும் நவீன தொழிற் நுட்பங்களை கொண்ட இயந்திரங்களை பயன்ப்டுத்துகிறார்கள். மாறிவரும் காலத்திற்கேற்ப இயந்திரங்களும் தொழிற்நுட்பங்களும் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அரசு தொழிற் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஒரு சிறிய பொருள் ஆனாலும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டாக கைக்கடிகாரத்தை எடுத்துக்கொண்டால் அதன் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிப்பதற்கு தனித்தனியாக ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இவை அந்தந்த பாகத்தினை தயாரிப்பதற்கு ஏற்றவாறு பல நவீன இயந்திரங்களை கொண்டிருக்கினறன. எல்லா பாகத்தையும் ஒரே இடத்தில் தயாரிப்பதில்லை. அதனால் ஒவ்வொருவரும் சிறந்த இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த முடிகிறது. தரமும் சிறப்பாக இருக்கிறது. கைக்கடிகாரத்திற்கு தேவையான ஒவ்வொரு பாகத்தையும் இந்த தொழிற்சாலைகளிடமிருந்து வாங்கி ஒரு இடத்தில் இணைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் உற்பத்தி அதிகரித்து செலவுக் குறைகிறது. ஒவ்வொரு பாகங்களை தயாரிக்கும் அனத்து நவீன இயந்திரங்களையும் ஒருவரே வாங்கி பயன்படுத்துவதால் ஏற்படும் பெரிய முதலீடு மற்றும் பராமரிப்பு செலவு தவிர்க்கப்படுகிறது. இதுதான் அவர்களின் குறைந்த விலையின் ரகசியம். மாறாக சீனாவில் தொழிலாளர்களின் கூலி குறைவு அதனால்தான் உற்பத்தி செலவு குறைவு என்பது சரியல்ல. ஏன் என்றால் இங்கு தொழிளாளர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஊதியம் தவிர்த்து தங்குவதற்கு இடமும் உணவும் சீருடையும் தொழிற்சாலைகளால் வழங்கப்படுகின்றன. மொத்தமே ஐந்து பேர் கொண்ட அலுவலகங்களில் கூட இவை பின்பற்றப் படுகின்றன. மேலும் அரசு நிர்ணயித்த குறைந்த ஊதிய விகிதங்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன. படம்: யீவு கமாடிட்டி மார்க்கெட் கழுகுப் பார்வையில் யீவு நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறு பொருள் மொத்த விற்பனை அங்காடி (யீவு கமாடிட்டி மார்க்கெட்) சீன அரசு சிறு தொழில் துறையினருக்கு செய்து தரும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். உலகிலேயே மிகப்பெரிய சிறு பொருள் அங்காடி இதுதான். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவுடன் அமக்கப்பட்டுள்ள இந்த அங்காடியில் சீனா முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள் தங்களின் நிரந்தர அரங்குகளை அமைத்துள்ளனர். எதில் அமைந்துள்ள மொத்த அரங்குகளின் எண்ணிக்கை 40000. இங்கு குண்டூசி முதல் மிதிவண்டி வரையிலான பொருட்கள் 200000 மேற்பட்ட வகைகளில் விற்பனை செய்ய படுகின்றன. ஒவ்வொரு பொருள் வகைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதனால் வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு தமது வியாபார பொருட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதாக உள்ளது. மேலும் சரியான விலைக்கும் உத்திரவாதம் ஆகிறது. இங்கு நாள் தோறும் 20000 மேற்ப்பட்ட வெளிநாட்டினர் வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி. மொத்த அங்காடியையும் சுற்றிப்பார்க்க சில வாரங்கள் கூட ஆகும் என்றால் பாத்துக்கொள்ளுங்கள்.. படம்: யீவு கமாடிட்டி மார்க்கெட் முன்புறம் தொழில் துறையை ஆதரிக்கும் அதே நேரம் விவசாயத்திற்கும் சம பங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு முறை மகிழுந்தில் செல்லும் போது கிட்டத்தட்ட 50 கிமீ தூரம் சாலையின் இரு புறமும் பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்யப்பட்டிருப்பதை பார்த்தேன். உடன் வந்த சீன நன்பரிடம் இவ்வள்வு பெரிய விவசாயிகள் இங்கே இருக்கிறார்களா என்று அவற்றைக் காட்டிக் கேட்டேன். அதற்கு அவர் இவையெல்லாம் அரசால் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன என்றார். அந்த அளவுக்கு அரசு விவசாயத்தை ஆதரிக்கிறது. இப்படி நாம் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். படம் :சுரங்கப் பாதை இத்தகைய உள் கட்டமைப்புகளும் சாலை வசதிகளும் தொழிற்துறை வசதிகளும் இந்தியாவில் உருவாக இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும். இந்த நிலையில் நாம் சீனாவை இப்ப முந்துவோம் அப்ப முந்துவோம் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய்தான். சீனா என்பது ஒரு வளர்ந்துவிட்ட வல்லரசு. அவர்களின் நிலையை அடைய இந்தியர்களும் இந்தியாவும் இன்னும் தயாராகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் இவ்வாறு சொல்வதால் நான் இந்தியாவை மட்டம் தட்டுகிறேன் என்று பொருளில்லை. வள்ளுவம் சொல்வது போல் எதிரியின் பலவீனங்களைவிட பலத்தை அறிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டுவிட்டு வீன் கற்பனையில் உழல்வது நம் வளர்ச்சிக்கு உதவாது. சீனாவை நாம் முந்தவேண்டும் என்றால் இந்தியர்கள் இன்னும் அதிகமாக உழைக்கவும் திட்டமிடவும் வேண்டும். உண்மையில் எனக்கு பொதுவுடமை சித்தாந்தம் குறித்தோ அவற்றின் அடிப்படை கோட்பாடுகள் குறித்தோ எனக்கு சிறிதும் புரிதல் இல்லை. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சனநாயகத்திற்கும் பொதுவுடமைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. என்னை பொறுத்தவரை எந்த ஒரு ஆட்சி முறையையும் நல்லது கெட்டது என்று வெளியில் இருப்பவர்கள் கணிப்பதைவிட அதை ஏற்றுக்கொண்டிருக்கும் மக்கள் அதை உறுதிப்படுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். எந்த ஆட்சிமுறை அதன் மக்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் நல் வாழ்க்கையையும் அளிக்கிறதோ அதுவே சிறந்த ஆட்சிமுறை என்று நான் சொல்வேன். அது பொதுவுடைமை ஆட்சியா அல்லது சனநாயக ஆட்சியா என்பதெல்லாம் அடுத்ததுதான். ஒரு வேலை நம்மூரில் இருக்கும் பொதுவுடமைவாதிகள் என்று தம்மை கூறிக்கொள்பவர்கள் பொதுவுடமை சித்தாந்தம் குறித்து நமக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி விட்டார்களோ என்று கூட சில நேரம் எனக்குத் தோன்றும். இதை நான் முக்கியமாக இங்கே குறிப்பிடுவதற்கான காரணம் இக்கட்டுரையை படிப்பவர்கள் என்னையும் அவர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதால்தான்.

Monday 15 December 2008

ஆக்சுபோர்டு பட்டமும் ஆண்டியப்பன் கோவனமும் !

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று நம் ஊர்க்காட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம்ம ஊரு விவசாயிகளுக்கு நல்லாப் பொருந்தும். பாரட்லா படித்த நம் அரசியல்வாதிகளிடம் ஒலிவாங்கி கிடைத்துவிட்டால் போதும் ஒரு விசயத்தை மறக்காமல் கூவி விட்டுப் போவார்கள். அது விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு அவர்களின் முன்னேற்றத்துக்கு நாங்கள் ஆனதை செய்வோம் என்பதுதான். அது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் பட்ட பால பாடம். அதனால் அதை மறக்காமல் ஒவ்வொரு முறையும் கூவி விட்டு செல்வார்கள். அதன் பிறகு விவசாயிகளைப் பற்றி அவர்கள் மறந்தும் கூட நினைப்பதில்லை. இது அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட இரண்டாம் பாடம். ஆம்! விவசாயிகளை நினைத்தால் ஆட்சி நடத்த முடியாது என்பதுதான் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் ப்ட்டிருக்கிறது. மாத்திக்கட்ட கோவனம் கூட இல்லாத விவசாயிக்கும் இவர்கள் பேச்சையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள நேரமோ திருப்பிக்கேட்க சக்தியோ இருப்பதில்லை. ஊரை அடித்து உலையில் போடும் ரிலையன்சு சகோதரருக்குள் சக்காளத்தி சண்டை என்றால் கூட பிரதமரே இருக்கின்ற எல்லா வேலையையும் போட்டுவிட்டு சமாதானம் பேச போய்விடுவார். காரணம் அவர்கள் சக்காளத்தி சண்டையினால் பங்கு சந்தை எனும் சூதாட்டம் படுத்துவிடுமாம். அதனால் நாட்டின் பொருளாதாரமே ஆடிப்போய்விடுமாம். ஆனால் ஊருக்கே உணவு தரும் விவசாயின் பிரச்சினைகளை எத்தனை மேடை போட்டுக்கத்தினாலும் கதறினாலும் அவரின் செவிட்டு காதுகளுக்கு அவை கேட்பதே இல்லை. நம் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை விவசாயிகள் என்பவர்கள் ஒரு பிச்சைக்கார கூட்டம். இவர்கள் போடும் கடன் தள்ளுபடி மற்றும் மானியம் போன்ற பிச்சைகளை பொறுக்கிக்கொண்டு ஓட்டுப் போடும் கூட்டம். இது அவர்களுக்கு அமரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் படித்த பொருளாதாரம் சொல்லிக்கொடுத்த பாடம். நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதமே உள்ளத் தொழில் துறையினருக்கு பிரச்சினை என்றால் உடனே அம்பானியையும் ஆசீசு பிரேம்சீயையும் பக்கத்தில் உட்கார வைத்து கூட்டம் போடுவார் நம் பாரதப் பிரதமர். ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் மூலாதாரமான விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டால் கூட அவர்களின் பிரதிநிதிகளை கூப்பிட்டு பேச அவருக்கு தோன்றுவதே இல்லை. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தேர்தல் வந்தால் செலவுக்கு இந்த பஞ்ச பரதேசிக் கூட்டமா பொட்டி கொடுக்கப் போகிறது. நம்ம நாட்டு அரசுகளும் அதன் மந்திரி பிரதானிகளும் விவசாயிகளுக்காகவும் விவசாய தொழிலாளர்களுக்காகவும் கொண்டுவரும் திட்டம் எதுவும் அவர்களுக்குப் முழுமையாகப் போய் சேருவதில்லை என்பது அவர்களுக்கே நன்குத் தெரியும். இத்திட்டங்களின் நோக்கமும் அது அல்ல. இத்திட்டங்கள் அனைத்தும் மேல் மட்டத் தலைவருக்கு கொடிபிடிக்கும் அடி மட்டத்தலைவர்கள் பணம் பார்க்க வேண்டி கொண்டுவரப்பட்டவை. ஆனால் இத்திட்டங்கள் தவறாமல் இவர்களின் ஆட்சியின் சாதனைப்பட்டியலில் இடம் பிடிக்கும். அதையும் நம்பி நாமும் வாக்களித்துவிட்டு வந்துவிடுவோம். அண்மையில் குறைந்தப்பட்ச வேலைத்திட்டம் என்ற திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் ஊரகப்பகுதியிலுள்ள விவசாயக் கூலித் தொழிளாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் 90 நாட்கள் நேரடி வேலை தருவதுதான். இதன் மூலம் ஊரக ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரி சுத்தப் ப்டுத்தப்பட திட்டமிட்ப்பட்டன. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் ஏற்கனவே ஊரகப்பகுதிகளில் விவசாய பணிகளைச் செய்வதற்கு கூலித் தொழிளாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் அவர்களுக்கு குறைந்த பட்ச வேலை கொடுக்கிறார்களாம். சரி வேலை கொடுத்தார்கள். கூலியை ஒழுங்காக கொடுத்தார்களா? நாளொன்றுக்கு அரசு நிர்ணயித்து வழங்கியது 80 ரூபாய். ஆனால் தொழிளாளர்களுக்கு வழங்கப்பட்டதோ இதில் பாதிதான். மீதியை இவர்களுக்கு வேலை கொடுத்த ஊராட்சித் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் தார்மீக உரிமையோடு பகிர்ந்து கொண்டார்கள். சரி கூலிதான் இப்படி வேலையாவது ஒழுங்காக நடந்ததா? ஒழுங்காக நடந்திருந்தால் ஒரு வார மழைக்கே நம் மக்கள் இந்த பாடு பட வேண்டியிருக்குமா? நம் ஆக்சுபோர்டு பொருளாதார நிபுணர் முன்னாள் நிதி மந்திரி இந்நாள் உள்துறை ம்ந்திரி 60000 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக்கடன் தள்ளுபடி அறிவித்தார். இதனால் உண்மையிலேயே சிரமப்படும் விவசாயிகள் பயனடைந்தார்களா என்று உங்களுக்கு தெரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள். உண்மை தெரிய வரும். இதில் அதிகம் பயனடைந்தவர்கள் விவசாயத்தைக் காட்டி வேறு தொழிலுக்கு கடன் வாங்கியர்கள்தான். கடன் தள்ளுபடி என்றால் திருப்பி கட்டியவன் கட்டாதவன் அனைவருக்கும் அல்லவா வழங்கியிருக்க வேண்டும். கடினப்பட்டு வாயை வயிற்றைக்கட்டி கடனை திருப்பிக் கட்டியவனுக்கு தள்ளுபடியில்லை. திருப்பிக்கட்டாமல் கல்தா கொடுத்தவனுக்குத்தான் தள்ளுபடி. இந்த கடன் தள்ளுபடியால் விவசாயி பயன் அடைந்தானோ இல்லையோ அவர்களுக்கு உண்மையிலேயே உதவியாக இருந்த கூட்டுறவு வங்கிகள்தான் திவால் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிடம் விவசாயிகள் கடன் கேட்டு சென்றால் மிகப் பெரிய கும்பிடு போடுகிறார்கள். இவர்களின் பொருளாதார நிபுணத்துவத்தின் லட்சனத்தைப் பார்த்தீர்களா? எல்லாம் சரி. மேலை நாட்டில் பொருளாதாரம் படித்து விட்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த பொருளாதார நிபுணர்களால் நம் விவசாயிகளுக்கு உதவிதான் செய்ய முடியவில்லை. உபத்திரவமாவது கொடுக்காமல் இருந்தால் தலையெழுத்தே என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் அவன் கட்டியிருக்கும் கந்தைக் கோவனத்தையும் அவிழ்க்கப்பார்க்கிறார்கள். அதைத்தான் நம்மால் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை. பெப்சி கோக் போன்ற அமரிக்க நிறுவனங்கள் மக்களின் உடல் நலத்தை முற்றிலும் கெடுக்கக்கூடிய பானங்களை சொற்ப செலவில் தயாரித்து கொள்ளை லாபத்திற்கு விற்கலாம். 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய சிமண்டை சிண்டிகேட் எனும் கூட்டு சேர்ந்து 300 ரூபாய்க்கு விற்று கூட்டுக் கொள்ளையடிக்கலாம். அதையெல்லாம் தட்டிக்கேட்க இந்த அரசுகளுக்கு யோக்கியதையில்லை. இது எல்லாம் நம் பொருளாதார சூரப்புலிகளின் சீழ் பிடித்த காமாலைக் கண்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியே மக்கள் கத்தி கதறி இவர்களின் செவிட்டு காதில் ஓதினாலும் மேற்படி சிண்டிகேட் கூட்டுக் கொள்ளையர்களிடம் விலையை குறைக்கச் சொல்லி மாறி மாறி கருணை மனு போடுவார்கள். கண்ணுக்கு கண்ணெதிரே நடக்கும் பொருளாதார அட்டூழியங்களை தடுக்க மகாகணம் பொருந்திய இவர்களுக்கு திராணி கிடையாது. ஆனால் நம் விவசாயிகளுக்கோ தான் இரத்த வேர்வை சிந்தி விளைவிக்கும் விவசாய விளைப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை கிடையாது. இந்த சீழ் பிடித்து புரயோடிய அரசின் அதிகாரிகளும் இடைத்தரகர்களும்தான் விவசாயப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். இடையில் இருப்பவர்கள் எல்லாம் கொழுத்து பெருக்க உற்பத்தி செய்த விவசாயிக்கு மிஞ்சியது ஒட்டிய வயிரும் கந்தை கோவணமும்தான். என்னவோ இழவு! இவர்கள் விலையை நிர்ணயம் செய்து தொலையட்டும். அதில் ஒரு நியாயம் இருக்கவேண்டாமா? சென்ற வருடம் 40 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் இந்த வருடம் 55 ரூபாய். ஆனால் சென்ற வருடம் ஒரு டன் கரும்புக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 1036 ரூபாய். இந்த வருடம் 1050 ரூபாய். உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் விற்பனை விலை இப்படி இருந்தால் விவசாயி எப்படி தாக்குப் பிடிக்கமுடியும்? மேலை நாடுகளில் பட்டம் பெற்ற நம் பொருளாதார சூரப்புலிகளுக்கு இந்த கணக்கு புரியாதா? கேட்டால் விவசாய இடு பொருட்களுக்கு மானியம் வழங்குவதால்தான் இப்படி என்கிறார்கள். சரி! மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினார்களா? அதுவும் இல்லை. ஆண்டு ஒன்றிற்கு உர மாணியமாக சுமார் 125000 கோடி அரசால் வழங்கப் படுகிறது. ஆனால் இது உரம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்குத்தான் நேரடியாக வழங்கப்படுகிறது. அவர்களும் ஒன்றுக்கு இரண்டாக உற்பத்திக் கணக்கைக் காட்டி மாணியத்தை கொள்ளையடித்து விடுகிறார்கள். இப்படி ஏன் தலையை சுற்றி மூக்கை தொடவேண்டும்? நேரடியாக விசாயிகளுக்கு மாணியம் கொடுத்தால் என்ன? வேறு எதற்காக நம் மந்திரி பிரதானிகளின் பொட்டி வாங்கும் வேலையை எளிதாக்கத்தான். பயிர் செய்ய ஆற்றில் நீரோ மழையோ இல்லை. நிலத்தடி நீரை எடுக்க மின்சாரமும் தட்டுப்பாடு. களையெடுக்க உழுதுப்போட ஆட்களும் இல்லை. நவீன இயந்திரங்களை வாங்கி விவசாயம் செய்ய வசதியும் இல்லை. இவற்றை எல்லாம் கடந்து தன் சொந்த உழைப்பில் விளைவித்தாலும் விளைப்பொருட்களுக்கு கட்டுப் படியாகும் விளையும் இல்லை. பார்த்தான் விவசாயி இந்த மண்ணையே நம்பியதால்தானே தனக்கு இந்த நிலைமை என்று தன் பிள்ளைகளை எப்பாடு பட்டாவது படிக்க வைத்து பட்டனத்துக்கு அனுப்பி விட்டான். இன்று இரண்டாம் தலைமுறை விவசாயிகளே நாட்டில் இல்லை. விவசாயத்தில் ஈடு பட்டிருக்கும் இந்த ஒரு தலைமுறையும் போய்விட்டால் அப்புறம் சிறு குறு விவசாயிகளை தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். நிலைமை இப்படியே போனால் பாரம்பரிய விவசாயம் எனும் தொழில் நம் நாட்டிலே இல்லாமலே போய்விடும். இதைப் பற்றியெல்லாம் பட்டனத்தில் வாழும் நம் துரைமார்களுக்கு கவலையில்லை. அரிசி மரத்தில் காய்க்குமா செடியில் விளையுமா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. ஏன் என்றால் இன்றுவரை அவர்களுக்கு தேவையானவை பணம் கொடுத்தால் கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது அது எங்கிருந்து வந்தால் அவர்களுக்கென்ன? அதை விளைவித்தவன் பட்டினியாகக் கிடந்தால் அவர்களுக்கென்ன? ஆனால் காலம் இவர்களை இப்படியே அனுபவிக்க விட்டுவிடாது. மனிதன் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை அதுதான் அவனுக்கு கற்றுக் கொடுக்கும். சிறு வியாபாரிகள் சிறு தொழில்கள் என்று அனைத்தையும் வின்று விழுங்கிய டாடா பிர்லா ரிலையன்சு போன்ற ஆதிக்க சக்திகளும் பன்னாட்டு பன்னாடைகளும் இன்று சிறு குறு விவசாயிகளையும் விழுங்கக் காத்திருக்கின்றன. நாட்டின் முழு விவசாயமும் இவர்களின் கட்டுப்பாட்டுக்கு போகும் ஆபத்து காத்திருக்கிறது. இதை அறியும் பட்டினத்து துரைமார்கள் இன்னும் ஆனந்தப்படக்கூடும். ஏன் என்றால் ரிலையன்சு பிரசு கடையில் பொருட்கள் இன்னும் விலை குறைவாகக் கிடைக்கக்கூடும் என்று. ஆனால் அப்ப்டியெல்லாம் ஆனந்தப்பட விட்டுவிட மாட்டார்கள் நம் முதலாளிகள். அப்படி ஒரு நிலைமை வந்தால் அன்று அவர்கள் வைத்ததுதான் விலை. இன்று விவசாயப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அரசு அன்று அவர்கள் போடும் ரொட்டித்துண்டுக்கு வாலாட்டிவிட்டு தேமே என்று போய்விடுவார்கள். ஆகவே நம் சிறு குறு விவசாயிகளை காக்கவேண்டியது நம் அவசரக்கடைமை. மனசாட்சி இருக்கும் அரசியல்வாதிகள் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். பொதுமக்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் நாட்டுப் பொருளாதார சூரப்புலிகள் ஆக்சுபோர்டிலும் கேம்பிரிட்சிலும் படித்து விட்டு உலகப் பொருளாதார தேக்க நிலையை போக்க வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் வல்லரசு கணவு வேறு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்த படோபங்கள் அனைத்தையும் ஒரமாய் சுருட்டி வைத்துவிட்டு இந்த சிறு குறு விவசாயிகள் அறுகிப்பொவதை தடுத்து நாட்டின் அடுத்த வேளை கஞ்சிக்கு வழி செய்தால் தேவலாம். கூடிய விரைவில் இந்தியர்களுக்கு சந்திரனில் குடியிருக்க அடுக்ககம் கிடைக்கலாம். ஆனால் பூமியில் குடிப்பதற்கு கஞ்சிதான் கிடைக்கப்பொவதில்லை!

Monday 1 December 2008

காயமே இது பொய்யடா! ( டவுன் சின்ரோம் பற்றிய பதிவு)

வேகமாக போய்க்கொண்டிருக்கிறது அவசர உலகம். அறிவியல் கண்டுபிடிப்புகள் நாள்தோறும் மனிதர்களுக்கு புதிய புதிய வசதிகளை நாளும் வாரி வழங்கிக்கொண்டுருக்கிறது. இந்த புதிய புதிய வசதிகள் மனிதர்களை இயற்கையிலிருந்து வெகுதூரம் கொண்டுசென்று விட்டது. அதானால்தானோ என்னவோ இயற்கையும் மனிதனுக்கு இன்னும் பல சவால்களை விடுத்துக்கொண்டே இருக்கிறது. என்னதான் பிரபஞ்ச தொற்றத்தின் சூட்சுமங்களை கண்டுபிடிக்கிறோம், கடவுள் துகளை உருவாக்குகிறோம் என்று மனிதன் சொன்னாலும், இன்னும் மனித இனத்திற்கான பல முக்கிய சவால்களின் முடிச்சுகளை அவனால் அவிழ்க்க முடியவில்லை என்பதே உண்மை. அப்படியே முடிச்சுகள் அவிழ்ந்தாலும் அவற்றை தடுப்பதற்கான் வழி தெறியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறை ஆங்க்காங்கு செல்லும் போதும் எனது வங்காள நன்பர் ஒருவரை சந்திப்பது வழக்கம். கடந்த பதினைந்து வருடமாக அவர் அங்கே வசிக்கிறார். வேலைகள் முடிந்த பிறகு மாலை நேரங்களில் ஒய்வாக மணிகணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அவர் எண்ணைவிட அதிக விடய ஞானம் உள்ளவர் என்பதால் அவரிடமிருந்து பல புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அவரிடம் என் நவீன மாற்றங்கள் குறித்த எனது எண்ணத்தை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் மாறிவரும் காலத்திற்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம் என்றார். ஆனால் எந்த நவீன வசதியும் நாட்டின் கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும். இல்லையெனில் அது எதிர்மறை பலனைத்தான் தரும் . இந்த நிலை இந்தியாவில் இல்லை என்றார். மேலும் இந்தியர்கள் என்னதான் அறிவுசார் ஆளுமைகள் பெற்றிருந்தாலும் அது மக்களுக்கு முழு அளவில் உதவவில்லை. பல மருத்துவ வசதிகள் இன்னும் இந்தியாவை சென்றடயவில்லை. அப்படியே கிடைத்தாலும் அது நம்மைப்போல சாதாரண மனிதர்களுக்கு கானல் நீர்தான். இது நவீன முன்னேற்றங்கள் இந்தியாவில் இன்னும் பரவலாக்கப்படவில்லை என்பதற்கான் சான்று என்றார். இதற்கு எடுத்துக்காட்டாக அவர் குறிப்பிட்டது “டவுன் சின்ரம்” என்னும் நோயை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வசதியை பற்றித்தான். இந்நோய் பற்றி நான் முன்பே அறிந்திருந்தாலும் இது விதியின் செயல் என்றும் இதை நம் சக்தியால் கண்டுகொள்ள முடியாது என்றுதான் நினைத்தேன். ஆனால் இதை கருவிலேயே கண்டுபிடித்து அந்த கருவை தவிர்த்து விடும் வாய்ப்புகள் தற்காலத்தில் உள்ளன என்றார். இந்த விடயங்கள் எனக்கு மிகவும் புதியவை. என்னை போன்றே பலரும் இருக்கக்கூடும் எண்ணத்தில் இது குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெற வேண்டும் என்பதற்க்காகத் தான் இந்த பதிவு. ஏதேனும் தொழிற்நுட்ப தவறுகள் இருந்தால் நன்பர்கள் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன். டவுன் சின்ரோம் என்னும் நோய் மனிதனின் மரபணுக்களில் ஏற்படும் கோளாறுகளினால் உருவாகிறது. இந்நோய் கண்டவர்கள் மாறுபட்ட முகத்தோற்றத்துடனும் மூளை வளர்ச்சி குறைபாடுகளுடனும் கானப்படுவர். தட்டையான முகம், மேல் நோக்கி வளைந்த கண்கள், அழுந்திய மூக்கு மற்றும் துருத்திய நாக்கு போனறவை இவர்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும். இவர்களை இருதய நோய்கள் மற்றும் லுக்குமியா நோய்கள் எளிதில் தாக்கும் வாய்ப்பும் இருக்கிறது. முறையான பராமரிப்பு மற்றும் பயிற்ச்சிகள் மூலம் இவர்களும் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள இயலும். பண்டைய காலந்தொட்டே இந்நோய் மனிதர்களை தாக்கியதற்கான குறிப்புகள் வரலாற்றுப் பக்கங்களில் கானப்படுகிறது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் டாக்டர் லாங்டான் டவுன் என்பவர்தான் இந்நோய் குறித்த முறையான தகவல்களை முதன் முதலில் வெளியிட்டார். அதுமுதற் கொண்டு இந்நோய் அவரது பெயாராலேயே டவுன் சின்ரம் என்று அழைக்கப்படுகிறது. இவரே இந்நோயின் தந்தை என்று அறியப்படுகிறார். அது முதலே இந்த நோய்ப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடத்தப்பட்டு வந்தன. இறுதியாக 1959 ஆம் ஆண்டு செரோம் லியோன் எனும் பிரஞ்சு மருத்துவர் இந்நோய் குரோமோசோம்களில் ஏற்படும் ஒரு குறைபாட்டினால் உருவாவதை கண்டுபிடித்தார். இது இந்நோயை பற்றிய அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவியது. மனிதனின் உடலானது பல கோடி செல்களின் கூட்டமைப்பு என்பது நமக்குத் தெரியும். இந்த செல்களின் மையப்பகுதி நியுக்குளியசு என்று அழைக்கப்ப்டுகிறது. இங்குதான் நமது பாரம்பரிய குணங்களை நிர்ணயிக்கினற மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணுக்கள் X வடிவிலான அடுக்குகளாக உள்ளன. இவை குரோமோசோம் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நியூக்ளியசிலும் 23 சோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் சரிபாதி குரோமோசோம்கள் தாயிடமிருந்தும் மறுபாதி குரோமோசோம்கள் தந்தையிடமிருந்தும் பெறப்படுகின்றன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள அடுக்கில் சரியாக 21 ஆம் சோடியில் ஏற்படும் கோளாறினால் இந்நோய் ஏற்படுகிறது என்று செரோம் லியோன் கண்டுபிடித்தார். அதாவது இந்நோய் உள்ளவர்களுக்கு மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை 46க்கு பதிலாக 47 இருக்கும். குரோமோசோம் அடுக்கில் சரியாக 21 ஆம் சோடியில் இரண்டு குரோமோசோம்களுக்கு பதிலாக மூன்று குரோமோசோம்கள் இருக்கும். இந்த கோளாறு மனிதர்களுக்கு டவுன் சின்ரம் எனும் நோயை உருவாக்குகிறது. இந்த நோயிக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்க படவேயில்லை. ஆனால் இந்த நோயை கருவிலேயே கண்டறிந்து இந்நோய் இருப்பின் கருவை கலைத்துவிடும் நடைமுறை மேலை நாடுகளில் உள்ளது. இதற்கு இரண்டு பிரிவான சோதனை முறைகள் நடைமுறையில் உள்ளன. 1. மேலாராய்தல் முறை (screening tests) 2. மரபனு பகுப்பாய்வு முறை (diagnostic tests) மேலாராய்தல் சோதனை – ட்ரிபிள் ச்கிரின் (Triple Screen )மற்றும் ஆல்பா ஃபெட்டோபுரோட்டின் ப்ளசு (Alpha-fetoprotein Plus ) ஆகிய சோதனை முறைகள் இதில் அடங்கும். கருவுற்ற தாயின் ரத்தத்தை எடுத்து பரிசோதித்து இந்நோயின் தாக்கம் குறித்து முடிவு செய்யப்படுகிறது. இச்சோதனைகள் 15 முதல் 20 வார கர்ப்பகாலத்தில் செய்யப்படுகின்றன. இந்த முறைகள் மூலம் இந்நோயை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் 60% ஆகும். மரபனு பகுப்பாய்வு முறை – குரோனிக் வில்லசு சாம்பிளிங் (சி.வீ.சா – 8 முதல் 12 வார கரு) (chorionic villus sampling (CVS)) அமீனோசெண்டீசு ( 12 முதை 20 வார கரு) (amniocentesis ) பியுபி சாம்பிளிங் சோதனைகள் ( 20 வாத்திற்கு மேற்ப்பட்ட கரு) (percutaneous umbilical blood sampling (PUBS)) மேற்கண்ட மூன்று சோதனைகளும் இப்பிரிவில் அடங்கும். இச்சோதனைகளை செய்ய மிகுந்த பயிற்ச்சியும் எச்சரிக்கையும் தேவை. இல்லாவிட்டால் அது தாய் மற்றும் சிசுவின் உயிருக்கு ஆபத்தாய் முடியும். கர்ப்பத்தில் உள்ள சிசுவின் பிளசண்ட்டா எனும் உயிர் திரவம் மிகக்கவனமாக சேகரிக்கப்பட்டு மரபனு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இம்முறையின் மூலம் 98-99% துல்லியமாக இந்நோயின் தாக்குதலை அறியமுடியும். இந்நோய் மத இன நிற தேச வேறுபாடின்றி யாவரையும் தாக்குகிறது. ஆனால் இந்நோய் தாக்குண்டவர்களை ஆராய்ந்ததில் 80% பேர் 35 வயதிற்கு மேற்பட்ட தாயின் கர்ப்பத்தில் உருவானவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. தாயின் வயது அதிகரிக்க அதிகரிக்க இந்நோய்க்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதுவும் இந்த நோய் தற்போது 1:800 என்ற விகித்தில் அதாவது பிறக்கின்ற 800 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்நோயின் தாக்குதல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது மிகவும் வருந்த தக்க செய்தி. அதனால்தான் நாம் அனைவரும் இந்நோயைப்பற்றிய விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியமாகிறது. மாறிவரும் சமுதாய சூழல்களால் பெண்களின் திருமண வயது கணிசமாக உயர்ந்திருக்கிறது. குடும்பத்திற்காக பொருளீட்ட வேண்டியும் குடும்பத்தின் பொறுப்புகளை சுமக்க வேண்டியும் பல பெண்கள் தங்களின் திருமணத்தை தள்ளிப்போடவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருமண பந்தத்தின் மீது பிடிப்பில்லாத நாகரீக மங்கையரும் திருமணத்தை முடிந்தவரை தள்ளிப்போடுகிறார்கள். இவர்கள் திருமணத்திற்கு பின் முதல் கற்பமடைய 35 வயதிற்குமேல் ஆகிறது. இவர்களின் குழந்தைகளுக்கு இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி இச்சோதனைளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இந்த வசதிகள் இந்தியாவில் கிடைக்கினறனவா என்று தெரியவில்லை. விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டம் இட்டால் அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டும். நன்றி!