எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Saturday 4 October 2008

முகத்தில் கரியை பூசிக்கொள்ளாதீர்கள் !

நாங்கள் இங்கு வந்தபுதிதில் பல இந்தோனேசிய நடைமுறைகள் எங்களுக்கு சரிவர புரியவில்லை. அதனால் இந்நாட்டை பற்றிய எங்களுடைய மதீப்பீடுகள் சற்று குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக நம் நாட்டைப்பற்றி உள்ளூர் தமிழர்களிடம் சற்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் இந்தியாவில் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் இங்கு இது சரியில்லை அது சரியில்லை என்று எதையாவது பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு நாள் எங்கள் முகத்தில் சரியாக கரியை பூசிக்கொள்ள போகிறோம் என்று நாங்கள் உணர்ந்திருக்கவில்லை! இங்கேயே பிறந்து வளர்ந்த ஒவ்வொரு தமிழருக்கும் ஒரு முறையாவது ஊருக்கு சென்று கால் வைக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஊர் என்றாலே அவர்களின் பாவிப்பில் அது தமிழகத்தை குறிக்கும். அவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தாலும் தமிழ்நாட்டை இன்றும் ”ஊர்” என்றுதான் அழைப்பார்கள். அதாவது தமிழ்நாட்டை இன்றும் அவர்கள் சொந்த ஊர் என்றே பாவிக்கிறார்கள். எங்களையும் ஊர் ஆட்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நம்ம ஆள் இரண்டு மாதம் அமரிக்காவிற்கு பயிற்ச்சிக்கு சென்று திரும்பினாலே தமிழ்நாட்டை பார்க்கிற பார்வையே வேறு மாதிரியாக இருக்கும். சரி சரி விசயத்திற்கு வருகிறேன். இவ்வாறு நாம் பாடிய சுய புராணங்களை நம்பிய ஒரு இந்தோனேசிய தமிழர் சமீபத்தில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் சென்று திரும்பியிருந்தார். அவருடன் வழக்கம்போல அலாவிக்கொண்டிருந்தோம். சற்று ஏமாற்றம் மேலோங்கிய தொனியில் அவர் கேட்ட கேள்விகள்தான் எங்கள் முகத்தில் கரியை பூச வைத்தது. அவை, 1. நம்மூரில் ஏன் பாதையிலேயே மலம் ஜலம் கழிக்கிறார்கள்? புகையிலையை ஏன் துப்பிவைக்கிறார்கள்? இந்நிலை கிராமங்களில் என்றால் கூட பொறுத்துக்கொள்ளலாம். சென்னை மாநகரிலேயே இவ்வாறு இருப்பதை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை? 2. அவசியமே இல்லாமல் ஏன் ஹாரனை பயன்படுத்துகிறார்கள்? நோயாளிகளையும் குழந்தைகளையும் இது பாதிக்காதா? 3. சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன? நீங்கள் எல்லாம் ஒழுங்காக வரி கட்டுவதில்லையா? 4. விமான நிலையங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் ஏன் அலுவலர்கள் எல்லோரும் கடு கடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இங்கெல்லாம் ஏன் தமிழில் பேசினால் கண்டுகொள்ள மாட்டேன்கிறார்கள்? ஆங்கிலம் படிக்காதவர்கள் மற்றும் அதிகம் படிக்காதவர்கள் இங்கெல்லாம் செல்லக்கூடாதா? 5. கோயில்களில் ஏன் சிறப்பு தரிசன கட்டணம் வாங்குகிறார்கள்? உடல் ஊனமுற்றோர்களுக்கு வயதானவர்களுக்கு சிறப்பு வழி இல்லை. ஆனால் நல்லா இருப்பவர்களுக்கு பணம் கொடுத்தால் ஏன் சிறப்பு வழி? 6. கோயில்களில் ஏன் நமக்கு புரியாத மொழியிலேயே எல்லாம் செய்கிறார்கள்? ஏன் பிரசாதங்களை கையில் படாமல் தூக்கியெறிகிறார்கள்? தொட்டு கொடுத்தால் அது கெட்டுப்போகுமா? 7. கல்வியிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்குவதாக பீற்றிக்கொள்ளும் நீங்கள் இதையெல்லாம் ஏன் கண்டுகொள்வதில்லை? இப்போதெல்லாம் நம் நாட்டைப்பற்றி நாங்கள் அதிகம் பேசுவதில்லை. படங்கள் மேலே- துர்கா கோயிலில் தீ மிதிக்க ஆயத்தமாகும் பக்தர்கள். கீழே– ஜகார்த்தாவை அடுத்த தங்கரங்கில் உள்ள துர்கா கோயில் விமானம்.

6 comments:

கூடுதுறை said...

தாங்கள் எழுதி இருப்பது உண்மைதான்...

என்ன செய்வது?

மேலும் எழுதுங்கள்... பின்னுட்ட பாக்ஸில் வேர்டு வெரிபிகேசனை எடுத்துவிடுங்கள். இருந்தால் அதிகம் பின்னுட்டங்கள் வராது..

Anonymous said...

//நம்மூரில் ஏன் பாதையிலேயே மலம் ஜலம் கழிக்கிறார்கள்? புகையிலையை ஏன் துப்பிவைக்கிறார்கள்
3. சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன? நீங்கள் எல்லாம் ஒழுங்காக வரி கட்டுவதில்லையா//

ஜாகர்த்தா நண்பரே,

ஏனென்றால் இங்கு நடப்பது தாடிக்காரனின் கொளகைகளை நிறைவேற்றுவதாக கூறி பம்மாத்து பண்ணும் திராவிட கருப்பு சட்டை வெறியர்களின் ஆட்சி.நாடு இந்த நிலையில் தான் இருக்கும்.

தமிழ் நாடன் said...

உங்கள் வருகைக்கு நன்றி கூடுதுறை நண்பரே!
வேர்டு வெரிபிகேசனை எடுத்து விட்டேன்.

Anonymous said...

கி.பி.12-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழனின் ஆட்சியே தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.

விடுதலை பெற்ற இந்தியாவில் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் உழைக்கும் தலைவர்கள் அதிகாரத்தில் இல்லை.

குறிப்பாக நீண்ட நெடுங்காலமாக தமிழ்நாட்டை தமிழன் ஆளவில்லை. தமிழனுக்கும் இதுபற்றி கவலையில்லை.

தற்போது தமிழன் சன் டி.வி., கலைஞர் தொலைக்காட்சி என்ற போதையில் தள்ளாடுகிறான்.

அறிவகம் said...

அன்பார்ந்த நண்பரே உங்களுடனான அறிமுகத்தில் மிக்க மகிழ்ச்சி.

இந்தோனேசியாவை எங்களுக்கு படம்படித்து காடடும் உங்கள் பணிக்கு பாராட்டுக்கள்.

தமிழகத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கும், மக்களுக்கும் கொஞ்சம் கூட பொறுப்புணர்ச்சியே இல்லை. தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே அப்படி தான் இருக்கிறது. நன்றி.

தமிழ் நாடன் said...

நன்றி அறிவகம் நன்பரே!