எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Sunday 16 November 2008

இதுதான் இந்தியாவின் பெருமையா?

ஒரு சில மாதங்களுக்கு முன் எனது நன்பர் ஒருவரிடமிருந்து “பாகிசுதானிய எழுத்தாளர் ஒருவரின் எழுச்சிமிகு எழுத்துகள்” என்ற தலைப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று வந்தது. உங்களுக்கும் கூட வந்திருக்கலாம். ஆங்கிலத்தில் வந்த அந்த மின்னஞ்சலை என்னால் இயன்றவரை தமிழ்ப்ப்டுத்தியுள்ளேன். முதலில் இதைப்படியுங்கள் பின்னர் விவாதத்திற்கு வரலாம். அந்த மின்னஞ்சல் இப்படி தொடங்குகிறது.............. இரண்டு அம்பானி சகோதரர்கள் இணைந்தால் கராச்சி பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளையும் முழுமையாக வாங்க முடியும். அதற்கு பிறகும் அவர்களிடம் முப்பது பில்லியன் டாலர்கள் மிச்சமிருக்கும். இந்தியாவின் முதல் நான்கு பணக்காரர்கள் சேர்ந்தால் 17 கோடி பாகிஸ்தானியர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் வாங்கி விட முடியும். அதற்கு மேலும் அவர்களிடம் 60 பில்லியன் டாலர்கள் மிச்சமிருக்கும். இந்தியாவின் முதல் நான்கு பணக்காரர்களின் சொத்து மதிப்பு சீனாவின் முதல் நாற்பது பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பை பங்கு வர்த்தக குறீயீட்டு எண் இருபதாயிரத்தை தொட்டதின் விளைவாக முகேசு அம்பானியின் ரிலையன்சு நிறுவன மதிப்பு 100 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. (கராச்சி பங்கு சந்தையில் நிறுவனங்களின் மொத்த மதிப்பே 65 பில்லியன் டாலர்கள்தான்). முகேசு அம்பானி இந்த நிறுவனத்தின் 48 சதவீத பங்குகளை வைத்துள்ளார். சென்ற நவம்பரோடு நீத்தாவிற்கு நாற்ப்பத்தி நான்கு வயது முடிந்தது. அவரின் கணவர் அவருக்கு அளித்த பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா? 60மில்லியன் டாலர் மதிப்புள்ள செட் விமானம். இதில் சொகுசு படுக்கை அறை, குளியல் அறை, மது அருந்தும் இடம், செயற்கைகோள் தொலைக்காட்சி, கம்பியில்லா தொடர்பு, விளையாடும் இடம் என அனைத்து சொர்க்கலோக வசதிகளும் உண்டு. நீத்தா வேறு யாரும் இல்லை இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் முகேசு அம்பானியின் மனைவி. முகேசு அம்பானி தற்போது தனது அந்த்தில்லா என்ற புதிய வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு பில்லியன் டாலர்கள் செலவழித்து கட்டும் இந்த வீடுதான் பூலோகத்திலேயே விலையுயர்ந்த வீடு என்று சொல்லமுடியும். ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு 60 தளங்கள் கொண்ட இந்த வீடு 173 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது. முதல் ஆறு தளங்கள் மகிழுந்துகள் நிறுத்துவதற்கும் ஏழாவது தளம் மகிழுந்துகளின் பராமரிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டாவது தளத்தில் ஒரு சிறிய திரையரங்கமும் உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளமும் அமைக்கபட உள்ளது. அடுத்த இரண்டு தள்ங்கள் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலுள்ள நான்கு தளங்கள் இவரின் குடும்பத்தினருக்காக அட்டகாசமான அரபிக்கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இவைகளுக்கு எல்லாம் மேலே மூன்று எலிகாப்டர் தள்ங்கள் அமைக்க பட உள்ளன. இவர்களின் வீட்டை பராமரிப்பதற்கும் குடும்பத்தினருக்கு சேவை செய்யவும் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். (என்ன கண்ணை கட்டுதா?! மேலே படியுங்க) கடந்த 2004 நான்காம் வருடத்தில் உலகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை கவரக்கூடிய நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்தது. ஆனால் பாகிசுதானோ முதல் 25 இடங்கள் வரை கூட இடம் பெற இயலவில்லை. 192 நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் சபை ஆப்கானிசுதானிலும் ஈராக்கிலும் தேர்தல்கள் நடத்த எத்தனித்த போது அதற்கு உதவ யாரை அழைத்தார்கள் தெரியுமா? இந்திய தேர்தல் ஆணையத்தை! காபூலுக்கு மிக அருகில் இருந்தபோதும் பாகிசுதானை அவர்கள் அழைக்கவில்லையே ஏன்? சற்றே சிந்தித்து பாருங்கள்! 12 சதவீத அமரிக்க விஞ்ஞானிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 38 சதவீத அமரிக்க மருத்துவர்கள் இந்தியர்கள். 36 சதவீத நாசா விஞ்ஞானிகள் இந்தியர்கள். மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களில் 34 சதவீதம் பேர் இந்தியர்கள். மேலும் இபிஎம் ஊழியர்களில் 28 சதவீதம் பேர் இந்தியர்கள். இப்படி இந்த பட்டியல் நீளுகிறது. உங்கள் சிந்தனைக்கு இன்னும் சில தகவல்கள்...... ஆட் மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியா ஒரு இந்தியர். சன் மைக்ரோ சிசுடம்சுவை உருவாக்கப்பட்டதும் வினோத் கோசுலா எனும் இந்தியரால்தான். இன்று 90 சதவீதம் கணணிகளை இயக்கிக்கொண்டிருக்கும் இண்ட்டெல் பிராசசர் செயலியின் தந்தை வினோத் தாம் ஒரு இந்தியர். ஆவ்லெட் பாக்கர்டுவின் ஈ பேச்சு திட்டத்தின் இணை கண்டுபிடிப்பாளர் ராசீவ் குப்தா ஒரு இந்தியர். இப்படியாக பத்தில் நான்கு பங்கு கணணி நிறுவனங்களை இந்தியர்கள் நிறுவகிக்கிறார்கள். கலைத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள்! இந்தி படவுலகம் ஆண்டொன்றுக்கு 800 படங்களை வெளியிடுகிறது. ஆறு இந்திய பெண்கள் இதுவரை உலக அழகி அலலது பிரபஞ்ச அழகிப்பட்டம் வென்றுள்ளனர். ஆசிசு பிரேம்சி- இந்திய விப்ரோ நிறுவனத்தின் தலைவர். இவர்தான் உலகின் மிக பணக்கார இசுலாமிய தொழில் முனைவர் ஆவார். இவர் மும்பையில் பிறந்து பெங்களூருவில் வசிக்கிறார். இப்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 36 க்கும் மேற்ப்பட்ட பில்லியனர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிசுதானில் ஒரு பில்லியனர் கூட இல்லை. அண்மை காலங்களில் செல்வம் சேர்ப்பதில் இந்தியர்களின் அசுர வேகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2002 ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி அவர்கள் தம் பிள்ளைகளுக்கு விட்டுச்சென்ற சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 2.8 பில்லியன் டாலர்கள்தான். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப்பின் இரு அம்பானி சகோதரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 94 பில்லியன் டாலர்கள். கடந்த 2007ல் பங்கு சந்தையின் மதிப்பும் இந்திய ரூபாயின் மதிப்பும் எகிறிய போது முகேசு அம்பானி உலகிலேயே முதல் பணக்காரர் ஆனார். அப்போது அவரின் சொத்து மதிப்பு 63.2 பில்லியன் அமரிக்க டாலர்கள். அமரிக்காவின் பில்கேட்சு 56 பில்லியன் டாலர்கலோடு அப்போது அவரின் பின்னால் நின்றார். இவ்வளவுக்கும் இந்தியருக்கும் பாகிசுதானியர்களுக்கும் அடிப்படையில் அப்படியொன்றும் அதிக வேறுபாடுகள் இல்லை. நாம் ஒரே ஒய் குரோமோசோம் ஆப்ளோ தொகுதியை சேர்ந்தவர்கள்தான். ஒரே மாதிரியான பாரம்பரிய சீன் அடுக்கையும் எம்124 எனும் சீன் குறியீட்டையும் கொண்டவர்கள். ஒரே மாதிரியான் டி.என்.ஏ மூலக்கூறுகளையும் டி.என்.ஏ அடுக்கையும் கொண்டவர்கள். நமது கலாச்சாரம் பாரம்பரியம் உண்வு பழக்க வழக்கம் இவை அனைத்துமே ஒரே மாதிரியானது. அப்படியானால் பாகிசுதானியர்கள் இந்தியர்களிடமிருந்து எங்கே வேறுபடுகிறார்கள்? ”அவர்களது தலைவர்களை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்”. இவ்வாறு அந்த மின்னஞ்சல் முற்றுப்பெற்றது. படிக்க ஆரப்பித்தபோது எனக்கு கூட மிகவும் பெருமையாகத்தான் இருந்தது. இறுதிப்பகுதிக்கு வந்தபோது எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. நாம் தேர்ந்தெடுக்கிற அரசியல் வாதிகளின் லட்சணம் நமக்குத்தான் தெரியுமே. பாரளுமன்ற கூட்டம் நடக்கிற லட்சணத்தை தூர்தர்சனில் பார்த்தால் அனைவருக்கும் புரியும். இவ்வளவும் தெரிந்த பாகிசுதானிய எழுத்தாளருக்கு நம் அரசியல்வாதிகளின் சுயரூபம் தெரியாதது வியப்புதான். இதைவிட பல முக்கிய காரணங்களை அவரால் வெளிப்படுத்தியிருக்க முடியும். அனால் நிதர்சனத்தை வெளிப்படையாக காட்டமுடியாத வழமையான இயலாமை ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஒரு கோர்வைக்காகக் கூட அவர் அவ்வாறு எழுதி இருக்ககூடும். சரி எழுதிய அவரையும் விட்டுவிடுவோம். அரசியல்வாதிகளையும் விட்டுவிடுவோம். இந்தியர்கள் என்ற முறையில் நாம் முன்னெடுத்து செல்லக்கூடிய அளவிற்கு இவைகள் உண்மையிலெயே நமக்கு பெருமையா? இந்த கட்டுரையில் உள்ள இந்தியர்களின் அறிவுசார் ஆளுமை குறித்த விடயங்கள் உண்மையிலேயே ஏற்புடையவைதான். இதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அனால் மற்றவை? குறிப்பாக பணக்காரர்களான இந்த அம்பானி சகோதர்கள் குறித்த கருத்துகள் நமது பெருமையின் சின்னமா? இவர்களின் பணக்கார டாம்பீகங்கள் நம் நாட்டுக்கு உண்மையிலேயே பெருமையா? ஏன் என்றால் இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள கையாண்ட மோசமான வழிமுறைகளை ஒரு குழந்தை கூட அறியும். மேலும் தொழிலில் இவர்கள் காட்டும் ஒழுக்கத்தையும் நாம் அறிவோம். இவர்களின் கோரப்பற்களில் சிக்குண்டு அழிந்த சிறு வணிகர்கள் ஏராளம். சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது. அது மேற்படி கட்டுரையில் வந்த சொகுசு விமானம் பற்றிய செய்தி. அதாவது இந்த விமானத்தை அரசு பறிமுதல் செய்து விட்டதாக. காரணம் இந்த விமானத்தை இறக்குமதி செய்தபோது இந்த நிறுவனம் செய்த ஏமாற்றுவேலை. என்ன அது? தனது மனைவின் அந்தப்புறத்தின் தனி உபயோகத்திற்காக வாங்கிய இந்த விமானததை பொது உபயோகத்திற்காக வாங்கியதாக பொய் சொல்லி வரியேய்ப்பு செய்துவிட்டார் முகேசு. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சுபவரா இவர். சரி சரி வரிக்கட்டுகிறோம் என்று சொல்லி எழுதித் தந்துவிட்டு பறந்துவிட்டார் அதே விமானத்தில். வரி ஏய்ப்பு செய்வது என்பது இவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை. முன்பு கைப்பேசி நிறுவனத்தின் மூலமாக பல ஆயிரம் கோடி வரியை ஏப்பம் விட்டவர்கள். பிரச்சினை வந்தால் சில கோடிகளை தூக்கிப் போட்டுவிட்டு அலட்டிகொள்ளாமல் போய்விடுவார்கள். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். இவர்கள் சகத்தினை அழித்து ஒருவன் வாயில் போட்டுகொண்டவர்கள். இவர்கள் நமது அவமானச்சின்னங்கள் !

14 comments:

Shabeer said...

Our Government is making the riches more rich (by not taking severe action against their frauds like income tax cheatings)and making the poor more poor (by giving free tv etc.,) but not an exployment opportunity etc.,

Senthil said...

me the firstu???

informative post

புருனோ Bruno said...

//”அவர்களது தலைவர்களை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்”. //

அவர்களே என்பது அம்பானி சகோதரர்களைத்தானே குறிக்கிறது :) :) :)

நீங்கள் ஏன் சார் டென்ஷன் ஆகி விட்டீங்க :) :) :)

சிவகுமார் சுப்புராமன் said...

யானை நடக்கும்போது அதன் காலடியில் எததனை உயிர்கள் பலியாகிறது என்று அந்த யானைக்கு எப்படி தெரியும். ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது இவர்களின் கையில்தான் உள்ளது. சிறுவணிகர்களை காப்பாற்ற அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆனால் அவர்களுக்குத்தான் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலேயே ஐந்து ஆண்டுகாலம் முடிந்துவிடுகிறதே.

manjoorraja said...

நல்ல மொழிப்பெயர்ப்பு
உங்கள் கருத்தும் நல்ல கருத்து.

இந்த பதிவை பலரும் படிக்கும் விதமாக முத்தமிழ் கூகிள் குழுமத்தில் மீள் பதிவு செய்கிறேன். நன்றி.

http://groups.google.com/group/muththamiz

Anonymous said...

ROMMA NALLA SONNIGA

MK said...

சிந்திக்க வேண்டிய விஷயம் தான்..!

வெத்து வேட்டு said...

அண்ணே வயத்தெரிச்சலா?

Anonymous said...

I guess the writer collected a lot of facts thru television / internet but he didn't he know how to conclude the article!

We succeed because of our politicians?!? that's so funny! We could've become #1 in the world, if not for these corrupt politicians!

Anonymous said...

இரவு-பகல், நன்மை-தீமை, உண்மை-பொய் என எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கம்.

அது போல் தான் இங்கும். யாராலும் எதுவும் செய்யவோ, மாற்றாவோ முடியாது.

நல்லவற்றைப் பார்த்து ஆனந்தமும்.
அல்லாததைப் பார்த்து ஆதங்கமும் படவேண்டியதுதான்.

தமிழ் நாடன் said...

நன்றி திரு சபீர்.

அப்படியா நன்றி ! திரு செந்தில்!

நல்லா கேட்டீங்க திரு புருனோ! அப்படியும் சிந்திக்கலாமோ! நன்றி!

தமிழ் நாடன் said...

நன்றி திரு சிவகுமார்! யானை-அது ஐந்தறிவு உயிர். மனிதன் - ஆறறிவு உயிர்.இருந்தும் என்ன பயன் நன்பரே!

தமிழ் நாடன் said...

மிக்க நன்றி திரு சுந்தரராசன் - மஞ்சூர் ராசா! நானும் முத்தமிழ் குழுமத்தில் இணைய முயற்ச்சிக்கிறேன்.

தமிழ் நாடன் said...

திரு எம்.கே மற்றும் எல்லா அனானிகளுக்கும் நன்றி!

இந்த பீடைகளை கண்டு நமக்கென்ன வயிற்றெரிச்ச்சல் ! திரு வெத்துவேட்டு!