எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Friday 13 November 2009

இசைக்கு உண்டா எல்லைக்கோடு?

கல்லூரியில் படிக்கும்போது என்று நினைக்கிறேன். ஒரு விடுமுறை நாளில் என் நண்பனை பார்க்க சென்னையில் இருந்து பெரம்பலூர் சென்றேன். அப்பொழுதெல்லாம் பாடல்கள் கேட்பது புத்தகங்கள் படிப்பது இதெல்லாம் மற்றவர்கள் வீட்டில்தான். அப்போது நமக்கு அந்த அளவுக்கு வசதி வாய்ப்பெல்லாம் இல்லை. நண்பன் சற்று வசதியான வீட்டில் பிறந்தவன். அதனால் அவனுக்கென்று தனியாக டேப் ரெகார்டர் எல்லாம் வைத்திருப்பான. ஆனால் ஒரெ ஒரு பிரச்சினை. நண்பன் கான்வெண்ட்டில் படித்தவன். அதனால் எப்போதும் மேற்கத்திய இசை தொகுப்புகள்தான் அவனிடம் அதிகம் இருக்கும். அதனால வேறு வழியின்றி நானும் அதையே கேட்பேன். அவற்றில் எனக்குத் தெரிந்த ஒரே இசைத்தொகுப்பு மைக்கேல் ஜாக்சனுடையதுதான். நண்பனும் ஜாக்சன் பாடல்களையே அதிகம் கேட்பான் (எல்லாம் ஒரு மாயை). ஆனால் வார்த்தைகள் புரியாததால் எல்லாம் எனக்கு கூச்சல் மாதிரியே தெரியும். பல நேரங்களில் ஜாக்சனின் தாளகதி நம்மை ஆடவைக்கும் ஆனால் வார்த்தைகள் புரியாது. ஒரு நாள் நண்பன் அவன் தந்தை வாங்கி வைத்திருந்த ஆங்கில இசைத்தொகுப்பு ஒன்றை ஓட விட்டான். அந்த பாடல்கள் நம்முடைய பழைய திரைப்பட பாடல்களில் மேற்கத்திய இசை சார்ந்த பாடல்கள் போலிருந்தன். என்னவோ தெரியவில்லை அந்த தொகுப்பில் இருந்த அத்தனை பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதற்கு முக்கிய காரணம் அவற்றின் வார்த்தைகள் எனக்கு ஓரளவுக்கு புரிகிற மாதிரி இருந்ததுதான். அந்த பாடல்களை பாடியிருந்தவருடைய குரலும் மிகவும் வசீகரமாகவும் அதே சமயத்தில் எளிமையாகவும் இருந்தது. நம்ம இளையராசாவின் தென்பாண்டிச் சீமை பாடலைப்போல. அதன் பிறகு எனக்கு அந்த பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு வரவில்லை. வாழ்க்கையின் ஓட்டம் அவற்றையெல்லாம் தேடிப்போய் கேட்கும் அளவிற்கு நமக்கு அவகாசம் தரவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராசா இசையமைத்த மைக்கேல் மதன காமராஜன் படத்தின் பாடலகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் வரும் ஒரு பாட்டிற்கு பின்னனி இசையாக ஒரு மேற்கத்திய இசைக்கோவையை இசைஞானி பயன் படுத்தி இருப்பார். ரம்பம்பம் பாடல் என்று நினைக்கிறேன். அதைக் கேட்டவுடன் இதை நாம் எங்கோ கேட்டிருக்கிறோமே என்று எனக்கு பொறி தட்டியது. மீண்டும் ஒருமுறை கேட்டபோது அது நண்பன் வீட்டில் கேட்ட எனக்குப்பிடித்த அந்த இசைத்தொகுப்பின் பாடலில் வரும் பின்னிசையை ஒத்திருப்பதை உணர முடிந்தது. மீண்டும் அந்த இசை தொகுப்பை கேட்கவேண்டும் ஆவல் மிகுந்தது. நண்பனை அழைத்து அந்த தொகுப்பு அவனிடம் இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன். அதெல்லாம் பெருசுங்க கேக்கிறது என்கிட்ட இப்ப இல்லை என்று சொல்லிவிட்டான். அது முதல் இன்று வரை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அந்த இசைத்தொகுப்பை தேடுவேன். பாடியவர் பெயர் நாடு இசைத்தொகுப்பின் பெயர் இது எதுவும் தெரியாததால் அந்த பாடல்கள் எனக்குக் கிடைக்காமலேயே இருந்தது. அமெரிக்க கருப்பின நண்பர் ஒருவரை சந்திக்கும் போது கூட இது பற்றிக்கேட்டேன். ஹம் பண்ணியாவது காட்டச்சொன்னார். நானும் ஆர்வமாய் ஹம் பண்ணிக் காட்டினேன். ஆனால் மூன்றாம் பிறை கமல் போலாகிவிட்டது என் நிலைமை. இந்நிலையில் நேற்று ஓய்வான நேரத்தில் மீண்டும் இளையாராசாவின் அந்த பாடலைக் கேட்க நேர்ந்தது. இந்த முறை எப்படியாவது கண்டுபிடித்தே தீருவது என்ற் முடிவில் கூகிளாண்டவரின் உதவியை நாடினேன். என் நினைவில் நின்ற “ஏஞ்சலீனா” ஒரே ஒரு வார்த்தையை வைத்து அதைப்பாடியவரின் பெயரைக்கண்டு பிடித்தேன். ஆனால் பாடல்களை தரவிறக்க முடியவில்லை. அதன் பிறகு பாடகரின் பெயரை வைத்து யூடியூப்பில் மேய்ந்தபோது ஒரு வழியாக எல்லாப் பாடல்களையும் கண்டு பிடித்து விட்டேன் - பதினைந்து வருடங்கள் கழித்து. விஞ்ஞான வளர்ச்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் கண்டுபிடித்தப் சில பாடல்களை கீழே உங்களுக்கும் தந்துள்ளேன் கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். அதற்கு முன் அந்த பாடல்களைப் படைத்த அந்த படைப்பாளியை குறித்து சில வார்த்தைகள்……. இந்தப் பாடல்களைப்பாடியவர் ஹாரி பிளபாண்டே என்ற அமெரிக்க கறுப்பின பாடகர். இவர் ஒரு பாடகர் மட்டுமில்லாமல் நடிகர் மற்றும் சமூக ஆர்வலர். அமெரிக்காவில் நிற வெறிக்கு எதிராக குரல் கொடுத்த கலைஞர்களில் முக்கியமானவர். இன்றும் அமெரிக்காவின் ஆதிக்க வெறியினை எதிர்ப்பவர். ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் ஈராக படையெடுப்பை மும்முரமாக எதிர்த்தவர். இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவிரவாதிகளுக்கும் புஷ்ஷுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று வாதிட்டவர். 82 வயதாகும் இவர் இப்போது இசைப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவரது பாடலகள் பெரும்பாலும் நாட்டுப்புற இசை வகையை சார்ந்தவை. உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் புழங்கும் பாடல்களை அடிப்படையாக கொண்டவை. (இப்போது புரிந்திருக்குமே அவரது பாடலகள் ஏன் எனக்கு பிடித்தது என்று) இந்த பாடல்களை கேட்கும்போது பல பழைய தமிழ் திரைப்பட பாடல்களும் சந்திரபாபு பாடல்களும் நினைவில் வந்து செல்லும். பதிவின் நீளம் கருதி இதோடு முடித்துக்கொள்கிறேன். .

18 comments:

vasu balaji said...

வாவ்.அருமை. ஒரு பாடல் தான் கேட்க முடிந்தது. இரவு வந்து மொத்த பாடலும் கேட்கிறேன். அருமையான அறிமுகத்துக்கு நன்றி.

தமிழ் நாடன் said...

நன்றி வானம்பாடி அண்ணே! மறக்காம நம்ம கடைக்கு முதல் ஆளா வந்துட்டீங்க!

மதிபாலா said...

அருமையான அறிமுகம்.

பாடல்களைக் கேட்க தற்சமயம் நேரமில்லை...மற்றும் வாய்ப்பில்லை..

கேட்டுவிட்டுச்சொல்கிறேன்...

:))

நன்றி.

மதிபாலா said...

நன்றி வானம்பாடி அண்ணே! மறக்காம நம்ம கடைக்கு முதல் ஆளா வந்துட்டீங்க!/

நான் ரெண்டாவது ஆள்...!!!

தமிழ் நாடன் said...

நன்றிங்க மதிபாலா! நேரம் வாய்க்கும்போது கேட்டுவிட்டு சொல்லுங்க!

Menaga Sathia said...

நல்ல அறிமுகம்!! பாடல்கள் பிறிதொரு நேரம் கேட்டு சொல்கிறேன் சகோ..

இன்றைய கவிதை said...

வித்தியாசமான பதிவு!
நல்லதொரு அறிமுகம்...
பாடல்களைக் கேட்டுவிட்டு பதிக்கிறேன்...!

-கேயார்

ஹேமா said...

உங்கள் விடாமுயற்சிக்கும் இசை ஆர்வத்துக்கும் பாராட்டுக்கள்.
அருமையான தேடல்.ஒன்றிலிருந்து இன்னொன்றின் உருவாக்கம்.

M.Thevesh said...

உங்கள் விடாமுயற்சிக்கு என் பாராட்டு
கள்.உங்கள் முயற்சியால் அருமையா
ன தொகுப்பு எங்களுக்குக்கிடைத்துள்
ளன. மிக்க நன்றிகள்.

தமிழ் நாடன் said...

மிக்க நன்றி சகோதரி மேனகாசத்யா!

நேரம் கிடைக்கும் போது கேளுங்கள்.

தமிழ் நாடன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு.கேயார்!

தமிழ் நாடன் said...

வருகைக்கு மிக்க நன்றி நசரெயன்!

தமிழ் நாடன் said...

வாங்க ஹேமா!

//ஒன்றிலிருந்து இன்னொன்றின் உருவாக்கம் //

உங்கள் பாணியிலேயே வாழ்த்திட்டீங்க மிக்க நன்றி!

தமிழ் நாடன் said...

வாங்க தவேஷ்! முதல்முறையா நம்ம கடைக்கு வந்திருக்கீங்க! உங்கள் கருத்துக்கும் பாரட்டுக்கும் நன்றி!

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

யாசவி said...

dear tamilnadan,

how r u?

Last wk I spent in jakarta.

tasted Kado-kado taste is okey :) The dish choose because of u.

Going to be in jakarta for few weeks

contact me at contact.yasavi@gmail.com

goma said...

இந்த மாதிரி தேடுதலில் நமக்குக் கிடைப்பவை...’நம் ஊர் இசையமைப்பாளர்கள் எங்கிருந்து எதைச் சுட்டார்கள் என்பதும் தெரியவரும் இல்லையா?’
அருமையான இசைத் தேடல்

goma said...

அதிகாலை 4மணிக்கு பாடல் கேட்க இயலாது விடிந்ததும் கேட்கிறேன்