எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Saturday 7 February 2009

அபாயம் ! எச்சரிக்கை !

மானமிகு தமிழக வாக்காளர் பெருமக்களே ! விழிப்பாக இருங்கள் ! உங்களை ஏமாற்றி வாக்குப்பிச்சை கேட்க ஒரு ஓட்டுப்பொறுக்கி கூட்டம் தயாராகிறது. எதற்கும் உங்கள் பிய்ந்த பாதணிகளையும் முற்றத்தில் சிதறிக்கிடக்கும் எருமைச்சாணியையும் சேகரித்து வையுங்கள் இவைகள் உங்களுக்கு உதவக்கூடும். கடந்த சில நாட்களாக காங்கிரசு சனாதினிகள் இலங்கை தமிழர்களைப் பற்றி (நன்கு கவனிக்கவும் ஈழத்தமிழர்களைப் பற்றியல்ல) தங்கள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். கொழும்பில் ராசபக்சேவுடன் விருந்துண்டு மகிழ்ந்திருந்த போது வாயை இறுக்கி மூடிக்கொண்டிருந்த பிரணாப் இப்போது சமாதான வழியை போதிக்கிறார். சிங்கள அரசாங்கமும் புலிகளும் ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் தீர்வு காண வேண்டுமாம். இந்த கருத்தை கொழும்புவில் இருந்தபோது சொல்ல அவருக்கு தைரியம் இருந்திருக்காது. அப்படி சொல்லியிருந்தால் சிங்களவன் காலில் கிடப்பதை கழட்டியிருப்பான். இனப்படுகொலைக்கு ஆயுதமும் கொடுத்துவிட்டு ரா மூலம் சகல சூழ்ச்சி திட்டங்களையும் வகுத்து கொடுத்துவிட்டு திடீரென்று அவற்றையெல்லாம் கைவிடச்சொல்லிக் கேட்க அவரால் எப்படி முடியும்? சாத்தான் எப்படி வேதம் ஓத முடியும்? இப்பொது இவர் பசப்புவது கூட ” நீ அடிக்கிறமாதிரி அடி நான் அழுவுவது மாதிரி அழுவுரேன்” கதைதான். தமிழக மக்கள் தொடர்ச்சியாக போராடிய போதும் தியாகி முத்துக்குமார் தீக்குளித்தபோதும் வாயை இறுக்கமாய் மூடிக்கொண்டிருந்த தமிழக காங்கிரசு பெருச்சாளிகள் கூட இப்போது மெதுவாக வாய் திறந்திருக்கின்றன. முட்டை முகத்தழகர் கூட ஒரு கையால் ஓசை எழுப்ப முடியுமா என்று தத்துவம் எல்லாம் உதிர்க்கிறார். மூப்பனாரின் பிள்ளை கூட தன் வாயில் எப்போது குதப்பிக்கொண்டிருக்கும் கொழுக்கட்டையை ஒரு வழியாக துப்பிவிட்டு சிங்களாவனால் என்றோ கிழித்து எறியப்பட்ட ராசீவ்-செயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரியிருக்கிறார். 18 வருடமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு திடீரென்று இந்த ஒப்பந்தத்தைப்பற்றி ஞானோதயம் வந்துவிட்டது காங்கிரசுக்காரர்களுக்கு. இப்படி இவர்களின் திடீர் எழுச்சியையும் பசப்பல் வார்த்தைகளையும் கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவர்களின் இந்த நாடகத்துக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தமிழக மக்கள் நன்கு சிந்திக்கவேண்டும். இன்று உலகெங்கும் உள்ள தமிழ் உடன்பிறப்புக்கள் சிங்களவனின் இன துவேசத்தை சர்வதேச சமூகத்தின் முன் வெளிச்சமிட்டு காட்டியதின் விளைவாக இன்று ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறது. அமரிக்காவும் இங்கிலாந்தும் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இதில் தலையிட ஆரம்பித்துள்ளன. நார்வேயின் எரிக் சோலங்கி நேரிலேயே வந்து இந்தியா இந்த விடயத்தில் வாய் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு மேலும் வாய்திறக்காவிட்டால் எங்கே நம்முடைய கோரமான சுயரூபம் வெளிச்சம் காட்டப்பட்டுவிடுமோ என்று பயந்துதான் இன்று ஆளும் காங்கிரசு அரசின் பெருச்சாளிகள் வாயைத்திறந்துள்ளன. கொழும்பு சென்று திரும்பிய பிரணாப் ஒரு இடத்தில் கூட போர் நிறுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. தாம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியதாகவோ சிங்கள அரசின் அதற்கான நிலைப்பற்றியோ ஒரு இடத்தில் கூட வாய்த்திறக்கவில்லை. ஐநா சபையின் எச்சரிக்கைக்கு பிறகுதான் சிங்கள அரசு 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் முட்டை முகத்தழகர் தங்கள் கோரிக்கையினால்தான் இந்த அறிவிப்பு வெளியானதாக ஒரு பச்சை பொய்யை புளுகிறார். புலிகள் இந்த போர் நிறுத்தததிற்கு சரியானபடி ஒத்துழைக்கவில்லை என்று புகார் வேறு கூறுகிறார். ஆனால் இதே போர் நிறுத்தத்தின் போது உடையார் பட்டு மருத்துவமனையை தாக்கி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த சிங்கள அரசின் தவறை கண்டிக்க இவருக்கு திராணியில்லை. இல்லை இந்த பாதக செயலுக்கான திட்டத்தையும் காங்கிரசு அரசுதான் திட்டமிட்டு கொடுத்ததா என்று சிதம்பரம் விளக்கவேண்டும். சிங்கள இனவெறி அரசு புலிகளுக்கு எதிரானப் போர் என்ற பொய்யைச் சொல்லி ஒரு அப்பட்டமான இன அழிப்பை செய்வதை கண்டும் காணமல் நடித்தவர்கள் காங்கிரசுகாரர்கள். நம் தமிழினம் சீரழிவதை தினம் தினம் கண்டு ரசித்துக்கொண்டிருந்தார் இவர்களின் தலைவி சோனியா. ஆனால் நம் மக்களுக்காக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார். போரில் காயமடைந்த மக்களுக்கான நிவாரணப்பொருட்களைக் கூட அனுமதிக்க மனமில்லாத ஒரு அரசின் தலைவி இன்று அவர்களை பற்றி விசனப்படுகிறாராம். என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கள். இதில் சோனிகாந்தியைவிடவும் அதிகம் கண்டிக்கவேண்டியவர்கள் நம் தமிழின தலைவர் என்று நம்மை ஏமாற்றும் கோஷ்டியனரும் தமிழக காங்கிரஸ் கோமாளிகளும்தான். ராசிவ் காந்தியை கொன்றவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்று உறுதியாக சோனியா நம்பினால் ஏன் நளினியையும் ரங்கநாத்தையும் பார்க்க பிரயத்தனப்படவேண்டும். சோனியாவின் குடும்பம் ராசிவ் கொலையை மறந்தாலும் நம் தமிழக காங்கிரஸ் ஓட்டுப்பொறிக்கிகள் அதை மறக்கவிடமாட்டார்கள். இவர்களுக்கு ஓட்டு வாங்க யாரையாவது காட்டி அனுதாபம் பெறவேண்டும். இவர்கள் சோனியா குடும்பத்தை பிடித்து இன்னும் தொங்கிக்கொண்டிக்கும் காரணமும் அதுதான். இவர்களுக்கு தம் கொள்கைகளையோ சாதனைகளையோ சொல்லி ஓட்டு கேட்க என்றுமே திராணி இருந்ததில்லை. இவர்களுக்கு தேர்தலை சந்திக்க ஏதாவது ஒரு கவர்ச்சி முகம் வேண்டும். இப்போது இருக்கும் காங்கிரஸ் தலைவர்களின் முகத்தைக்காட்டி ஓட்டுக் கேட்டால் ஒரு நாய் கூட சீண்டாது. இல்லையென்றால் நூறு வருட பாரம்பரியம் உள்ளது என்று பறைசாற்றிக்கொள்ளும் ஒரு கட்சி ஒரு வெளிநாட்டவரிடம் தலைமைப்பதவியை ஓப்படைத்துவிட்டு இப்படி மானம்கெட்டு கிடக்குமா? சோனியாவையும் ராசீவையும் இவர்கள் இந்த தாங்கு தாங்குவது அந்த குடும்பத்தின் மீது உள்ள பாசத்தினால் அல்ல.எல்லாம் இவர்களின் சுயலாபத்துக்காகத்தான். பிரியங்காவை இழுக்க என்னென்னவோ செய்தார்கள்.அந்தம்மா கல்யாணம் காட்சி குழந்தை குட்டி என்று செட்டிலாகிவிட்டது. இப்போது ராகுலை இழுக்கப்பார்க்கிரார்கள்.இன்று இவர்கள் புலிகளை எதிர்ப்பது ஏதோ ராசிவ் மீதி கொண்ட காதலலால் அல்ல. அதன் மூலமாக சோனியாவின் அருட்பார்வையை தம்மேல் இழுத்து அதன் மூலமாக பதவி சுகத்தை அடையத்தான். முத்துக்குமாரின் தியாகத்துக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி இவர்களை மிரள வைத்துள்ளது. அதனால்தான் இந்த நாடகங்களை இவர்கள் அரங்கேற்றுகிறார்கள். ஈழத்தில் நம் சொந்தங்களுக்கு இறுதிக்கல்லரை கட்டிவிட்டு இன்று இவர்கள் கோரும் போர் நிறுத்தத்தால் என்ன நன்மை நடந்துவிடப்பொகிறது. அருமை மானமிகு தமிழக வாக்காள பெருங்குடி மக்களே! விரட்டி அடியுங்கள் இந்த துரோகி கூட்டத்தை!

5 comments:

அக்னி பார்வை said...

இங்கு காங்கிரஸை எதிர்கிறேன் என்று பாஜாகாவை ஆதரிக்கவும் கூடாது... 49 ஓ தான்

Anonymous said...

புலியும் ராணுவமும் மொத்தமா அழிந்தால் இலங்கைக்கு வாழ்வு பிறக்கும்
நன்றே நடக்க வேண்டும் அதுவும் இன்றே நடக்க வேண்டும்.

அசோசியேட் said...

நண்பரே! உங்களுடய பல பதிவுகளிலும் அனல் ! சிறந்த திறனாய்வு! மக்கள் திருந்த வேண்டும்.

உங்கள் பதிவுக்கும் கருத்துக்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

Anonymous said...

Nalla ezhuthu....

Parattukal...

SUBBU said...

அருமை