எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Monday 27 April 2009

இறந்த தாயிடம் பாலருந்திய குழந்தை – ஈழத்தின் அவலம்!

ஈழத்தில் நடப்பவைகளை தினமும் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்னால் ஒரு வேளை உணவு கூட அருந்துவது கடினமாய் இருக்கிறது என்றார் கவிஞர் தாமரை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நிம்மதியாக உண்பவன் உண்மையான தமிழனாக இருக்கமுடியாது என்றார் அவர். உண்மைதான். ஈழத்தில் நம் சொந்தங்கள் படும் இன்னல்களை பார்க்கும்போது நம்மால் இயல்பாக செயல்படவே முடியவில்லை. எந்நேரம் எந்த செய்தி வருமோ என்று மனம் கலங்கி நிற்கிறது. ஈழத்திலிருந்து தமிழர் புணர்வாழ்வு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ள செய்தியை பாருங்கள். படிப்போரின் இதயத்தை உருக்கும் காட்சிகளில் இது சிறு துளிதான்! சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் தாய் இறந்து கிடப்பதை அறியாத குழந்தை அவரின் பால் குடித்துக்கொண்டிருக்கும் பரிதாபநிலையை என் கண்ணால் கண்டேன் என தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர் தெய்வேந்திரன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களில் காயமடையும் மக்களை மருத்துவமனையில் பராமரிப்பில் ஈடுபடும் இவர் தெரிவிக்கையில் :
நாளாந்தம் எறிகணைத்தாக்குதல்களில் காயமடையும் மக்களை வாகனங்களில் இருந்து இறக்குவது முதற்கொண்டு பராமரிப்பது போன்ற பணிகளிலும் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்வது போன்ற பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன். நான் பணிசெய்த நாட்களில் சிறிலங்கா அரசுப்படைகளின் கொடூரமான செயல்களை நேரி பார்த்து பேரதிர்ச்சியடைந்துவிட்டேன். என் பணிநாளில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க தாய், கணவன், பிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். உடனே நாங்கள் அவர்களை இறக்கியவுடன் மருத்துவர்களால் அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இருந்த போதிலும் அந்த தாய்க்கு பலத்த காயமாதலால் இரத்தம் போய்க்கொண்டிருந்தது. அந்நேரத்தில் குழந்தை அழவே குழந்தைக்கு அவர் பாலூட்டினார். பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே அத்தாய் இறந்துவிட்டார். இச்சம்பவம் இவரின் கணவருக்குத்தெரியாது. ஆனால் குழந்தை தொடர்ந்தும் பால் குடித்துக்கொண்டிருந்தது. இந்த பரிதாப சம்பவம் தன் மனதை உருகச்செய்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தான் உயிர்போகும் நேரத்திலும் தன் சேயின் பசிபோக்க போராடும் நம் சகோதரியை பாருங்கள் தமிழக மக்களே! இவர்களின் இந்த நிலைக்கு காரணம் நாம் கொடுத்த வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்கள்தான் மக்களே! ஐயகோ! நாம் வாழும் சமகாலத்திலா இந்த கொடுமை நடக்கவேண்டும்! நம் கண்ணெதிரே நடக்கும் இந்த கொடுமையை தடுத்து நிறுத்த கையாலாகமல் நாம் வாழும் வாழ்க்கை தேவையா? எம்மக்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பேய் மனது படைத்த அரசியல்வாதிகளே! உங்களை காலம் மன்னிக்காது! இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே தீரவேண்டும். -------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------- உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும்.

No comments: